ஊழியர்களே இல்லாத பெட்ரோல் பங்க்... மோசடிகளை தடுக்க புதிய அதிரடி... எப்படி செயல்படும் தெரியுமா?
மோசடிகளை தடுக்கும் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, ஊழியர்களே இல்லாத பெட்ரோல் பங்க் விரைவில் பயன்பாட்டிற்கு வரவுள்ளது.

பெட்ரோல் பங்க்குகளில் பணியாற்றும் ஊழியர்கள் வாகன ஓட்டிகளிடம் முறைகேடுகளில் ஈடுபடுவதாக மிக நீண்ட காலமாக புகார்கள் உள்ளன. வாகன ஓட்டிகளின் கவனத்தை லாவகமாக திசை திருப்பி, குறைவான அளவு எரிபொருளை மட்டுமே பெட்ரோல் பங்க் ஊழியர்கள் நிரப்புவதாக புகார்கள் முன்வைக்கப்படுகின்றன.

இதுதவிர மீதி சில்லறை கொடுக்கும் சமயங்களிலும் கூட, வாகன ஓட்டிகளிடம் பெட்ரோல் பங்க் ஊழியர்கள் முறைகேடுகளில் ஈடுபடுவதாக குற்றச்சாட்டுகள் உள்ளன. இவ்வாறு பல்வேறு வழிகளில் வாகன ஓட்டிகள் ஏமாற்றப்பட்டு வருகின்றனர். இதனை தடுக்க பல்வேறு முயற்சிகள் தொடர்ச்சியாக எடுக்கப்பட்டு வருகின்றன.

இதன் ஒரு பகுதியாக ஆந்திர மாநிலத்தில் தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ள ஒரு அதிரடி நடவடிக்கை வாகன ஓட்டிகள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. ஆந்திர மாநிலம் விசாகப்பட்டிணம் நகரில் உள்ள ஸ்ரீபுரம் ஜங்ஷன் பகுதியில், மில்லினியம் பெட்ரோல் பங்க் செயல்பட்டு வருகிறது. ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட்டால் இந்த பெட்ரோல் பங்க் நிர்வகிக்கப்படுகிறது.

ஹெச்பிசிஎல் எனப்படும் ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனம் (Hindustan Petroleum Corporation Limited - HPCL), ஆட்டோமேட்டட் பெட்ரோல் பம்ப் அல்லது இ-ப்யூயல் ஸ்டேஷனை இங்கு இன்ஸ்டால் செய்யவுள்ளது. இதன்மூலம் இந்த பெட்ரோல் பங்கில் ஊழியர்களின் தலையீடு முற்றிலுமாக அகற்றப்படும்.

அத்துடன் பரிவர்த்தனைகளின் வேகமும் அதிகரிக்கும். ஹெச்பிசிஎல் மூத்த அதிகாரி ஒருவர் இந்த தகவலை தெரிவித்துள்ளார். இந்த திட்டத்தின்படி வாடிக்கையாளர்களுக்கு ஸ்மார்ட் கார்டு ஒன்று வழங்கப்படவுள்ளது. மேலும் இந்த சேவையை பெறுவதற்கு, ‘HPCL Re-fuel' என்ற மொபைல் ஆப்பை பயன்படுத்தும்படியும் வாடிக்கையாளர்கள் கேட்டு கொள்ளப்படவுள்ளதாக ஹெச்பிசிஎல் மூத்த அதிகாரி தெரிவித்துள்ளார்.

ஊழியர்களின் தலையீடு இல்லாமல் இந்த திட்டம் எவ்வாறு செயல்படுத்தப்படும் என்பதை இனி பார்க்கலாம். நீங்கள் பெட்ரோல் பங்க்கிற்கு சென்று அங்குள்ள பம்ப்பின் முன்பு உங்கள் காரை நிறுத்தி கொள்ள வேண்டும். இதன்பின் பம்ப்புடன் இணைக்கப்பட்டுள்ள டிஜிட்டல் டிவைஸில் கார்டை ஸ்வைப் செய்ய வேண்டும். இதற்கு பிறகு உங்கள் காருக்கு நீங்களே சுயமாக எரிபொருள் நிரப்பி கொள்ளலாம்.

இது தொடர்பாக ஹெச்பிசிஎல் மூத்த அதிகாரிகள் கூறுகையில், ''ஏதேனும் அவசரம் எனும்பட்சத்தில் அருகில் உள்ள எங்கள் குழு உதவிக்கு வரும். மற்றபடி எங்கள் ஊழியர்கள் தலையிட மாட்டார்கள்'' என்றார். இந்த திட்டம் சம்பந்தப்பட்ட பெட்ரோல் பங்க்கில் சமீபத்தில் சோதனை செய்து பார்க்கப்பட்டது. அதன் முடிவு ஊக்கமளிக்கும் வகையில் வந்துள்ளது.

இந்த திட்டம் குறித்து ஹெச்பிசிஎல் அதிகாரிகள் மேலும் கூறுகையில், ''2019ம் ஆண்டின் இறுதி அல்லது 2020ம் ஆண்டின் தொடக்கத்தில் இந்த சேவையை வாடிக்கையாளர்களுக்கு அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்ய உள்ளோம். ஆந்திர பிரதேச மாநிலத்தில் இதுபோன்ற திட்டம் செயல்படுத்தப்படுவது இதுவே முதல் முறை'' என்றனர்.

வாடிக்கையாளர்களுக்கு சரியான அளவு எரிபொருள் சரியான தரத்தில் கிடைக்க வேண்டும் என்பதை உறுதி செய்யும் நோக்கத்திலேயே தங்கள் நிறுவனம் இந்த தனித்துவமான திட்டத்தை கொண்டு வரவுள்ளதாகவும் ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த திட்டத்திற்கு வாகன ஓட்டிகள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

ஆனால் இது போன்ற திட்டங்கள் இந்தியா முழுக்க அமலுக்கு கொண்டு வரப்பட்டால் பெட்ரோல் பங்க்குகளில் பணியாற்றும் ஊழியர்கள் வேலையிழக்க கூடிய அபாயமும் இருப்பதாக வாகன ஓட்டிகள் தெரிவிக்கின்றனர். இது தொடர்பான உங்களுடைய கருத்துக்களை கீழே உள்ள கமெண்ட் பாக்ஸ் வாயிலாக தெரியப்படுத்துங்கள்.
Note: Images used are for representational purpose only.


Click it and Unblock the Notifications








