பெட்ரோல், டீசல் வாகனங்களை இதுக்கு அப்புறம் வாங்குவீங்களா? இந்தியா வல்லரசு நாடாக மாற இதை மட்டும் செஞ்சா போதும்!
எலக்ட்ரிக் வாகனங்களுக்கான தேவையும், அவற்றின் பயன்பாடும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இது இந்தியாவில் மட்டுமில்லை, உலக நாடுகளில் பலவற்றில் நடந்துக் கொண்டிருக்கும் ஒன்றாகும். இன்னும் சொல்லப்போனால், நம் இந்தியாவில் தான் எலக்ட்ரிக் வாகனங்களுக்கான தேவை மெதுவாகவே அதிகரித்து வருகிறது.
இருப்பினும், வளர்ச்சி சீரான வேகத்தில் இருந்துக் கொண்டே இருக்கிறது. சமீப காலத்தில் ஐரோப்பாவில் எலக்ட்ரிக் வாகனங்களை வாங்குபவர்களின் எண்ணிக்கை சற்று குறைந்திருந்தாலும், இந்தியாவில் எலக்ட்ரிக் வாகனங்களுக்கான மார்க்கெட் மெதுவாக வளர்ந்தாலும், எந்தவொரு இடையூறும் இன்றி சீரான வேகத்தில் வளர்ந்து வருகிறது. குறிப்பாக, எலக்ட்ரிக் 2-வீலர்களை வாங்குபவர்களின் எண்ணிக்கை புதிய உச்சத்தை தொட்டு வருகிறது.

அதேபோல், எலக்ட்ரிக் கார்கள் (Electric Cars) விற்பனையும் அதிகரித்து வருகிறது. கனரக வாகனங்களில் எலக்ட்ரிக்கை புகுத்துவதுதான் தற்போதைக்கு பெரிய வேலை ஆகும். மத்திய அரசு எலக்ட்ரிக் வாகனங்கள் விஷயத்தில் முனைப்புடன் உள்ளதால், சாலையில் பாதிக்கு பாதி எலக்ட்ரிக் வாகனங்கள் ஓடும் காலம் வெகு தொலைவில் இல்லை. இருப்பினும், 100% எலக்ட்ரிக் வாகன இலக்கை அடைய இந்தியாவுக்கு இன்னும் பல ஆண்டுகள் ஆகும்.
எலக்ட்ரிக் வாகனங்கள் விஷயத்தில் மத்திய அரசு முனைப்பு காட்டுவதற்கு பல காரணங்கள் உள்ளன. உலக வெப்பமயமாதலை கட்டுப்படுத்த மாசற்ற பசுமையான போக்குவரத்துக்காக, ஒலி இரைச்சல் அற்ற போக்குவரத்துக்காக என காரணங்களை சொல்லிக் கொண்டே போனாலும், இவற்றுள் முக்கியமான காரணம், வெளிநாட்டில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதியை குறைப்பது ஆகும்.

இந்தியாவில் கச்சா எண்ணெய் வளம் கிடையாது. இதனால், நாட்டின் கச்சா எண்ணெய் தேவைக்கு அதிகம் மத்திய கிழக்கு நாடுகளையும், அமெரிக்க நாடுகளையும் தான் இந்தியா சார்ந்துள்ளது. கச்சா எண்ணெய்யில் இருந்துதான், பெட்ரோல், டீசல் போன்ற முக்கியமான எரிபொருட்கள் உள்பட பல விதமான எண்ணெய்கள் பல விதமான வேதியியல் நிலைகளில் எடுக்கப்பட்டு பயன்படுத்தப் படுகின்றன.
கச்சா எண்ணெய்க்காக ஒரு வருடத்தில் மத்திய அரசு செலவு செய்யும் பணத்தை எல்லாம் பார்த்தால் தலைச்சுற்றும். 2023 ஏப்ரல் மாதத்தில் இருந்து 2024 மார்ச் வரையிலான 1 வருட காலத்தில் சுமார் ரூ.11 லட்ச கோடிக்கும் அதிகமான பணத்தை கச்சா எண்ணெய் இறக்குமதிக்காக இந்திய அரசு செலவு செய்துள்ளது. ஆனால் நல்ல விஷயம் என்னவென்றால், இந்த தொகை வருடத்திற்கு வருடம் குறைந்துக் கொண்டே வருகிறது.
இந்தியாவில் 100% எலக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாடு வந்துவிட்டால் கச்சா எண்ணெய் இறக்குமதி மிக பெரிய அளவிற்கு குறைந்துவிடும். அதன் மூலமாக பெரிய தொகை அரசாங்கத்திற்கு மிச்சமாகும். இந்தியா முழுவதும் கூட வர தேவையில்ல்ல... குறைந்தது 10 இலட்சம் மக்கள் தொகையை கொண்ட இந்தியாவின் முக்கியமான 44 நகரங்களில் முழுவதுமாக எலக்ட்ரிக் வாகன பயன்பாடு வந்துவிட்டாலே இந்திய அரசாங்கத்திற்கு சுமார் ரூ.9 லட்சம் கோடிக்கும் அதிகமான பணம் மிச்சமாகும்.
பெங்களூருவை சேர்ந்த 'தி எனர்ஜி & ரீசோர்ஸஸ் இன்ஸ்டிட்யூட்' (The Energy And Resources Institute) என்கிற நிறுவனம் மூலமாக நடத்தப்பட்ட இந்த ஆய்வின்படி, இந்தியாவின் 44 முக்கிய நகரங்களில் முழுவதுமாக எலக்ட்ரிக் வாகனங்களுக்கு மாறினாலே சுமார் 5,100 கோடி லிட்டர் பெட்ரோல் மற்றும் டீசலை மிச்சப்படுத்தலாம். இதன் மூலமாக, 11.5 டன் கார்பன் உமிழ்வை தடுப்பதுடன், 6.1 கோடி டன் கார்பன்-டை-ஆக்ஸைடு உமிழ்வையும் தவிர்க்கலாம்.
இதன் மூலம், மாசற்ற சுற்றுச்சூழலை உருவாக்க முடியும். எலக்ட்ரிக் வாகனங்களினால் ஏற்படும் நன்மைகளை பற்றி ஆராய்ந்தது மட்டுமின்றி, இந்த பெங்களூரு இன்ஸ்டிட்யூட் பழைய வாகனங்களின் எண்ணிக்கை குறித்தும் ஆய்வு நடத்தியது. அதன்படி, 10 இலட்சத்துக்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட இந்தியாவின் 44 நகரங்களில் தற்போதைக்கு 44 இலட்சமாக இருக்கும் பழைய வாகனங்களின் எண்ணிக்கை 2030ஆம் ஆண்டிற்குள் 75 லட்சமாக அதிகரிக்கும் என தெரிவித்துள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ரூ.9 லட்சம் கோடிக்கும் அதிகமான பணத்தை இந்திய அரசாங்கம் மிச்சப்படுத்தலாம் என்பது தற்போதைய நிதி நிலையின்படி ஆகும். எதிர்காலத்தில் இந்த தொகை இன்னும் அதிகமாகலாம். இவ்வளவு பெரிய நிதியை மிச்சப்படுத்துவதன் மூலம் நாட்டிற்கு தேவையான மற்ற விஷயங்களில் அதிகம் முதலீடு செய்ய முடியும். இதன் மூலமாக, இந்தியாவை வல்லரசு நாடாக மாற்ற முடியும்.


Click it and Unblock the Notifications








