மருத்துவர்கள் ஏன் தன்னை பரிசோதிக்கிறார்கள்? என்பது சி.எஸ்.சந்தோஷூக்கு தெரியவில்லை... தந்தை உருக்கம்...
2021 டக்கார் ரேலியில் படுகாயமடைந்த சி.எஸ்.சந்தோஷ் தற்போது எப்படி உள்ளார்? என்பது குறித்து தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

2021 டக்கார் ரேலி பந்தயத்தின்போது நடைபெற்ற விபத்தில், ஹீரோ மோட்டோஸ்போர்ட்ஸ் ரேலி அணியின் சி.எஸ்.சந்தோஷ் படுகாயமடைந்தார். குறிப்பாக அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதன்பின் அவரது சக போட்டியாளர்கள் அவரை மீட்டனர். விபத்து நடைபெற்ற பகுதிக்கு ஹெலிகாப்டர் வந்து அவரை மீட்டு சென்றது.

சி.எஸ்.சந்தோஷை மருத்துவர்கள் செயற்கை கோமா நிலையில் வைத்து சிகிச்சை அளித்தனர். இது உயிருக்கு அச்சுறுத்தல் இல்லை எனவும் அவர்கள் தெரிவித்தனர். சவுதி அரேபியா மருத்துவமனையில் சி.எஸ்.சந்தோஷூக்கு ஒரு சில வாரங்கள் சிகிச்சை அளிக்கப்பட்டது. இதன்பின் அவர் பெங்களூர் அழைத்து வரப்பட்டார்.

அங்கு தனது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் சி.எஸ்.சந்தோஷ் இணைந்தார். ஆனால் முற்றிலும் மயக்கமடைந்த நிலையில்தான் சி.எஸ்.சந்தோஷ் பெங்களூர் அழைத்து வரப்பட்டார். எனினும் அவருக்கு இங்கு நினைவு திரும்பியுள்ளது. ஆனால் 2021 டக்கார் ராலியில் என்ன நடந்தது? என்பது சி.எஸ்.சந்தோஷூக்கு நினைவில்லை. அவரது தந்தை சிவ சங்கர் ஈஎஸ்பிஎன் நேர்காணலில் இதனை கூறியுள்ளார்.

குறுகிய கால நினைவு இழப்பால் சி.எஸ்.சந்தோஷ் (Short Term Memory Loss) பாதிக்கப்பட்டுள்ளார். 2021 டக்கார் ரேலிக்காக ஸ்பெயினில் பயிற்சி மேற்கொண்ட நிகழ்வுகள்தான் கடைசியாக அவரது நினைவில் உள்ளது. இதுகுறித்து சி.எஸ்.சந்தோஷின் தந்தை சிவ சங்கர் கூறுகையில், ''7 நாட்களுக்கு முன்பு வரை, என்ன நடந்தது? என்பது சந்தோஷூக்கு தெரியாது.

அவரால் தற்போதும் கூட விபத்தை நினைவுபடுத்த முடியவில்லை. ஆனால் எங்களது உரையாடல்கள் மூலமாக, விபத்து நடைபெற்றதை ஏற்று கொள்ள தொடங்கியுள்ளார். இந்த விபத்து எப்படி நடந்தது? என்பது போன்ற கேள்விகளை அவர் தற்போது கேட்கிறார்'' என்றார். நாங்கள் ஏற்கனவே கூறியபடி இந்தியாவிற்கு வந்தபோது, சி.எஸ்.சந்தோஷ் மயக்க நிலையில்தான் இருந்தார்.

ஆனால் அவரது பெற்றோரை அவரால் உணர்ந்து கொள்ள முடிந்தது. இதுகுறித்து சி.எஸ்.சந்தோஷின் தந்தை சிவ சங்கர் கூறுகையில், ''அந்த சூழ்நிலையிலும் கூட, சந்தோஷால் அவரது அம்மாவை அடையாளம் கண்டு கொள்ள முடிந்ததை போல் தெரிகிறது. அவர் தன் அம்மாவின் கைகளை பற்றி கொண்டார். எங்களுக்கு நம்பிக்கை இருப்பது அந்த தருணத்தில்தான் எங்களுக்கு தெரிந்தது.

அதன்பின் சில நாட்களில் அவருக்கு நினைவு திரும்பி விட்டது. ஆனால் என்ன நடந்தது? என்பது அவருக்கு தெரியவில்லை. மருத்துவமனை படுக்கையில் ஏன் படுத்திருக்கிறோம்? என்பது அவருக்கு தெரியவில்லை. ஏன் மருத்துவர்கள் தன்னை பரிசோதிக்கிறார்கள்? என்பதும், ஏன் தன்னால் எழுந்து நடக்க முடியவில்லை? என்பதும் அவருக்கு தெரியவில்லை.

டக்கார் ரேலிக்கு சுமார் 6 மாதங்களுக்கு முன்பு பயிற்சிக்காக ஐரோப்பா சென்றதை சி.எஸ்.சந்தோஷ் நினைவு கூர்ந்தார். ஆனால் டக்கார் ரேலி மற்றும் விபத்து சம்பவங்கள் அவரது நினைவில் இல்லை. எப்போது மீண்டும் பைக்கில் பயணிப்பேன்? என்பதை பற்றி சி.எஸ்.சந்தோஷ் பேசுகிறார். கடந்த கால நினைவுகளை நாங்கள் கூறும்போது, அவற்றை நினைவுகூறுவதற்கு இது உதவியாக இருக்கிறது என அவர் எங்களிடம் கூறுகிறார்.
அதே சமயம் சந்தோஷின் உடல்நிலை வேகமாக முன்னேற்றம் அடைந்து வருகிறது. இதைப்பார்த்து மருத்துவர்கள் கூட ஆச்சரியப்படுகிறார்கள். சிறிது காலம் ஆகலாம் என்றாலும், சந்தோஷ் முழுமையாக மீண்டு வருவார் என நாங்கள் உறுதியாக நம்புகிறோம்'' என்றார். ரசிகர்களின் பிரார்த்தனையும் கூட அதுதான்!


Click it and Unblock the Notifications








