நடவடிக்கை வேற லெவல்ல எடுக்கறாங்க... உங்க மேலையும் செல்லாண் போட்டிருக்கலாம்... ஆன்லைனில் செக் செய்வது எப்படி?
நிலுவையில் உள்ள இ-செல்லாணை செக் செய்வது எப்படி என்பது பற்றிய தகவலை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

போக்குவரத்து விதிமீறல்களுக்கு எதிராகக் கடும் நடவடிக்கைகளை எடுக்க ஆரம்பித்திருக்கின்றது தமிழக அரசு. ஹெல்மெட் போடாமல் பயணிப்பது, ட்ரிபிள்ஸ் ரைடு செய்வது மற்றும் ட்ரிங்க் அண்ட் டிரைவ் உள்ளிட்ட போக்குவரத்து விதிமீறல்களுக்கு எதிராக மிகக் கடுமையான நடவடிக்கைகளை காவல்துறையினர் எடுக்கத் தொடங்கியிருக்கின்றனர்.

இதன் விளைவாக தலைநகரத்தில் வசிக்கும் வாகன ஓட்டிகள் பலர் தற்போது புலம்பும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். குறிப்பாக, போக்குவரத்து விதிமீறல்களுக்கான அபராதம் உயர்த்தப்பட்டிருப்பது அனைவரையும் அதிர்ச்சியில் உறைய வைத்திருக்கின்றது. தமிழக அரசின் இந்த நடவடிக்கைக்கு ஒரு பக்கம் எதிர்ப்பும், மறுபக்கம் வரவேற்பும் கிடைத்துக் கொண்டிருக்கின்றது.

தமிழகத்தில் வாகனங்களினால் ஏற்படும் விபத்துகளின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்துக் காணப்படுகின்றது. இதை உறுதிப்படுத்தும் வகையில் என்சிஆர்பி (National Crime Records Bureau) சமீபத்தில் ஓர் தகவலை வெளியிட்டது. அது வெளியிட்ட தகவலின்படி, நாட்டில் சுமார் 4.22 லட்சம் விபத்துகள் அரங்கேறியிருப்பது தெரிய வந்திருக்கின்றது.

இந்த விபத்துகளால் 1.73 லட்சம் பேர் வரை உயிரிழந்திருக்கின்றனர். 2021ம் ஆண்டில் மட்டுமே நடைபெற்ற விபத்துகளின் புள்ளி விபரங்கள் இதுவாகும். உபி மாநிலத்திலேயே சாலை விபத்தால் அதிகப்படியானோர் இறந்திருக்கின்றனர். ஒட்டுமொத்தமாக 24,711 பேர் உயரிழந்திருக்கின்றனர். இந்த மாநிலத்திற்கு அடுத்தபடியாக இரண்டாவது இடத்தை நம்முடைய தமிழகம் பிடித்திருக்கின்றது.

இங்கு சாலை விபத்தால் 2021 ஆம் ஆண்டில் மட்டும் 16,685 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் வேண்டுமானால் நம் மாநிலம் இரண்டாவது இடத்தைப் பிடித்திருக்கலாம், ஆனால், அதிகம் விபத்துகள் அரங்கேறும் மாநிலங்களின் பட்டியலில் தமிழகமே முதல் இடத்தைப் பிடித்துள்ளது. சுமார் 57,090 விபத்துகள் தமிழகத்தில் அரங்கேறியிருப்பதாக என்சிஆர்பி வெளியிட்டிருக்கும் தரவுகள் தெரிவிக்கின்றன.

இத்தகைய அவலநிலையில் இருந்து தமிழகத்தை மீட்டெடுக்கும் விதமாகவே தமிழக அரசு தற்போது மிக உயரிய அபராதத்தை அறிவித்துள்ளது. போலீஸார் சந்து பொந்து இடுக்கு என அனைத்து பகுதிகளிலும் நின்று போக்குவரத்து விதிமீறல்வாதிகளை களையெடுக்கத் தொடங்கியிருக்கின்றனர். இதுமட்டுமின்றி, சிசிடிவி கேமிராக்கள் வாயிலாகவும் போக்குவரத்து விதிமீறல் வாதிகள் மீது தமிழக போக்குவரத்துக் காவல்துறை நடவடிக்கை எடுக்கத் தொடங்கியிருக்கின்றது.

