19ஆம் நூற்றாண்டிலேயே இப்படியொரு சுரங்க இரயில் சேவையா!! எந்த நாட்டில் தெரியுமா?
எத்தனை முறை சென்றாலும் சரி, இரயில் பயணங்கள் எப்போதுமே நமக்கு சுவாரஸ்யமானவை, மகிழ்ச்சியை தரக்கூடியவை. இந்தியாவில் இரயில்வே துறைகளுக்கு கிட்டத்தட்ட 100 ஆண்டுகால வரலாறு உள்ளது.

ஆங்கிலயர்கள் நமது நாட்டில் விட்டு சென்ற பொக்கிஷங்களில் இரயில்களும் ஒன்று. நம் நாட்டில் இரயில்கள் மற்ற நாடுகளை காட்டிலும் சற்று தாமதமாகவே பயன்பாட்டிற்கு வந்தன.

ஒரு சில நாடுகளில் பூமிக்கு அடியில் செல்லும் இரயில்களே 100 ஆண்டுகளுக்கு முன்பே பயன்பாட்டிற்கு வந்துவிட்டன. அத்தகைய பழமையான சுரங்க இரயில் சேவையை பற்றி தான் இனி இந்த செய்தியில் பார்க்க போகிறோம்.

Image Courtesy: albertbahn.hu
புடாபெஸ்ட், ஐரோப்பிய நாடான ஹங்கேரியின் தலைநகர். இந்த நகரத்தில் தற்போதும் பயன்பாட்டில் உள்ள சுரங்க இரயில் சேவை சுமார் 125 ஆண்டுகள் பழமையானது. இதன் 125வது பிறந்தநாள் சமீபத்தில் தான் கொண்டாடப்பட்டுள்ளது.

மில்லினியம் நிலத்தடி என அழைக்கப்படும் இந்த இரயில் சேவை 1896ல் திறக்கப்பட்டது. மாகியார் எனப்படும் பழங்குடி மக்கள் (தற்போதைய ஹங்கேரியன்ஸ்) மேற்காக இடம்பெயர்ந்து தங்களுக்கென ஹங்கேரி நாட்டை தஞ்சம் அடைந்ததை நினைவு கூறும் விதமாக "மில்லியனியம்" (ஆயிரம் ஆண்டு காலம்) என்ற பெயர் சூட்டப்பட்டுள்ளது.

அதாவது, மாகியார்கள் ஹங்கேரிக்கு வருகை தந்து ஆயிரம் ஆண்டுகள் நிறைவடைந்த ஆண்டு தான் 1896 ஆகும். லண்டனில் இதே போன்று பழமையான சுரங்க இரயில் சேவை ஒன்று உள்ளது. அதற்கடுத்து உலகின் மிகவும் பழமையான சுரங்க இரயில் சேவை ஹங்கேரியில் உள்ள இந்த மில்லினியம் நிலத்தடி சுரங்கம் தான்.

இதில் சிறப்பு என்னவென்றால், இந்த சுரங்க இரயில் சேவையை இன்னமும் அந்நாட்டு மக்களும், வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் விரும்பி பயன்படுத்தி வருகின்றனர். 2002ல் இந்த இரயில் சேவை யுனெஸ்கோ (UNESCO)-வின் உலக பாரம்பரிய வரிசையில் சேர்க்கப்பட்டது.

வெறும் 4 கிமீ வரையிலான பயணத்தை மட்டுமே ஆரம்ப காலக்கட்டத்தில் இந்த சுரங்க இரயில் சேவை கொண்டிருந்தாலும், 19ஆம் நூற்றாண்டின் இறுதியிலேயே இத்தகைய தொழிற்நுட்ப மைல்கல்லை அடைந்திருப்பது பெரிய சாதனையாக பார்க்கப்படுகிறது.

இப்போது இந்த சுரங்க இரயில் வழித்தடத்தில் மாடர்ன் இரயில்கள் கொண்டுவரப்பட்டுவிட்டாலும், 1960 வரையில் இயங்கிவந்த 10.5 மீட்டர் நீளம் உள்ள இரயில் பெட்டி 46 பயணிகள் அமரும் வகையில் இருந்தது. தற்போது இந்த இரயில் சேவை கொரோனா வைரஸ் பரவலின் எதிரொலியாக தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








