இந்தியாவில் இத்தனை வகையான ஆம்புலன்ஸ்கள் உள்ளதா? கொரோனா நோயாளிகளுக்கு ஏற்றது எதுன்னு தெரியுமா?
இந்தியாவில் எத்தனை வகையான ஆம்புலன்ஸ்கள் உள்ளன? என்பதை இந்த செய்தியில் விரிவாக பார்க்கலாம்.

இந்தியாவில் கொரோனா வைரஸ் இரண்டாவது அலையின் தாக்கம் இன்னும் குறிப்பிடத்தக்க அளவில் குறையவில்லை. தொடர்ந்து பலர் கோவிட்-19 வைரஸ் தொற்றுக்கு ஆளாகி மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். தற்போதைய நிலையில் 85 சதவீத நோயாளிகள் வீடுகளிலேயே குணமாகி விடுகின்றனர்.

ஆனால் எஞ்சிய 15 சதவீத நோயாளிகளை, மருத்துவமனைகளில் அனுமதித்தாக வேண்டிய தேவை உள்ளது. அவர்களை மருத்துவமனைகளுக்கு கூட்டி செல்ல வேண்டியுள்ளதால், தற்போது ஆம்புலன்ஸ்களுக்கான தேவை அதிகரித்து கொண்டே வருகிறது. 108 எண்ணுக்கு அழைப்பதன் மூலமாக நீங்கள் ஆம்புலன்ஸ் சேவையை பெறலாம்.

அல்லது அருகில் உள்ள மருத்துவமனையை தொடர்பு கொண்டு ஆம்புலன்ஸ் சேவையை பெற முடியும். இதுபோன்ற சமயங்களில் நீங்கள் எமர்ஜென்ஸி ஆம்புலன்ஸ்களை அழைக்கலாம். இதுதான் பொதுவாக காணப்படும் ஆம்புலன்ஸ் ஆகும். இந்த ஆம்புலன்ஸில் மருத்துவ பணியாளர்கள் இருப்பார்கள். அத்துடன் ஆக்ஸிஜன் வசதியும் இருக்கும்.

கோவிட்-19 வைரஸ் வேகமாக பரவி வரும் இந்த இக்கட்டான நேரத்தில், வென்டிலேட்டர் வசதியுடன் கூடிய ஆம்புலன்ஸ்களுக்கான தேவை உயர்ந்துள்ளது. தனியார் நிறுவனங்கள் பலவும் இந்த சேவையை வழங்கி வருகின்றன. ஆனால் இந்த ஆம்புலன்ஸ்களுக்கான தேவை தொடர்ந்து மிகவும் அதிகமாகவே இருந்து வருகிறது.

அதே நேரத்தில் இன்னும் சில ஆம்புலன்ஸ்கள் முழுமையான ஐசியூ வசதியுடன் கிடைக்கின்றன. நோயாளியின் உயிரை காப்பாற்றுவதற்கு தேவையான பல்வேறு வசதிகள் இந்த ஆம்புலன்ஸ்களில் இடம்பெற்றிருக்கும். எமர்ஜென்ஸி ஆம்புலன்ஸ்களை காட்டிலும் இந்த ஆம்புலன்ஸ்களுக்கான வாடகை மிகவும் அதிகம்.

ஆனால் கொரோனா நோயாளிகளுக்கு எமர்ஜென்ஸி ஆம்புலன்ஸ்தான் மிகவும் ஏற்றது என டாக்டர்கள் தெரிவிக்கின்றனர். தனியார் நிறுவனத்திடம் இருந்து நீங்கள் எமர்ஜென்ஸி ஆம்புலன்ஸை வாடகைக்கு எடுப்பதாக இருந்தால், அதில் ஆக்ஸிஜன் வசதி இடம்பெற்றுள்ளதை முன்கூட்டியே உறுதி செய்து கொள்வது நல்லது.

அதே நேரத்தில் நோயாளிகளுக்கு வீட்டிலேயே ஆக்ஸிஜன் வசதி செய்யப்பட்டிருந்தால், வேன் ஆம்புலன்ஸ் அல்லது கார் ஆம்புலன்ஸை அழைத்தால் போதுமானது. பொதுவாக பல்வேறு வகையான ஆம்புலன்ஸ் சேவைகள் உள்ளன. ஆனால் இந்தியாவை பொறுத்தவரையில், 6 வகையான ஆம்புலன்ஸ் சேவைகள் கிடைக்கின்றன.