இவ்வாறு ஆன்லைன் வாயிலாக எடுக்கப்படும் நடவடிக்கைகள் பற்றிய தகவல்கள் வாகன உரிமையாளர்களுக்கு சில நேரங்களில் சென்று சேர்வதில்லை. ஆதலால் பலர் இதுவரை தாங்கள் விதிமீறலிலேயே ஈடுபட்டதில்லை என எண்ணிக் கொள்கின்றனர். போலீஸாரிடத்தில் சிக்கி அபராத செல்லாணைப் பெறும் போதே தங்கள் மீது எத்தனை வழக்குகள் நிலுவையில் உள்ளது என்பது அவர்களுக்கு தெரிய வருகின்றது.

இந்த மாதிரியான தருணங்களில் போலீஸார் கடுமையான நடவடிக்கைகளை எடுக்க நேரிடலாம். இப்போதே, அதிக எண்ணிக்கையில் செல்லாணை நிலுவையில் வைத்திருப்பவர்கள் மற்றும் நீண்ட நாட்களாக அபராதத்தை திருப்பி செலுத்தாதவர்கள் மீது காவல்துறையினர் நடவடிக்கை எடுக்கத் தொடங்கியிருக்கின்றனர்.

இம்மாதிரியான நடவடிக்கையை தவிர்க்க பெண்டிங்கில் உள்ள அபராத செல்லாண்களை கிளியர் செய்வது அவசியம். நமக்கு விதிக்கப்பட்டிருக்கும் அபராதங்களை ஆன்லைனில் எப்படி கண்டறிவது மற்றும் அபராதத்தைச் செலுத்துவது எப்படி என்பது பற்றிய விபரத்தையே இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம். வாருங்கள் விரிவான பதிவிற்குள் போகலாம்.

வாகனங்கள் பற்றிய அனைத்து தகவல்களையும் அறிய உதவும் பாரிவாஹன் தளத்தின் வாயிலாகவே அபராதம் பற்றிய தகவல்களும் இடம் பெற்றிருக்கும். முகப்பு பகுதியில் உள்ள ஆன்லைன் சர்வீஸ் பட்டனை அழுத்தி அதற்குள் நுழைவதன் வாயிலாக வாகனங்கள் சார்ந்த சேவைக்குள் நம்மால் உட்புக முடியும். அவ்வாறு செல்லும்பட்சத்தில் அந்த பக்கத்தில் நம்முடைய மாநிலம் மற்றும் ஆர்டிஓ-வை தேர்வு செய்ய வேண்டியிருக்கும்.

இதற்கு பின்னர் அத்தளம் தானாகவே நம்மை அடுத்தகட்ட நடவடிக்கைக்கு எடுத்துச் செல்லும். இதைத்தொடர்ந்து, ஸ்டேட்டஸ் பொத்தானை அழுத்துவதன் வாயிலாக, பலதரப்பட்ட சேவைகளுக்கான பொத்தான்கள் கீழே வரும். அதில், செல்லாணுக்கு என தனி பட்டன் வழங்கப்பட்டிருக்கும். அந்த பட்டனை கிளிக் செய்யும்போது நம்முடைய வாகனத்தின் பதிவெண் கேட்கப்படும்.

அதை உள்ளீடு செய்துவிட்டு, பின்னர் கேப்ட்சாவையும் வழங்குவதனால் நம்முடைய நிலுவை அபராதத்தை அறிந்துக் கொள்ள முடியும். முன்னதாக போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபட்டிருந்தால் அந்த பக்கத்தில் அதற்கான விபரங்களுடன் அபராத செல்லாண்கள் வழங்கப்பட்டிருக்கும். இதனை ஆன்லைன் வாயிலாகவும் நம்மால் செலுத்திக் கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தகுந்தது.

இவற்றை உடனடியாக செலுத்துவதனால் போக்குவரத்து காவல்துறையின் கடுமையான நடவடிக்கையில் இருந்து நம்மால் தப்பிக்க முடியும். அபராத செல்லாண்கள் கட்டப்படாத வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த மாதிரியான நடவடிக்கையில் இருந்து தப்பிக்க உடனடியாக அபராதங்களை செலுத்தவதே நல்லது.
குறிப்பு: படங்கள் உதாரணத்திற்கு வழங்கப்பட்டவை.


Click it and Unblock the Notifications