திடீரென சுய நினைவை இழந்து விடும் டிரைவர்கள்... ஹைவே விபத்துக்களின் பின்னணியில் திகிலூட்டும் அரக்கன்
தேசிய நெடுஞ்சாலைகளில் செல்லும்போது டிரைவர்கள் திடீரென சுயநினைவை இழந்து விடுகின்றனர். இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

தொலை தூர பயணங்களை மேற்கொள்வது என்பது தற்போது மிகவும் எளிதான ஒரு விஷயமாகி விட்டது. இந்தியாவில் புதிய தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் எக்ஸ்பிரஸ்வே சாலைகளை அமைப்பதில் மத்திய அரசு தீவிர கவனம் செலுத்தி வருவதே இதற்கு காரணம். வாகனங்களின் வெகு விரைவான போக்குவரத்திற்கு இந்த சாலைகள் உதவி செய்கின்றன.

அதே சமயம் தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் எக்ஸ்பிரஸ்வே சாலைகளில் நடைபெறும் விபத்துக்களால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் இந்தியாவில் அதிகரித்து கொண்டே வருகிறது. இதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. ஆனால் ''ஹைவே ஹைப்னோசிஸ்'' (Highway Hypnosis) மிக முக்கியமான காரணமாக உள்ளது.

''ஹைவே ஹைப்னோசிஸ்'' என்பது சற்று திகிலூட்டும் வகையில்தான் இருக்கும். மேற்கு வங்க மாநிலத்தின் ஊடாக செல்லும் தேசிய நெடுஞ்சாலை எண் 2 (NH2) மற்றும் 6 (NH6) ஆகியவற்றில், தேசிய நெடுஞ்சாலை மேம்பாட்டு ஆணையம் ஆய்வு ஒன்றை நடத்தியது. பராக்பூர்-டன்குனி மற்றும் கராக்பூர்-டங்குனி ஆகிய இடங்களுக்கு இடைப்பட்ட பகுதிகளில் இந்த ஆய்வு நடத்தப்பட்டது.

இதில், 60 சதவீத விபத்துக்களுக்கு ஹைவே ஹைப்னோசிஸ்தான் காரணம் என்ற அதிர்ச்சிகரமான தகவல் தெரியவந்தது. இந்த ஆய்வு கடந்த ஒரு சில ஆண்டுகளுக்கு முன்பே நடத்தப்பட்டு விட்டது. ஒருவேளை ஹைவே ஹைப்னோசிஸ் காரணமாக நடைபெறும் சாலை விபத்துக்களின் எண்ணிக்கை இன்று உயர்ந்திருந்தாலும் உயர்ந்திருக்கலாம்.

தற்போது இந்தியாவில் அமைக்கப்படும் தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் எக்ஸ்பிரஸ்வே சாலைகள் மிகவும் ஸ்மூத் ஆக உள்ளன. போக்குவரத்து நெரிசலும் பெரிதாக இருப்பதில்லை. அத்துடன் வளைவு, நெளிவுகள் இல்லாமல் சாலை மிகவும் நேரமாக அமைக்கப்படுகிறது. இப்படிப்பட்ட ஒரு சாலையில் வாகனம் ஓட்டும் டிரைவர்களுக்கு அலுப்பு தட்டி விடும்.

இதன் காரணமாக ஏற்படுவதுதான் ஹைவே ஹைப்னோசிஸ். தேசிய நெடுஞ்சாலைகளில் வாகனம் ஓட்டும் போது நீங்களும் கூட ஹைவே ஹைப்னோசிஸ் காரணமாக பாதிக்கப்பட்டிருக்கலாம். ஆனால் அதன் பெயர் என்னவென்று உங்களுக்கு தெரியாமல் இருந்திருக்கும். நல்ல வேளை. விபத்தில் சிக்காமல் தப்பியதற்கு கடவுளுக்கு நன்றி சொல்லி விடுங்கள்.

தேசிய நெடுஞ்சாலைகளில் பயணம் செய்து விட்டு வந்த சில டிரைவர்களை கேட்டு பாருங்கள். நான் எப்படி வந்தேன் என்பதே தெரியவில்லை. வழியில் என்னவெல்லாம் பார்த்தேன் என்பது சுத்தமாக நியாபகமே இல்லை என ஒரு சிலர் சத்தியம் செய்யாத குறையாக சொல்வார்கள். இதற்கு பெயர்தான் ஹைவே ஹைப்னோசிஸ். இது மிகவும் ஆபத்தானது.

இன்னும் தெளிவாக சொல்வதென்றால், நீண்ட தூர தொலைவிற்கு வாகனங்களை இயக்கும் டிரைவர்களுக்கு ஏற்படும் ஒருவிதமான மனநிலைதான் ஹைவே ஹைப்னோசிஸ். சாலை மிகவும் ஸ்மூத் ஆகவும், வளைவு, நெளிவுகள் இல்லாமல் மிக நேராகவும் இருப்பது போன்ற காரணங்களால்தான் ஹைவே ஹைப்னோசிஸ் ஏற்படுகிறது.

