விண்கலத்தில் வந்தாலும் கடைசியில் உதவியது பாராசூட் தான்... 1,600 டிகிரி செல்சியஸில் இரும்பு கூட உருகி விடுமே!!
ஆட்டோமொபைல் (Automobile) துறை உள்பட பல துறைகளில் புதிய கண்டுப்பிடிப்புகளுக்கும், ஆய்வுகளுக்கும் விண்வெளி பயணங்கள் அவசியமாகின்றன. அதுமட்டுமின்றி, ஆட்டோமொபைல் துறையின் அடுத்தக்கட்ட பரிணாம வளர்ச்சியாகவே விண்வெளி பயணங்கள் பார்க்கப்படுகின்றன. இதனால், உலகின் பெரும்பாலான நாடுகள் தனித்தோ அல்லது மற்ற நாடுகள் உடன் இணைந்தோ விண்வெளி ஆராய்ச்சிகளை அவ்வப்போது மேற்கொள்கின்றன.
சமீப காலமாக தனியார் நிறுவனங்களும் விண்வெளி ஆராய்ச்சிகளில் பல ஆயிரம் கோடி ரூபாய்களை முதலீடு செய்து நேரடியாக ஈடுப்பட ஆரம்பித்துள்ளன. விண்வெளி ஆராய்ச்சி பயணங்களில் நமது இந்தியா பல தசாப்தங்களாக மற்ற நாடுகளுக்கு முன் உதாரணமாக விளங்கி வருகிறது. உலகின் மிக பெரும் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா (NASA)-வுக்கு இந்தியாவின் இஸ்ரோ (ISRO)-இல் இருந்து பல விஞ்ஞானிகள் சென்றுள்ளனர்.

அந்த வகையில் சமீபத்தில், மற்ற உலக நாடுகளின் விஞ்ஞானிகள் உடன் சேர்ந்து நமது இந்தியாவை சேர்ந்த சுபான்சூ சுக்லா (Shubhanshu Shukla) பூமிக்கு வெளியே அமைக்கப்பட்டுள்ள சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு சென்றது உலகளவில் பேசும் பொருளாக மாறியது. மேலும், இது இந்தியாவை பெருமைப்படுத்தக் கூடியதாக அமைந்தது.
இந்த நிலையில், சர்வதேச விமான நிலையத்தில் 18 நாட்கள் ஆராய்ச்சியை முடித்துக் கொண்டு திட்டமிட்டப்படி இந்திய விண்வெளி வீரர் சுபான்சூ சுக்லா பூமியை வந்தடைந்துள்ளார். சுபான்சூ சுக்லா உடன் சேர்ந்து விண்வெளிக்கு சென்ற அமெரிக்க நாசா விஞ்ஞானியான பெக்கி விட்சன், போலாந்தின் ஸ்லாவோகி உஸ்னான்ஸ்கி, ஹங்கேரியின் திபோர் கபு உள்ளிட்ட 4 விண்வெளி வீரர்கள் டிராகன் (Dragon) விண்கலத்தில் புவியை வந்தடைந்துள்ளனர்.

இவர்களது டிராகன் விண்கலம் திட்டமிட்டப்படி, அமெரிக்காவின் கலிபோர்னியா (California) கடலில் பத்திரமாக தரை இறங்கியது. இந்த நிலையில், டிராகன் விண்கலத்தின் பூமியை நோக்கிய இந்த பயணம் எவ்வாறு இருந்தது என்பது குறித்த விபரங்கள் கிடைக்க பெற்றுள்ளன. பொதுவாகவே, பூமியில் இருந்து விண்வெளிக்கு செல்வதை காட்டிலும், விண்வெளியில் இருந்து பூமிக்கு மீண்டும் பத்திரமாக வருவதுதான் மிகவும் சவாலான மற்றும் ஆபத்தான காரியம் என்று பல விஞ்ஞானிகள் கூற கேள்விப்பட்டு இருப்பீர்கள்.
சுபான்சூ சுக்லா அங்கம் வகித்த ஆக்ஸியம்-4 (Axiom-4) திட்டத்தின்படி டிராகன் விண்கலத்தில் சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து பூமியின் கடலை தொடுவதற்கு சுமார் 22.5 மணிநேரங்கள் தேவைப்பட்டு உள்ளது. அதாவது, பூமியை நோக்கிய இவர்களது பயணம் ஜூலை 14ஆம் தேதி அன்றே துவங்கப்பட்டுவிட்டது. 120கிமீ உயரத்தில் பூமியின் வளிமண்டலத்திற்குள் மணிக்கு சுமார் 27 ஆயிரம் கிமீ வேகத்தில் டிராகன் விண்கலம் நுழைந்தது.

அந்த சமயத்தில் சுமார் 1,600 டிகிரி செல்சியஸ் வெப்பத்தை விண்கலம் எதிர்கொண்டது. ஆனால், இதனை தாங்கிக் கொள்ளும் வகையில் விண்கலம் வடிவமைக்கப்பட்டு இருந்ததால், உள்ளே இருந்த வீரர்கள் யாருக்கும் எந்த பிரச்சனையும் ஏற்படவில்லை. பூமியின் சூழலுக்குள் நுழைந்த பின், 27,000/மணிநேரம் என்கிற வேகம் படிப்படியாக குறைத்துக் கொள்ளப்பட்டது. தரையில் இருந்து 5.5கிமீ உயரத்தில் வந்த சமயத்தில் விண்கலம் பாராசூட்டின் உதவியுடன் கீழறங்க ஆரம்பித்தது.
இதனால், ஒரு வினாடிக்கு 156 மீட்டர் என்கிற வேகத்தில் இருந்து விண்கலத்தின் வேகம் 53 மீட்டர்/ வினாடி என்கிற வேகத்துக்கு குறைந்தது. பின்னர், கடலின் நீர்பரப்பு 1.8கிமீ தூரத்தில் இருந்த சமயத்தில் பாராசூட்டின் முக்கியமான பகுதி விரிய துவங்கியது. இதனால், விண்கலத்தின் வேகம் இன்னும் குறைந்து வினாடிக்கு 7 மீட்டர் என்கிற அளவில் கீழிறங்க ஆரம்பித்தது. பின்னர், மணிக்கு 27கிமீ வேகத்தில் விண்கலம் பசுபிக் பெருங்கடங்கலில் திட்டமிட்டப்படி விழுந்தது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: பல ஆயிரம் கிமீ உயரத்திற்கு பூமியை விட்டு வெளியே சென்று மீண்டும் திரும்புவது என்பது உண்மையில் கிட்டத்தட்ட மறுபிறவி போன்றது ஆகும். 27 ஆயிரம் கிமீ வேகத்தில் இயங்கக்கூடியதாக மட்டுமில்லாமல், 1,600 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையை தாங்கிக் கொள்ளும் அளவிற்கு இன்றைய கால விண்கலங்கள் உருவாக்கப்படுகின்றன என்றால், மனிதர்களாகிய நாம் எந்த அளவிற்கு தொழிற்நுட்பங்களில் வளர்ச்சி கண்டுள்ளோம் என்பதை அறியலாம்.


Click it and Unblock the Notifications









