ரயில் டிக்கெட் புக்கிங்கில் இப்படி ஒரு ஆப்ஷனை தான் எல்லோரும் எதிர்பார்த்துட்டு இருந்தோம்! இதோ வந்துடுச்சு!
ரயில் டிக்கெட்களில் பெயர் மாற்றம் செய்வதைச் சுலபமாக்கி ரயில்வே நிர்வாகம் புதிய உத்தரவு ஒன்றைக் கொண்டு வந்துள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
இந்தியாவில் தினந்தோறும் ரயில்களில் லட்சக்கணக்கான பயணிகள் பயணம் செய்கின்றனர். பெரும்பாலான மக்கள் புக்கிங் செய்தே பயணம் செய்கின்றனர். இந்நிலையில் ரயில்டிக்கெட்களை புக்கிங் செய்வதில் ரயில்வே நிர்வாகம் தீவிரமான நடவடிக்கைகளைப் பின்பற்றி வருகிறது. அதனால் ரயில் டிக்கெட்களில் நடக்கும் மோசடிகளைத் தடுக்க ரயில்வே நிர்வாகம் இவ்வாறான கறார் சட்டங்களை வைத்துள்ளது.

அதன்படி ஒருவர் புக் செய்த டிக்கெட்டில் அவர் பயணம் செய்யவில்லை என்றால் அதற்குப் பதிலாக மற்றவரின் பெயரை மாற்றுவதற்குக் கடுமையான சட்டம் இருக்கிறது. கள்ளச் சந்தையில் டிக்கெட் விற்பனை செய்யப்படுவதைத் தடுக்க இவ்வாறான நடைமுறையைப் பின்பற்றுகிறது. ஆனால் இப்படி புக் செய்த டிக்கெட்டில் வேறு பெயர் மாற்றவே முடியாது என்ற நிலை கிடையாது.
ஒரே குடும்பத்தினராக இருந்தால் பெயரை மாற்றிக்கொள்ள முடிவும், அதுவும் நேரடியாக ரயில்வே அதிகாரியைச் சந்தித்து பயணம் செய்ய முடியாததற்கான காரணம் உள்ளிட்ட விபரங்களைக் கூறி மாற்றிக்கொள்ளலாம். இல்லை என்றால் அந்தடிக்கெட்டை கேன்சல் செய்துவிட்டு வேறு டிக்கெட்டை புக்கிங் செய்து கொள்ள மட்டும் தான் முடியும்.

இந்நிலையில் இப்படியாக ரயில் டிக்கெட்டில் பெயர மாற்றுவதில் உள்ள சிக்கலை தற்போது இந்திய ரயில்வே நிர்வாகம் குறைத்துள்ளது. அதன் தற்போது ஒரே குடும்பத்தினராக இருந்தால் மட்டும் பெயரை மாற்றிக்கொள்ளலாம் என்று இருந்த விதியில் தற்போது மாற்றத்தைக் கொண்டு வந்துள்ளது. குறிப்பிட்ட நபர்கள், குறிப்பிட்ட முறையில்டிக்கெட் புக் செய்திருந்தால் அவர்கள் தங்கள் டிக்கெட்டில் பெயரை மாற்றிக்கொள்ள முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஆர்எஸ் போன்ற நிர்வாக அதிகாரிகள், அரசுப் பணியாளர்கள் பணிக்கான பயணம் காரணமாகச் செய்யப்படும் புக்கிங் டிக்கெட்கள், பள்ளி, கல்லூரி மாணவிகள் குழுக்களாக செய்யப்படும் டிக்கெட்கள், திருமண நிகழ்விற்காக மொத்தமாக டிக்கெட் செய்யப்படும் குழு டிக்கெட்கள், ஆகிய டிக்கெட்களிலும் இனிபெயர் மாற்றத்தைச் செய்து கொள்ளலாம் என உத்தரவிட்டுள்ளனர்.

ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளுக்குக் கடைசி நேரம் திட்டம் மாறுபடும் தன்னுடன் அழைத்துச் செல்லும் சக அதிகாரிகளில் மாற்றம் ஏற்படும்போது இந்த ஆப்ஷனை பயன்படுத்திக்கொள்ளலாம். அரசுப் பணிக்காகப் பயணிக்கும் அரசு ஊழியர்கள் தங்கள் பணியில் மாறுதல் ஏற்படும் போது அந்த டிக்கெட்டில் பெயரை மாற்றி வேறு அதிகாரியைப் பயணம் செய்ய வைக்கலாம்.
அதே போலப் பள்ளி கல்லூரி மாணவர்கள் குழுவாகப் பயணிக்கும் போது மொத்தமாக டிக்கெட்களை புக்கிங் செய்வார்கள். இதில் சில மாணவர்கள் கடைசி நேரத்தில் வெளியேறி சில மாணவர்கள் கடைசி நேரத்தில் சேர்வதாக இருந்தால் வெளியேறிய மாணவரின் பெயரை புதிய மாணவரின் பெயராக மாற்றிப் பயணிக்கலாம். இதற்கு டூரை ஏற்பாடு செய்த கல்வி மையத்தின் அதிகாரப்பூர்வ கடிதம் தேவை.
அதே போல தற்போது திருமண நிகழ்விற்காக மொத்தமாக டிக்கெட் புக் செய்து பயணிக்கும் முறையும் இந்திய ரயில்வேவில் இருக்கிறது. அந்த நேரத்தில் கடைசியில் திருமணத்தில் கலந்துகொள்ள முடியாதவர்கள் பெயர்களை நீக்கி, புதிதாக வருபவர்களின் பெயர்களைச் சேர்த்துக்கொள்ளலாம். இந்த மாற்றத்தை ஆன்லைனில் செய்ய முடியாது மாறாக ரயில்வே புக்கிங் அதிகாரியைச் சந்தித்துப் பெயர் மாற்றத்திற்கான உரிய ஆவணங்களை அளித்து பெயர்களை மாற்றிக்கொள்ளலாம். எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் இந்த மாற்றத்தைச் செய்ய ரயில் புறப்படும் நேரத்திலிருந்து 24 மணி நேரத்திற்கு முன்னதாக செய்துவிடவேண்டும். 24 மணி நேரத்திற்கும் குறைவான நேரத்தில் இதைச் செய்ய முடியாது. தற்போது இந்த பெயர் மாற்றும் முறை தென்னக ரயில்வேவிலும் நடைமுறையில் இருக்கிறது. இந்தியா முழவதிலும் இந்த விதிமுறையின்படி பெயர் மாற்றத்தை செய்து கொள்ள முடியும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஆன்லைன் டிக்கெட்களில் பெயர் மாற்றத்திற்கான வாய்ப்பு கள்ள மார்கெட்டில் டிக்கெட் விற்பனை செய்யப்படுவதைத் தடுப்பதற்காக வழங்கப்படுவதில்லை. ஆனால் இப்படியாகக் குழுவாகப் பயணிக்கும் மக்களுக்குப் பெயரை மாற்ற அடிக்கடி தேவை ஏற்படுகிறது. அவர்கள் நிச்சயம் இதை பயன்படுத்திக்கொள்ளலாம்.


Click it and Unblock the Notifications