அதாவது நீங்கள் உங்கள் கண்களை திறந்து வைத்து கொண்டே தூங்கி கொண்டிருப்பீர்கள். உங்கள் கைகள் உங்களை அறியாமலேயே வாகனத்தின் ஸ்டியரிங் வீலை தன்னால் இயக்கி கொண்டிருக்கும். உங்கள் கால்கள் உங்களை அறியாமலேயே ஆக்ஸலரேட்டர் பெடலை தன்னால் மிதித்து கொண்டிருக்கும். கிட்டத்தட்ட சுய நினைவை இழந்தது போன்றதொரு நிலையில் நீங்கள் இருப்பீர்கள்.

அதாவது வாகனம் உங்கள் கட்டுப்பாட்டில் இல்லாமலேயே சென்று கொண்டிருக்கும். இப்போது யோசித்து பாருங்கள். இதற்கு முன் உங்களுக்கும் இப்படி ஒரு நிலை ஏற்பட்டிருக்கலாம். நல்ல வேளையாக விபத்தில் சிக்காமல் தப்பி வந்து விட்டீர்கள். ஹைவே ஹைப்னோசிஸ் காரணமாக பாதிக்கப்படும் நபருக்கு, மூளையின் செயல்பாடுகள் மிக கடுமையாக சரிவடைந்து விடும்.

இதுபோன்ற மிகவும் சிக்கலான சூழ்நிலைகளில், ஒரு செயலுக்கு உங்களால் உடனடியாக எதிர்வினையாற்ற முடியாது. உதாரணத்திற்கு பிரேக் பிடிக்க வேண்டியதிருக்கும். ஆனால் உங்களால் அதனை உடனடியாக செய்ய முடியாது. இதன் விளைவாக கொடூரமான சாலை விபத்தில் நீங்கள் சிக்க வேண்டிய சூழ்நிலை உருவாகலாம்.

தேசிய நெடுஞ்சாலைகளில் ஒரு நொடி தாமதித்தால் கூட ஆபத்து அதிகம். எதிர்வினையாற்றுவதில் சிறிய தாமதம் ஏற்பட்டால் கூட, அதன் பின்விளைவுகள் பயங்கரமானதாக இருக்கும். இருந்தாலும் நீங்கள் அச்சம் கொள்ள வேண்டாம். வாகன ஓட்டிகளுக்கு ஹைவே ஹைப்னோசிஸ் ஏற்படுவதை நிச்சயமாக தடுக்க முடியும்.

ஹைவே ஹைப்னோசிஸ் ஏற்படுவதை தடுப்படி எப்படி? என்பதை பின்வரும் ஸ்லைடர்களில் பார்க்கலாம். இந்த குறிப்புகள் உங்களுக்கு பயன் உள்ளதாக இருக்கும் என நம்புகிறோம். தேசிய நெடுஞ்சாலைகளில் பயணம் செய்யும்போது அடிக்கடி இடைவெளி எடுத்து கொள்ளுங்கள். ஒவ்வொரு 90 நிமிடங்களுக்கு இடையேயும் ஒரு சிறிய ஓய்வை எடுத்து கொள்ளலாம்.

உங்கள் 'கான்ஸன்ட்ரேஷன் லெவல்' மிகவும் அதிகமாக இருக்க இது உதவி செய்யும். எந்த ஒரு செயலையும் அதற்கு உண்டான நேரத்தில்தான் செய்ய வேண்டும். டிரைவிங்கும் அப்படித்தான். உடலுக்கு உறக்கம் தேவைப்படும் நேரத்தில் வாகனங்களை இயக்காதீர்கள். கூடுமானவரை நள்ளிரவு மற்றும் அதிகாலை நேரங்களில், ஸ்டியரிங் வீல் மீது கை வைக்காதீர்கள்.

ஹைவே ஹைப்னோசிஸ் ஏற்பட மற்றொரு முக்கியமான காரணம் தனியாக பயணம் செய்வது. தனி ஆளாக பயணம் செய்பவர்களுக்கு ஹைவே ஹைப்னோசிஸ் ஏற்பட வாய்ப்புகள் அதிகம். எனவே கூடுமான வரை தேசிய நெடுஞ்சாலைகளில் தனியாக பயணம் செய்யாதீர்கள். இது சற்று சிரமமான ஒரு விஷயம்தான். என்றாலும் முயற்சி செய்யலாம்.

சாலை வளைவு, நெளிவுகள் இல்லாமல் மிக நேராக இருந்தால் நிச்சயம் வாகனம் இயக்க 'போர்' அடிக்கும். இப்படியான ஒரு சூழ்நிலை ஏற்பட்டால், வாகனத்தை உடனடியாக பாதுகாப்பான ஒரு இடத்தில் நிறுத்தி விடுங்கள். அதன்பின் சற்று நேரம் செல்போனில் வீடியோ கேம் விளையாடலாம். நெருங்கிய நபர்கள் யாருடனாவது பேசலாம். அல்லது சிறிது தூரம் நடந்து விட்டும் வரலாம்.

தூக்கம் வருவது போன்ற உணர்வு ஏற்பட்டால், விண்டோவை திறந்து வைத்து கொள்ளுங்கள். இதன் மூலம் கிடைக்கும் காற்று, சூரிய ஒளி உங்களுக்கு புத்துணர்வை கொடுக்கும். இவற்றை நீங்கள் கடைபிடித்தால் ஹைவே ஹைப்னோசிஸ் என்ற அரக்கனிடம் இருந்து எளிதாக தப்பிக்கலாம். உங்கள் இனிமையான பயணத்திற்கு வாழ்த்துக்கள்.


Click it and Unblock the Notifications