கொளுத்தும் வெயிலில் இருந்து காரை பாதுகாக்கும் எளிய வழிமுறைகள் - #சம்மர்_டிப்ஸ்..!
கோடை கால கார் பராமரிப்பு குறித்த தகவல்கள் மற்றும் சம்மர் டிப்ஸ் குறித்து இந்த தொகுப்பில் காணலாம்.
கோடை காலத்தின் உக்கிரம் துவங்கிவிட்டது. கோடை காலத்தை வெல்வதற்கு நம் உடலையும், மனதையும் குளிர்ச்சியாக வைத்துக்கொள்வதற்கு எந்தளவு அக்கறை எடுத்துக்கொள்கிறோமோ, அதே அளவு அக்கறையை நமது காரின் மீதும் வைக்கவேண்டியது அவசியமாகிறது.

தற்போது சென்னை, திருவள்ளூர், வேலூர் உள்ளிட்ட தமிழகத்தின் பல மாவட்டங்களிலும் வெயில் சுட்டெரிக்கத்துவங்கிவிட்டது.

சில இடங்களில் 113 டிகிரியையே தாண்டிச் சென்றுவிட்டது. வெயில், மனிதர்களுக்கு மட்டுமல்ல... கார்களுக்கும் பிரச்னையைக் கொடுக்கக் கூடியதுதான்!

கோடை காலத்தில் தான் அதிக வெளியூர் பயணங்கள் மற்றும் சுற்றுலா செல்லும் வாய்ப்புகள் அதிகம் உள்ளது. கோடை காலத்தில் காரை எவ்வாறெல்லாம் பராமரித்தால் சிறப்பானது என்பது பற்றி இந்த தொகுப்பில் காணலாம்.

வெயிலினால் முதலில் நேரிடையாக பாதிக்கப்படுவது காரின் பெயிண்ட்டு தான். சூரிய ஒளியால் பெயிண்ட்டின் பளபளப்பு குறையும் என்பதோடு, விரைவில் அதன் தரத்தை இழந்துவிடும். பெயிண்ட் உரிந்துவிடும் அபாயமும் இருக்கிறது. எனவே, தரமான கார் கவரை வாங்கி மூடி வைப்பதுடன், நிழலான இடத்தில் நிறுத்திவைப்பதும் அவசியம்.

கார் ஜன்னல்கள் மூடிய நிலையில் வெயிலில் நிறுத்தியிருக்கும்போது உட்புறத்தில் அபரிமிதமான வெப்பம் உண்டாகும். இதனால், டேஷ்போர்டு, இருக்கைகள், கண்ணாடிகளில் பாதிப்பு ஏற்படும்.

மேலும், காரின் தொழில்நுட்பங்களின் செயல்பாடுகளிலும் மாறுதல்கள் ஏற்படும் அபாயம் உள்ளது. இதற்கும் நிழலில் நிறுத்துவதே தீர்வு.

மேலும், காரில் பயணிக்கும்போது ஜன்னல்களில் சன் ஸ்கீரீன் கொண்டு மறைத்துவைப்பது உஷ்னம் காரின் உள்ளே புகுவதை ஓரளவுக்கு தடுக்கும்.

கோடை காலத்தில் வழக்கத்தைவிட இன்ஜின் விரைவாக சூடாகும். மேலும், நீண்ட நேர பயணங்களின்போது அதிகப்படியான சூடு காரணமாக, இன்ஜினில் பழுதும், இதர பிரச்னைகளும் ஏற்பட வாய்ப்புள்ளது.

எனவே, கூலண்ட் சரியான அளவு உள்ளதா என்பதை சோதிப்பதுடன், குறைவாக இருந்தால் ரீஃபில் செய்து கொள்வது நல்லது.

வெயில் காலத்தில் கார் டயர் அதிகம் சூடாகி, வெடிக்கும் ஆபத்து இருக்கிறது. எனவே, போதுமான ட்ரெட் இல்லாத தேய்மானம் கொண்ட டயர்களை உடனடியாக மாற்றிவிடவும்.

வெளியூர் அல்லது சுற்றுலா பயணத்திற்கு கிளம்பும் முன் காரை சர்வீஸ் மையங்களில் கொடுத்து பரிசோதனை செய்துகொள்ளுங்கள். தற்போது வீட்டிலேயே வந்து பரிசோதனை செய்து தரும் வாய்ப்புகளையும் சில நிறுவனங்கள் மொபைல்போன் அப்ளிகேஷன் மூலமாக வழங்குகின்றன.

ரூ.250 முதல் இந்த சேவை அளிக்கப்படுகிறது. சிறிய பிரச்னைகளை அவர்களே சரிசெய்துவிடுவர். பெரிய பிரச்னை என்றால் மட்டும் சர்வீஸ் மையத்திற்கு எடுத்துச்செல்ல வேண்டியிருக்கும்.

வெயில் காலத்தில் அதிக வேகத்தில் செல்வது நல்லதல்ல. பழைய டயர்கள் என்றால், ஓவர் ஹீட்டாகி வெடிக்கும் நிலைமை வரலாம். அதனால், வெயில் காலத்தில் குறைந்த வேகத்தில் செல்வது நல்லது.


Click it and Unblock the Notifications








