விபத்து நடக்காமலேயே கார் ஏர் பேக் விரிந்ததால் 2.50 லட்சம் தண்ட செலவு.. அதிர்ச்சிகரமான காரணம் இதுதான்
விபத்து நடக்காமலேயே காரின் ஏர் பேக் திடீரென விரிவடைந்ததால் ஒருவருக்கு 2.50 லட்ச ரூபாய் தண்ட செலவு ஏற்பட்டுள்ளது. இதற்கான காரணம் கார் உரிமையாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் சாலை விபத்துக்களில் சிக்கி உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை மிகவும் அதிகமாக உள்ளது. குறிப்பாக கார்கள் அதிகளவில் விபத்துக்களில் சிக்குகின்றன. அப்போது உள்ளே இருப்பவர்கள் படுகாயம் அடைந்து உயிரிழக்க நேரிடுகிறது. எனவே கார்களில் பயணம் செய்பவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை தீவிரமாக எடுத்து வருகிறது.

இதன் ஒரு பகுதியாக கார்களில் பல்வேறு பாதுகாப்பு உபகரணங்களை கட்டாயமாக வழங்க வேண்டும் என உற்பத்தி நிறுவனங்களுக்கு மத்திய அரசு அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. இதில், மிகவும் முக்கியமான பாதுகாப்பு உபகரணங்களில் ஒன்று ஏர்பேக் (Airbag). ஏர்பேக்குகள் தமிழில் காற்றுப்பைகள் என குறிப்பிடப்படுகின்றன.

மத்திய அரசு அமலுக்கு கொண்டு வந்துள்ள புதிய பாதுகாப்பு விதிமுறைகளின் படி, இந்தியாவில் விற்பனை செய்யப்படும் அனைத்து புதிய கார்களிலும் குறைந்தபட்சம் ஒரு ஏர்பேக்காவது இருக்க வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதாவது ஏர் பேக்குகள் இல்லாமல் எந்த ஒரு புதிய காரையும், உற்பத்தி நிறுவனங்கள் விற்பனைக்கு கொண்டு வரக்கூடாது.

அதே சமயம் கார்களின் விலையை பொறுத்து, அதில் இருக்கும் ஏர்பேக்குகளின் எண்ணிக்கை மாறுபடும் என்பது குறிப்பிடத்தக்கது. உதாரணமாக ஒரு சில கார்களில் 2 ஏர் பேக்குகள் இருக்கலாம். இன்னும் சில கார்களில் 6 ஏர்பேக்குகள் கூட வழங்கப்பட்டிருக்கும். கார்களில் பயணம் செய்யும் பயணிகளின் பாதுகாப்பை ஏர் பேக்குகள் உறுதி செய்கின்றன.

கார்களில் ஏராளமான சென்சார்கள் வழங்கப்பட்டிருக்கும். திடீரென ஏற்படும் அதிர்வு உள்ளிட்டவற்றை இந்த சென்சார்கள் உடனடியாக கண்டறிந்து, ஏர் பேக்குகள் விரிவடைவதை தூண்டும். அதாவது விபத்து போன்ற மோதல்களை உதாரணமாக கூறலாம். விபத்து சமயங்களில் ஏர் பேக்குகள் கண்ணிமைக்கும் நேரத்தில் விரிவடைந்து, காருக்கு உள்ளே இருக்கும் பயணிகளை காப்பாற்றும்.

ஏர் பேக்குகள் விரிவடைவதால், விபத்துக்களில் சிக்கும் கார்களுக்கு உள்ளே இருக்கும் பயணிகளுக்கு காயம் ஏற்படாது. முன்பெல்லாம் இந்திய வாடிக்கையாளர்கள் பாதுகாப்பிற்கு பெரிதாக முக்கியத்துவம் கொடுக்க மாட்டார்கள். விலை மட்டுமே அவர்கள் மனதில் முக்கிய அம்சமாக இருக்கும். ஆனால் தற்போது புதிய கார்களை வாங்குபவர்கள் பாதுகாப்பிற்கும் அதிக முக்கியத்துவம் கொடுக்க தொடங்கியுள்ளனர்.

எனவே கார் உற்பத்தி நிறுவனங்களும் போட்டி போட்டு கொண்டு, கார்களில் அதிக ஏர் பேக்குகளை வழங்க தொடங்கியுள்ளன. இது வரவேற்க வேண்டிய விஷயம். ஆனால் சாலை விபத்து நேர்ந்தால் மட்டும்தான் ஏர் பேக் விரிவடையுமா? என்றால், நிச்சயமாக கிடையாது. மும்பையை சேர்ந்த டெல்சன் சோய் என்பவரது காரின் ஏர் பேக் விபத்து நடைபெறாத சமயத்திலும் திடீரென விரிவடைந்துள்ளது.

பாதிப்பிற்கு உள்ளான டெல்சன் சோய் சிகப்பு நிற ஃபோக்ஸ்வேகன் போலோ கார் ஒன்றை வைத்துள்ளார். இந்த காரின் முன் பகுதியில் 2 ஏர் பேக்குகள் வழங்கப்பட்டிருந்தன. இந்திய மார்க்கெட்டை பொறுத்த வரை அனைத்து வேரியண்ட்களிலும் ட்யூயல் ஏர் பேக்குகள் ஸ்டாண்டர்டாக வழங்கப்பட்ட கார்களில் ஃபோக்ஸ்வேகன் போலோவும் ஒன்று.

