பாகிஸ்தானுக்கு அவங்க நாட்டுக்கு பக்கத்துலயே போய் சவால் விட்டாச்சு! உலகின் உயரமான ரயில் பாலத்தில் வந்தே பாரத்!
பிரதமர் நரேந்திர மோடி (Narendra Modi) அவர்கள் உலகளவில் கவனத்தை பெறக்கூடிய செயல் ஒன்றை இன்று (ஜூன் 6) செய்துள்ளார். அதுதான், உலகிலேயே மிக உயரத்தில் அமைந்த இரயில் பாலம் ஆகும். அதுவும் எங்கு அமைக்கப்பட்டுள்ளது என்று பார்த்தால், சமீபத்தில் போர் பதற்ற சூழல் நிலவிய ஜம்மூ & காஷ்மீர் மாநிலத்தின் ஜம்மூ நகரத்திற்கு அருகே, பாகிஸ்தான் நாட்டிற்கு அருகாமையில் ஆகும். இதனாலேயே பிரதமர் மோடியின் இந்த திறப்பு நிகழ்ச்சி ஆனது பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுப்பது போலவும், இந்தியாவின் ஆப்ரேஷன் சிந்தூர் வெற்றியின் அடையாளமாகவும் அமைந்துள்ளது.
ஜம்மூ & காஷ்மீரின் ஜம்மூவுக்கு அருகே உள்ள உதம்பூர் நகரத்தையும், பாராமுல்லா நகரத்தையும் இணைக்கக்கூடிய இரயில் வழித்தடத்தின் ஒரு பகுதியாக புதிய செனாப் இரயில் மேம்பாலம் அமைக்கப்பட்டு, அது தற்போது பிரதமரால் திறந்து வைக்கப்பட்டுள்ளது. இந்த இரு நகரங்களுக்கு இடையேதான், கடல் மட்டத்தில் இருந்து சுமார் 1.85கிமீ உயரத்தில் மலைமீது காஷ்மீர் அமைந்துள்ளது.

இதன் மூலமாக, ஒருவழியாக நீண்ட கால தாமதத்திற்கு பின் காஷ்மீருக்கு இரயில் போக்குவரத்து கிடைக்க உள்ளது. கிடைக்கவுள்ளது என சொல்வதை விட, கிட்டத்தட்ட கிடைத்துவிட்டது என்றுதான் சொல்ல வேண்டும். ஏனெனில், ஜூன் 7ஆம் தேதியில் இருந்து இரயில்கள் அதிகாரப்பூர்வமாக இந்தியாவின் இந்த புதிய வழித்தடத்தில் இயக்கப்பட உள்ளன.
எதிர்பார்த்ததை போல், முதற்கட்டமாக வந்தே பாரத் (Vande Bharat) இரயில்கள் உதம்பூரில் இருந்து காஷ்மீர் வழியாக பாராமுல்லாவுக்கு இயக்கப்பட உள்ளன. இவ்வாறு மலை உயரத்தில் இயக்கப்படுவதற்கு வந்தே பாரத் இரயில்கள் மிகவும் ஏற்றவை ஆக இருக்கும். செனாப் பாலம் ஆனது கீழே ஓடும் செனாப் நதியில் இருந்து 359 மீட்டர் உயரத்தில் மலைகளுக்கு நடுவே அமைக்கப்பட்டு இருப்பினும், இமயமலை தொடரில் இருந்துவரும் பனிகாற்றினால் சேதமடைவதற்கு வாய்ப்புள்ளது.

இதனால், வழக்கமான இரயில்களை காட்டிலும் வந்தே பாரத் போன்ற எடை குறைவான இரயில்கள் இவ்வாறான பயணங்களுக்கு ஏற்றவை ஆக இருக்கும். உயரத்தில் ஓடுவது மட்டுமின்றி, 1.31கிமீ தொலைவிற்கு நீண்டிருக்கும் பாலத்தின் மீது ஓட வேண்டும். எடைமிக்க இரயில்கள் என்றால், மெதுவாக செல்ல வேண்டியிருக்கும். அதுவே, வந்தே பாரத் இரயிலாக இருந்தால் விரைவாக செல்ல முடியும்.
இந்தியாவில் தற்போதுவரையில் அதிகமாக பயன்படுத்தப்பட்டுவரும் மற்ற 24-பெட்டி கொண்ட பயணிகள் இரயில்கள் ஆயிரத்தில் இருந்து 1,500 டன் வரையில் எடைக் கொண்டவை ஆக உள்ளன. அதுவே, வந்தே பாரத் இரயிலின் எடை வெறும் 392 டன்கள் மட்டுமே ஆகும். சென்னை ஐசிஎஃப் (ICF)-இல் முழுக்க முழுக்க இந்தியாவின் இரயிலாக உருவாக்கப்படும் வந்தே பாரத் இரயிலின் சராசரியான எடை முன்பு 430 டன்களாக இருந்தது.

2022இல் அதனை 392 டன்களாக இந்தியன் இரயில்வே குறைத்தது. குறைவான எடையினால் இரயிலுக்கு அளிக்கப்படும் எரிபொருளையும் குறைவாக கொடுக்கலாம். அதேநேரம், வந்தே பாரத் இரயில்களில் வேகமும் அதிகமாகும். 0இல் இருந்து மணிக்கு 100கிமீ வேகத்தை வெறும் 52 வினாடிகளில் எட்டிவிடக்கூடிய வந்தே பாரத் இரயிலின் டாப்-ஸ்பீடு மணிக்கு 160கிமீ ஆகும்.
செனாப் பாலத்தை போல், உதம்பூர்- பாராமுல்லா இரயில் வழித்தடத்தில் அஞ்சி காட் இரயில் மேம்பாலத்தையும் பிரதமர் திறந்து வைத்துள்ளார். இந்த இரண்டு பாலங்களையும் கடந்து, உதம்பூர்- பாராமுல்லா வழித்தடத்தில் வாரத்தில் 6 நாட்களுக்கு இரயில்களை இயக்க இந்தியன் இரயில்வே திட்டமிட்டுள்ளது, இந்த இரயில் போக்குவரத்து ஆனது வருடத்தின் எல்லா கால நிலைகளிலும் பயன்பாட்டில் இருக்கும் என்பது மற்றொரு சிறப்பம்சம் ஆகும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஜம்மூ & காஷ்மீர் மாநிலத்திற்கான சிறப்பு அந்தஸ்தை நீக்கியதில் இருந்து, அந்த மாநிலத்தை இந்தியாவின் மற்ற மாநிலங்களுடன் இணைத்து, நீண்ட காலமாக நீடித்துவரும் பாகிஸ்தான் உடனான பிரச்சனைக்கு முடிவை கொண்டுவர மத்திய அரசு முயற்சித்து வருகிறது. அதன் வெளிப்பாடே இந்த செனாப் மற்றும் அஞ்சி காட் இரயில் பாலங்கள் உடன் காஷ்மீருக்கு கொண்டுவரப்பட்டுள்ள இரயில் வழித்தடம் ஆகும். இதில் குறிப்பாக, செனாப் இரயில் பாலம் ஆனது உலக அரங்கில் இந்தியாவை முன்னிலைப்படுத்தக் கூடியதாக அமைந்துள்ளது.


Click it and Unblock the Notifications









