டிராஃபிக் ரூலை மீறிட்டீங்க.. அபராதத்தை கட்டுங்கனு மெசேஜ் வந்திருக்கா! உங்க பணத்த சுருட்ட கும்பலே காத்திருக்கு!
இந்தியாவில் எந்த பக்கம் திரும்பி பார்த்தாலும் மோசடி சம்பவங்கள் பற்றிய தகவல்களாகவே வெளியாகிக் கொண்டு இருக்கின்றன. அந்த அளவிற்கு நாட்டில் பண மோசடி நிகழ்வுகள் மிக எண்ணிக்கையில் அரங்கேறிக் கொண்டு இருக்கின்றன. குறிப்பாக, சமீப காலமாக இதன் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. சைபர் கிரைம் போலீஸார் பண மோசடி குற்ற சம்பவங்களைக் குறைக்கும் பொருட்டு பல்வேறு நடிவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்ற போதிலும், புது புது யுக்திகளைப் பயன்படுத்தி மோசடியாளர்கள் அசால்டாக லட்சக் கணக்கான ரூபாயை சுருட்டிவிடுகின்றனர்.
ஆர்டரே செய்யப்படாத பார்சல், வீட்டுக்கு வந்திருப்பதாகக் கூறி, அது வேண்டாம் என்றால் கேன்சல் செய்ய வேண்டும் என்றும், மேலும், அதற்கு ஓடிபி சொல்ல வேண்டும் என்றும் கூறி மிகவும் லாவகமாக காயை நகர்த்தி பணத்தை திருடிச் செல்லும் சம்பவமும் இந்தியாவில் அரங்கேறி இருக்கின்றது.

இந்த நிலையிலேயே வாகனங்கள் சார்ந்தும் தங்களின் கை வரிசையை அவர்கள் காட்டத் தொடங்கி இருப்பதாக தற்போது அதிர்ச்சியளிக்கும் தகவல்கள் வெளியாகி உள்ளன. போக்குவரத்து போலீஸார் வாகன போக்குவரத்து விதிமீறல் ஈடுபடும் நபர்களுக்கு அபராத செல்லாணை வழங்குவது வழக்கம். விதிமீறலில் ஈடுபடும்போது பிடிபடுபவர்களுக்கு அப்போதே செல்லாணைப் போட்டு அவர்களின் கைகளிலேயே அது வழங்கப்பட்டுவிடும்.
இதை ஆன்லைன் அல்லது நீதிமன்றத்தின் வாயிலாக அவர்களால் செலுத்திவிட முடியும். அதேவேளையில், சாலையோர கண்கானிப்பு கேமிராக்கள் வாயிலாகவும், போக்குவரத்து விதிமீறலில் ஈடுபடும் வாகன ஓட்டிகளுக்கு போலீஸார் அபராத செல்லாண்களை அனுப்பி வைத்து வருகின்றனர். அது இ-செல்லாண் என அழைக்கப்படும். இந்த இ-செல்லாணையே பண மோசடி செய்வதற்காக ஒரு சில கும்பல் தற்போது பயன்படுத்தத் தொடங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
போக்குவரத்து விதிமீறலுக்கு அபராத இ-செல்லாணை அனுப்பி வைப்பதைப் போல போலியான இ-செல்லாணை அனுப்பி பண மோசடியில் மோசடி கும்பல்கள் ஈடுபட்டு வருகின்றன. பொதுவாக, இ-செல்லாணை பெரும் எந்தவொரு நபரும், நமக்கு எதற்கு வம்பு என கூறி எந்த கேள்வியையும் கேட்காமல் அதை ஆன்-லைன் வாயிலாக செலுத்திவிடுவது உண்டு.
இந்த மாதிரியான சூழலையே தங்களுக்கு சாதகமாக சில மோசடி மன்னன்கள் பயன்படுத்தத் தொடங்கி இருக்கின்றனர். இந்த மோசடி வலையில் இருந்து நம்மை தற்காத்துக் கொள்வது எப்படி? குறிப்பாக, நமக்கு வழங்கப்பட்டு இருக்கும் இ-செல்லாண் உண்மையானதுதானா என்று தெரிந்துக் கொள்வது எப்படி?
ஒரு வேளை உங்களுக்கு இ-செல்லாண் வந்திருக்கும் எனில், அதை விசாரிக்காமல் அப்படியே அபராதத்தைச் செலுத்த வேண்டாம். மேலும், இதை விசாரிக்க காவல்நிலையம் அல்லது வேறு அரசு அலுவலகத்திற்கு செல்ல வேண்டும் என்கிற அவசியமும் இல்லை. அரசின் பாரிவாஹன் தளத்தை விசிட் செய்தால் போதுமானது.
அந்த தளத்தில் வாகனங்கள் பற்றிய தகவல்கள் மட்டுமல்ல, நம்முடைய வாகனத்திற்கு போக்குவரத்து விதிமீறலுக்காக விதிக்கப்பட்டு இருக்கும் அபராதங்கள் பற்றிய விபரங்களையும் அறிந்துக் கொள்ள முடியும். எனவே உங்களுக்கு வந்திருக்கும் குறுஞ்செய்தி லிங்க்கை கிளிக் செய்வதற்கு முன்னர், ஒருமுறை பாரிவாஹன் தளத்தில் உங்கள் வாகனத்தின் பதிவெண்ணை உள்ளீடு செய்து அபராதம் ஏதேனும் விதிக்கப்பட்டு இருக்கின்றதா என்பதை தெரிந்துக் கொள்ளலாம்.
ஒருவேளை தளத்தில் அப்டேட் செய்யவில்லை என்றால் சிறிது காத்திருந்து மீண்டும் முயற்சிக்கலாம். அப்போதும் அபராதத்திற்கான எந்த சமிக்ஞையையும் இல்லை என்றால், உங்களுக்கு வந்திருப்பது போலியான அபராத இ-செல்லாண் ஆகும். மேலும், அபராதத்தைச் செலுத்த சிறிது கால அவகாசம் வழங்கப்படுகின்றது என்பதால் அவசரப்படாமல் இந்த விஷயத்தில் காத்திருப்பது நல்லது. ஒரு சில நாட்கள் கழித்தும் செக் செய்து பார்க்கலாம்.
போலியான இ-செல்லாண்கள் போலியான இணையதளத்திற்குக் கொண்டு செல்லும் இதை வைத்தும் நாம் ஏமாற்றப்பட இருக்கின்றோம் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளலாம். எனவே குறுஞ்செய்திகளில் வரும் லிங்க்கை கிளிக் செய்யாமல் இருப்பதே நல்லது. இருந்தும் சந்தேகம் இருப்பின் இ-செல்லான் சரிபார்ப்புக்காக போக்குவரத்து போலீஸைத் தொடர்பு கொள்ளலாம்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: நமக்கு வரும் குறுஞ்செய்தியை கண்மூடித்தனமாக நம்ப வேண்டாம் என்பதே எங்களின் கோரிக்கை ஆகும். நமக்கு வரும் எந்தவொரு லிங்க்கையும் கிளிக் செய்யும் முன் அது நமக்கு தேவையான லிங்க் தானா என்பதை உறுதி செய்ய வேண்டும். தேவையற்றதை உடனடியாக டெலிட் செய்துவிடுவதே நல்லது. இவ்வாறு செய்தால் மட்டுமே மோசடியில் இருந்து தப்பிக்க முடியும்.


Click it and Unblock the Notifications








