உலகமே ஆராய்ந்து கொண்டிருந்த மர்மத்திற்கு விடை கிடைத்தது... எதிரிகள் கண்ணில் விரல் விட்டு ஆட்டிய கிம்
உலகமே பரபரப்பாக ஆராய்ந்து கொண்டிருந்த மர்மத்திற்கு, துப்பறியும் விசாரணை மூலமாக தற்போது விடை கிடைத்துள்ளது. வட கொரிய அதிபர் கிம் ஜோங் உன், எதிரிகள் கண்ணில் விரல் விட்டு ஆட்டிய தகவல்கள் இதன் மூலம் தெரியவந்துள்ளன.

ஹிட்லர் மற்றும் முசோலினி வரிசையில் இன்று உலகையே அச்சுறுத்தி கொண்டிருக்கும் ஒரு சர்வாதிகாரி கிம் ஜோங் உன். வட கொரியா என்ற ஒரு படு பயங்கரமான நாட்டின் அதிபராக பதவி வகித்து வரும் கிம் ஜோங் உன் பற்றி யாருக்கும் அறிமுகமே தேவையில்லை. தற்போதைய நிலையில் உலகின் பல்வேறு நாடுகளும், வட கொரியா மற்றும் கிம் ஜோங் உன்னிற்கு எதிராகதான் உள்ளன.

உலகின் பல்வேறு நாடுகளின் கடும் எதிர்ப்புகளையும் மீறி அணு ஆயுத சோதனைகளை கிம் ஜோங் உன் தொடர்ந்து செய்து கொண்டிருப்பதே இதற்கு முக்கிய காரணம். அணு ஆயுதங்கள் உலகின் அமைதிக்கு பெரும் அச்சுறுத்தல் என்பதால், கிம் ஜோங் உன்னை வழிக்கு கொண்டு வர பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

இதன் ஒரு பகுதியாக ஐக்கிய நாடுகள் சபை மற்றும் ஐரோப்பிய யூனியன் உள்ளிட்ட உலகின் பல்வேறு கூட்டமைப்புகளும், அமெரிக்கா உள்ளிட்ட உலகின் பல்வேறு நாடுகளும் வட கொரியா மீது மிக கடுமையான பொருளாதார தடைகளை விதித்துள்ளன. ஆனால் இதற்கெல்லாம் பயந்து போய், வளைந்து கொடுக்க கூடிய ஆள் இல்லை கிம் ஜோங் உன்.

மறைமுகமாவோ அல்லது சில சமயங்களில் மிக வெளிப்படையாகவோ அவரது அணு ஆயுத சோதனைகள் தொடர்ந்த வண்ணமேதான் உள்ளன. எனவே உலக நாடுகளின் முக்கிய தலைவர்கள், வட கொரிய அதிபர் கிம் ஜோங் உன்னை அவ்வப்போது சந்தித்து, பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இவர்களில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் மற்றும் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் ஆகியோர் முக்கியமானவர்கள்.

இதனிடையே ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் மற்றும் வட கொரிய அதிபர் கிம் ஜோங் ஆகியோர் இடையேயான சந்திப்பு கடந்த ஏப்ரல் மாதம் ரஷ்யாவில் நடைபெற்றது. அதற்கு முன்னதாக கடந்த 2018ம் ஆண்டு ஜூன் மாதமும், அதன்பின் கடந்த பிப்ரவரி மாதமும் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்பையும், வட கொரிய அதிபர் கிம் ஜோங் உன் சந்தித்து பேசினார்.

டொனால்டு டிரம்ப்-கிம் ஜோங் உன் இடையேயான முதல் சந்திப்பு சிங்கப்பூரிலும், இரண்டாவது சந்திப்பு வியட்நாமிலும் நடைபெற்றது. விளாடிமிர் புதின் மற்றும் டொனால்டு டிரம்ப் ஆகியோர் உடனான பேச்சுவார்த்தைகளின்போது, மெர்சிடிஸ் மேபேக் எஸ்600 புல்மேன் கார்டு (Mercedes Maybach S600 Pullman Guard) மற்றும் மெர்சிடிஸ் மேபேக் எஸ்62 (Mercedes Maybach S62) ஆகிய இரண்டு விலை உயர்ந்த லக்ஸரி கார்களை கிம் ஜோங் உன் பயன்படுத்தினார்.

இவ்விரு கார்களையும் அவர் வட கொரியாவில் இருந்தே கொண்டு வந்திருந்தார். இங்குதான் விஷயமே அடங்கியிருக்கிறது. வட கொரியா மீது உலகின் பல்வேறு நாடுகளும், கூட்டமைப்புகளும் பொருளாதார தடைகளை விதித்துள்ளன என ஏற்கனவே கூறியிருந்தோம் அல்லவா? இதில், ஐக்கிய நாடுகள் சபையும் ஒன்று.

ஐக்கிய நாடுகள் சபை விதித்துள்ள தடைகளின்படி, சொகுசு கார்கள் உள்பட ஆடம்பர பொருட்கள் எதையும் வட கொரியாவிற்கு விற்பனை செய்யக்கூடாது. நிலைமை இப்படி இருக்க, இந்த மெர்சிடிஸ் பென்ஸ் சொகுசு கார்கள் கிம் ஜோங் உன்னிற்கு எப்படி கிடைத்தன? அவற்றை கிம் ஜோங் உன் எப்படி கொள்முதல் செய்தார்? என்ற கேள்விகள் எழுந்தன.

