குளுகுளு வசதியுடன் ஹம்சஃபர் சொகுசு ரயில் அறிமுகம்- சிறப்பம்சங்கள் ஒரு பார்வை!
முற்றிலும் குளிர்சாதன வசதி கொண்ட ஹம்சஃபர் எக்ஸ்பிரஸ் ரயில் அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது. அதன் சிறப்பம்சங்களை இந்த செய்தியில் காணலாம்.
ரயில் பயணத்தை அடுத்தக் கட்டத்துக்கு கொண்டு செல்வதற்கான முயற்சிகளை மத்திய ரயில்வே அமைச்சகம் முனைப்பு காட்டி வருகிறது. அதிவேக ரயில்கள், சொகுசு ரயில்களையும் அறிமுகம் செய்வதற்கான நடவடிக்கைகள் மிக துரித கதியில் நடந்து வருகிறது.
அந்த வகையில், நாட்டின் மிகவும் சொகுசு வசதிகள் கொண்ட புதிய ரயிலை மத்திய ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு அறிமுகம் செய்து வைத்தார். முற்றிலும் குளிர்சாதன வசதியுடன் பல்வேறு நவீன வசதிகளுடன் இந்த ரயில் பயன்பாட்டுக்கு வர இருக்கிறது. விரிவானத் தகவல்களை தொடர்ந்து காணலாம்.

ஹம்சாஃபர் எக்ஸ்பிரஸ் என்ற பெயரில் அழைக்கப்படும் இந்த புதிய சொகுசு ரயில் முற்றிலும் குளிர்சாதன வசதி கொண்டது. மூன்றடுக்கு படுக்கை வசதியுடன் ரயில் பெட்டிகள் கட்டமைக்கப்பட்டுள்ளன.

மொத்தம் 22 ரயில் பெட்டிகளும், இரண்டு ஜெனரேட்டர் ரயில் பெட்டிகளும் இணைக்கப்பட்டுள்ளன. வெளிர் நீல வண்ணத்தில் பூக்கள் வரையப்பட்டதாக வித்தியாசமான பெயிண்டிங் அலங்காரத்தை பெற்றிருக்கிறது.

இந்த ரயில் பெட்டிகளில் சிசிடிவி கேமரா, ஜிபிஎஸ் வசதியின் மூலமாக ரயில் பயணிகளுக்கு தகவல்கள் மற்றும் அறிவிப்புகளை வழங்கும் சாதனங்கள், பார்வையற்றோருக்கான பிரெய்லி முறை தகவல் பலகைகள் போன்ற பல சிறப்பம்சங்கள் இடம்பெற்று இருக்கின்றன.

இந்த ரயிலில் காஃபி, டீ வழங்கும் எந்திரங்களும் பொருத்தப்பட்டுள்ளன. மொபைல்போன், லேப்டாப் சாதனங்களை சார்ஜ் செய்வதற்கான பாயிண்டுகள் தனித்தனியாக கொடுக்கப்பட்டுள்ளன.

மிக சொகுசான படுக்கைகள் கொடுக்கப்பட்டுள்ளது. உட்புறமும் மிக தரமான பாகங்கள் மற்றும் அலங்கார பெயிண்ட்டிங்குடன் கவர்வதாக இருக்கிறது. தரையில் வினைல் ஃபுளோரிங் செய்யப்பட்டுள்ளது.

கழிவறைகள் மிகவும் உயர்தரமாகவும், சுகாதாரமாகவும் இருக்கும். இதில் பயோ டாய்லெட்டுகள் பொருத்தப்பட்டிருக்கின்றன. அதாவது, கழிவுகள் தண்டவாளத்தில் கொட்டாது. மேலும், குப்பைத் தொட்டிகளும் உண்டு. இதனால், சுகாதாரமான பயண அனுபவத்தை பெறும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

கபுர்தலாவில் உள்ள ரயில் பெட்டி தொழிற்சாலையில் இந்த ஹம்சாஃபர் ரயில் பெட்டிகள் தயாரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு ரயில் பெட்டியும் ரூ.2.6 கோடி விலை மதிப்பு கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதல் ஹம்சாஃபர் எக்ஸ்பிரஸ் ரயில் சேவை கோரக்பூரிலிருந்து துவங்கப்படும் என்று மத்திய ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு தெரிவித்துள்ளார். குளிர்சாதன வசதி கொண்ட சாதாரண எக்ஸ்பிரஸ் ரயில்களைவிட இந்த ஹம்சாஃபர் ரயிலில் கட்டணம் 20 சதவீதம் கூடுதலாக இருக்கும்.


Click it and Unblock the Notifications