இதில், முதலாவது பேஸிக் ஆம்புலன்ஸ். நோயாளிக்கு சில நாட்கள் தொடர்ந்து உடல் நிலை சரியில்லை என்றால், இந்த ஆம்புலன்ஸை அழைக்கலாம். இரண்டாவது வகை அட்வான்ஸ்டு ஆம்புலன்ஸ். இதுதான் எமர்ஜென்ஸி ஆம்புலன்ஸ் எனவும் அழைக்கப்படுகிறது. இந்த வகையான ஆம்புலன்ஸ்களுக்குதான் தற்போது தேவை மிகவும் அதிகரித்துள்ளது.

ஆக்ஸிஜன் உள்பட இந்த ஆம்புலன்ஸில் பல்வேறு மருத்துவ வசதிகள் இடம்பெற்றிருக்கும். எனவே நோயாளிக்கு முடிந்த வரை விரைவாக சிகிச்சையை தொடங்க முடியும். மூன்றாவது வகை மார்ச்சூவரி ஆம்புலன்ஸ்கள் ஆகும். உயிரிழந்தவர்களின் உடல்களை கொண்டு செல்வதற்கு இந்த ஆம்புலன்ஸ்கள் பயன்படுகின்றன.

இதுதவிர புதிதாக பிறந்த குழந்தைகளுக்கு என பிரத்யேகமான ஆம்புலன்ஸ்களும் இருக்கின்றன. இதில், பச்சிளம் குழந்தைகளுக்கு தேவையான பல்வேறு வசதிகள் இருக்கும். ஐந்தாவது வகையை சேர்ந்த ஆம்புலன்ஸ், நோயாளிகளை ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு கொண்டு செல்வதற்கு பயன்படுகின்றன.

இதனை நோயாளிகள் போக்குவரத்து வாகனம் என்றும் கூறலாம். ஆறாவது வகையை சேர்ந்த ஆம்புலன்ஸ்கள், ஏர் ஆம்புலன்ஸ்கள் ஆகும். இதில், மருத்துவ சிகிச்சைக்காக ஒரு நகரத்தில் இருந்து மற்றொரு நகரத்திற்கு போக்குவரத்து மேற்கொள்ளப்படும். நோயாளிகளை மருத்துவமனைகளுக்கு அழைத்து செல்வதற்கு ஆம்புலன்ஸ்கள்தான் மிகவும் ஏற்றவை.

ஏனெனில் சாலைகளில் ஆம்புலன்ஸ்களுக்கு என தனியாக விதிமுறைகள் பின்பற்றப்படுகின்றன. இதன் மூலம் நோயாளிகளை மருத்துவமனைகளுக்கு விரைவாக அழைத்து செல்ல முடியும். நோயாளி விரைவில் மருத்துவமனையில் சேர்க்கப்பட வேண்டுமென்றால், ஆம்புலன்ஸ்தான் சரியான தீர்வாக இருக்கும். ஏனெனில் ஆம்புலன்ஸ்களால் டிராபிக் சிக்னலில் சிகப்பு விளக்குகளை தவிர்த்து விட்டு செல்ல முடியும்.

இந்தியாவில் தற்போது ஆம்புலன்ஸ்களுக்கு பற்றாக்குறை இருப்பதால், நோயாளிகளை தங்களது சொந்த கார் அல்லது வேறு ஏதேனும் ஒரு வழியில் மருத்துவமனைகளுக்கு கூட்டி செல்லலாம் என பலர் நினைக்கின்றனர். ஆனால் இது ஆபத்தானது என்பது குறிப்பிடத்தக்கது. ஏனெனில் இதன் மூலம் உங்களுக்கும் கொரோனா தொற்று ஏற்படலாம். எனவே முடிந்தவரை ஆம்புலன்ஸ்கள்தான் சிறந்தது.
Note: Images used are for representational purpose only.


Click it and Unblock the Notifications