சரி, விஷயத்திற்கு வருவோம். ஏர் பேக்குகள் ஒரு முறை விரிவடைந்து விட்டால், அவற்றை மீண்டும் பொருத்த வேண்டும். இது கொஞ்சம் செலவு பிடிக்கும் விஷயம்தான். ஆனால் விபத்தில் சிக்கிய பின்பு ஏர் பேக்கை மாற்றுவது என்றால் கூட பரவாயில்லை. உயிரை காப்பாற்றிய புண்ணியத்திற்காக அந்த செலவை தாராளமாக செய்து விடலாம்.

ஆனால் சாலை விபத்தில் சிக்காமலேயே ஏர் பேக் விரிவடைந்து, அவற்றை மீண்டும் மாற்ற செலவு செய்வது என்றால் உங்களுக்கு எவ்வளவு கோபம் வரும்? அதே கோபம்தான் டெல்சன் சோய்க்கும் வந்துள்ளது. ஆனால் தவறு ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தின் மீது என நினைத்து விட வேண்டாம். தவறு எல்லாம் நம்மை ஆண்டு கொண்டிருக்கும் அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகள் மீதுதான்.

இந்திய சாலைகளின் 'கண்டிஷன்' எப்படி இருக்கும் என்பது உங்களுக்கே நன்றாக தெரியும். அதை தனியாக விவரிக்க வேண்டிய அவசியமில்லை. இந்தியாவில் பெரும்பாலான சாலைகள் குண்டும், குழியுமாக மிகவும் மோசமான நிலையில்தான் உள்ளன. சாலைகளில் ஆங்காங்கே பெரிய பள்ளங்கள் வேறு இருக்கும். அதுவும் மழைக்காலம் என்றால் சாலைகளின் நிலைமை இன்னும் மோசமாகி விடும்.

மழை நீர் நிரம்பி விடுவதால், சாலையில் உள்ள பள்ளங்களை வாகன ஓட்டிகளால் கண்டறியவே முடியாது. இதன் விளைவு? வேறு என்ன, விபத்துதான். பள்ளங்கள் இருப்பதை கண்டறிய முடியாத வாகன ஓட்டிகள் அதில் விழுந்து படுகாயம் அடைவது வாடிக்கையாக உள்ளது. சில சமயங்களில் உயிரிழப்புகளும் நிகழ்கின்றன.

விபத்துக்கள் மட்டுமல்லாது, மிக கடுமையான போக்குவரத்து நெரிசல்கள் ஏற்படவும் மோசமான சாலைகள் காரணமாகின்றன. இதுபோன்ற மோசமான ஒரு சாலைதான் டெல்சன் சாயின் ஃபோக்ஸ்வேகன் போலோ காரின் ஏர் பேக் திடீரென விரிவடைய காரணம். மும்பையின் வடாலா பகுதியில் உள்ள சாலையில் தனது ஃபோக்ஸ்வேகன் போலோ காரில் டெல்சன் சோய் சமீபத்தில் சென்று கொண்டிருந்தார்.

அந்த சாலை குண்டும், குழியுமாக இருந்தது. மணிக்கு சுமார் 20 முதல் 30 கிலோ மீட்டர்கள் வேகத்தில் டெல்சன் சோய் பயணித்து கொண்டிருந்தார். அப்போது சாலையில் பெரிய அளவிலான பள்ளம் ஒன்று இருந்துள்ளது. மழை நீர் தேங்கியிருந்ததால், டெல்சன் சோயால் அந்த பள்ளத்தை கண்டறிய முடியாமல் போய் விட்டது.

எனவே டெல்சன் சோயின் ஃபோக்ஸ்வேகன் போலோ காரின் பின் சக்கரங்கள் அந்த பெரிய பள்ளத்தில் ஏறி இறங்கியுள்ளன. அப்போது ஏற்பட்ட அதிர்வின் தாக்கம் காரணமாக அவரது காரின் முன் பக்க ஏர் பேக்குகள் இரண்டும் திடீரென விரிவடைந்து விட்டன. ஏர் பேக்குகள் விரிவடைந்ததுடன் மட்டுமல்லாது, காரின் பின் பக்க பம்பரும் சேதமடைந்து விட்டது.

தற்போது காரை சரி செய்ய தோராயமாக 2.50 லட்ச ரூபாய் செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த டெல்சன் சோய் நடந்த சம்பவங்களை எல்லாம் டிவிட்டரில் வெளியிட்டார். அத்துடன் சேதமடைந்த தனது காரின் புகைப்படங்களையும் அவர் பகிர்ந்துள்ளார். மோசமான சாலைகள் ஒரு வாகனத்திற்கு எவ்வளவு அதிகமாக செலவு வைக்கும் என்பதற்கு இச்சம்பவம் ஓர் உதாரணம்.

பள்ளத்தில் ஏறி இறங்கிய தாக்கத்தின் காரணமான ஏர் பேக் சென்சார்கள் தூண்டப்பட்டு, 2 காற்று பைகளும் விரிவடைந்துள்ளன. இந்த சம்பவம் வாகன ஓட்டிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக கார் வைத்திருப்பவர்கள் கவலையடைந்துள்ளனர். இதுபோன்ற சம்பவம் நமக்கும் நிகழ்ந்தால், யார் செலவு செய்வது? என்பதே இதற்கு காரணம்.

குண்டும், குழியுமான சாலைகள் எப்போதுமே மிகவும் அபாயகரமானவைதான். இதுபோன்ற சாலைகளில் பயணிக்கும்போது வாகன ஓட்டிகள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருப்பது அவசியம். கூடுமான வரை மிக குறைவான வேகத்தில் பயணம் செய்யலாம். அத்துடன் இத்தகையை சாலைகளை சீரமைப்பதில் அதிகாரிகளும் அலட்சியம் காட்டக்கூடாது. போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுப்பது அவசியம்.


Click it and Unblock the Notifications