ஜெர்மனியை சேர்ந்த டெய்ம்லர் நிறுவனம் தடையை மீறி வட கொரியாவிற்கு இந்த கார்களை விற்பனை செய்ததா? என்ற சந்தேகமும் எழுந்தது. டெய்ம்லர் நிறுவனத்தின் ஒரு அங்கமாகதான் மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் இயங்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் உலக நாடுகளின் சந்தேக பார்வையால் டெய்ம்லர் நிறுவனம் அதிர்ச்சியடைந்தது.

வட கொரியாவிற்கு நாங்கள் கார்களை விற்பனை செய்யவில்லை. அவர்களுடன் எங்களுக்கு எவ்விதமான வியாபார தொடர்பும் இல்லை. கிம் ஜோங் உன்னிற்கு இந்த கார்கள் எப்படி கிடைத்தன என்பது எங்களுக்கு தெரியவில்லை என சூடம் ஏற்றி சத்தியம் செய்யாத குறையாக உடனடியாக மறுப்பு அறிக்கை வெளியிட்டது டெய்ம்லர் நிறுவனம்.

ஆனால் ஒருவேளை மூன்றாம் நபர்கள் மூலமாக இந்த கார்கள் கிம் ஜோங் உன்னிற்கு கிடைத்திருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன என சந்தேக திரியை அப்போதே கொளுத்தி போட்டது டெய்ம்லர். அதாவது யாரேனும் ஒருவர் வாங்கி அவற்றை கிம் ஜோங் உன்னிற்கு கை மாற்றி விட்டிருக்கலாம் என்கிற ரீதியில் டெய்ம்லர் நிறுவனம் கருத்து தெரிவித்தது.

சர்வதேச தடைகள் எல்லாம் எனக்கு ஒரு பொருட்டே அல்ல, அவற்றை எப்படியும் தகர்த்து விடுவேன் என்கிற ரீதியில் கிம் ஜோங் உன் இந்த கார்களை வாங்கி பயன்படுத்தியதால், உலக நாடுகள் இந்த விவகாரத்தை சாதாரணமாக எடுத்து கொள்ளவில்லை. தடையை மீறி கார்களை வாங்க முடியும்போது, அணு ஆயுத சோதனைகளுக்கு தேவையானவற்றையும் தடையை தகர்த்து கிம் ஜோங் உன்னால் கொள்முதல் செய்ய முடியும் என்பதே இதற்கு காரணம்.

எனவே வட கொரியாவிற்கு எதிரான நாடுகள் கண்ணில் விளக்கெண்ணெய் ஊற்றிக்கொண்டு, இந்த கார்கள் கிம் ஜோங் உன்னிற்கு எப்படி கிடைத்தன? என துப்பறியும் பணியில் ஈடுபட்டு வந்தன. இதுதவிர தி நியூயார்க் டைம்ஸ் செய்தி நிறுவனமும் இது தொடர்பாக விரிவான விசாரணையை செய்து வந்தது. இதில் கிடைத்த தகவல்களை தி நியூயார்க் டைம்ஸ் தற்போது வெளியிட்டுள்ளது.

இதன்படி நெதர்லாந்து நாட்டில் உள்ள ரோட்டர்டம் துறைமுகத்தில், ஒரு ஜோடி புல்லட் புரூஃப் மெர்சிடிஸ் பென்ஸ் கவச கார்கள் கப்பலில் ஏற்றப்பட்டுள்ளன. 41 நாள் கடல் வழி பயணத்திற்கு பிறகு, அந்த கார்கள் சீனாவிற்கு வந்துள்ளன. அதன்பின் தனி ஒரு கப்பலில் அந்த கார்கள் ஏற்றப்பட்டு ஜப்பானிற்கு பயணித்துள்ளன.

அதன்பின் மீண்டும் வேறு ஒரு கப்பலில் ஏற்றப்பட்டு, வட கொரியாவின் பரம எதிரியான தென் கொரியாவிற்கு அந்த கார்கள் வந்துள்ளன. இந்த கார்களை ஏற்றி வந்த கப்பல், தென் கொரிய துறைமுகத்தில், ரஷ்ய கப்பல் ஒன்றை சந்தித்துள்ளது. அங்கு வைத்து ரஷ்ய கப்பலுக்கு கார்கள் மாற்றப்பட்டுள்ளன.

அதன்பின் அந்த ரஷ்ய கப்பல் கடலில் திடீரென மறைந்து போனது. அந்த கப்பலின் டிராக்கிங் டிவைஸ்கள் ஆஃப் செய்யப்பட்டு விட்டன. அதன்பின் ரஷ்யாவில் உள்ள விளாடிவோஸ்டோக் நகரின் துறைமுகத்தில்தான் அந்த கப்பல் தென்பட்டது. விளாடிவோஸ்டோக் துறைமுகத்திற்கு அந்த கப்பல் வந்த அதே தினத்தன்று வட கொரியாவில் இருந்து சரக்கு விமானமும் சரியாக அங்கு வந்து சேர்ந்துள்ளது.
அதன்பின் அங்கிருந்து கார்களை ஏற்றிக்கொண்டு அந்த விமானம் வட கொரியாவிற்கு சென்றதாக கூறப்படுகிறது. இந்த தகவல்கள் ஹாலிவுட் சினிமா பட காட்சிகளை மிஞ்சும் வகையில் உள்ளன. தனது அணு ஆயுத திட்டங்களுக்கு தேவையான மூலப்பொருட்கள் உள்ளிட்டவற்றையும் வட கொரியா இதே பாணியில்தான் தருவித்து கொள்வதாகவும் கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications








