கேரவனை வழங்கி பிரபல நடிகர் உதவி... 4,000 கிமீ பயணித்து கர்ப்பிணியை வீட்டிற்கு அழைத்து வந்த கணவர்...
பிரபல நடிகர் வழங்கிய கேரவனில் 4,000 கிலோ மீட்டர் பயணித்து கர்ப்பிணி மனைவியை கணவர் வீட்டிற்கு அழைத்து வந்திருக்கும் சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பயணங்களை மேற்கொள்வதில் ஆர்வம் உடைய எந்த ஒரு நபரையும், 4,000 கிலோ மீட்டர் லாங் டிரிப் நிச்சயம் உற்சாகப்படுத்தும். 4,000 கிலோ மீட்டர் பயணம் என்பது பல்வேறு வித்தியாசமான இடங்களை நமக்கு காட்டும். அத்துடன் வெவ்வேறு கலாச்சாரங்களை பின்பற்றும் மக்களையும் நமக்கு அறிமுகம் செய்து வைக்கும்.

ஆனால் கொரோனா வைரஸ் (கோவிட்-19) ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையில் மேற்கொள்ளப்படும் அத்தகைய பயணம் எந்தவொரு உற்சாகத்தையும் நமக்கு தராது. ஆனால் ஊரடங்கு அமலில் இருக்கும் சூழலிலும், பல்வேறு தேவைகளுக்காக ஏராளமானோர் தொலை தூர பயணங்களை மேற்கொண்ட வண்ணம்தான் இருக்கின்றனர்.

மறைந்த நடிகர் ராஜன் பி தேவ்வின் மகன் ஜூபில் ராஜன் பி தேவ்விற்கும் அப்படி ஒரு சூழல் ஏற்பட்டுள்ளது. அவர் கேரளாவில் இருந்து குஜராத் சென்று வந்துள்ளார். கர்ப்பமாக உள்ள தனது மனைவியை மீண்டும் அழைத்து வருவதற்காக அவர் குஜராத் சென்று திரும்பியுள்ளார். இந்த பயணம் குறித்த சுவாரஸ்யமான விஷயங்களைதான் இந்த செய்தியில் வழங்கியுள்ளோம்.

இந்த பயணம் தொடர்பாக ஜூபில் கூறுகையில், ''என்னிடம் தயக்கமோ, பயமோ இருக்கவில்லை. எனக்கு எந்த ஆப்ஷனும் வேறு இல்லாமல் இருந்தது. குஜராத் மாநிலம் அகமதாபாத் சென்று, கர்ப்பமாக இருக்கும் எனது மனைவி ரியாவை மீண்டும் கேரளாவிற்கு அழைத்து வந்தாக வேண்டிய சூழலில் நான் இருந்தேன்'' என்றார்.

திடீரென லாக்டவுன் அறிவிக்கப்பட்ட சமயத்தில், ரியா அகமதாபாத்தில் உள்ள இல்லத்தில் அவரது பெற்றோர் உடன் தங்கியிருந்தார். அகமதாபாத் நகரில் உள்ள மருத்துவமனையிலேயே அவருக்கு பிரசவம் பார்த்து விட குடும்பத்தினர் முடிவு செய்திருந்தனர். ஆனால் கொரோனா வைரஸ் பிரச்னை காரணமாக, சூழ்நிலை தலைகீழாக மாற தொடங்கியது.

அகமதாபாத் நகரில் கோவிட்-19 வைரஸ் காட்டுத்தீ போல பரவியது. எனவே அகமதாபாத் நகரில் தொடர்ந்து இருப்பதற்கான நம்பிக்கையும், தைரியமும் ரியாவிடம் இல்லை என்பதை ஜூபில் உணர்ந்து கொண்டார். அகமதாபாத்துடன் ஒப்பிடும்போது கேரளாவில் நிலைமை ஓரளவிற்கு கட்டுக்குள் இருந்தது. எனவே கர்ப்பமாக இருக்கும் மனைவி ரியாவை கேரளா கூட்டி வந்து விட அவர் முடிவு செய்தார்.

இதுகுறித்து ஜூபில் கூறுகையில், ''ரியாவை கேரளாவிற்கு கூட்டி வந்து விட வேண்டும் என்பதில் தீவிரமாக இருந்தேன். ஆனால் ரயில்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டிருந்தன. காரில் கூட்டி வருவது என்பது அவ்வளவு பாதுகாப்பானது இல்லை. எனவே என்ன செய்யலாம்? என்பது பற்றி யோசித்து கொண்டே இருந்தேன்'' என்றார்.

இறுதியாக கேரவன் (Caravan) ஒன்றை வாடகைக்கு எடுத்துக்கொண்டு குஜராத் சென்று திரும்பலாம் என்று ஜூபில் முடிவு செய்தார். இதுகுறித்து ஜூபில் கூறுகையில், கேரவனில் தூங்குவதற்கான வசதி இருக்கும். அத்துடன் வாஷ் ரூம் போன்ற வசதிகளும் இருக்கும். எனவே இந்த டிரிப்பிற்கு கேரவன்தான் சரியான வாகனம் என நான் முடிவு செய்தேன்.

இதன்பின் கேரவன் ஆபரேட்டர்கள் பலரை நான் அணுகினேன். ஆனால் எனது வேண்டுகோளை அனைவரும் நிராகரித்து விட்டனர். மாநில எல்லைகளை கடப்பது சிக்கலான விஷயம் என அவர்கள் என்னிடம் கூறினர்'' என்றார். எனினும் ஜூபிலின் சூழ்நிலையை புரிந்து கொண்டு, மலையாளம் மற்றும் தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான ஜெயராம் தனது கேரவனை அவருக்கு வழங்கியதாக கூறப்படுகிறது.

கேரவன் கிடைத்த உடனேயே ஜூபில் தனது பயணத்தை தொடங்கியுள்ளார். அவரது நண்பர் ராய் ஆண்டனி உடன் வந்துள்ளார். இதுகுறித்து ஜூபில் கூறுகையில், லாக்டவுன் காரணமாக அனைத்து சாலைகளும் மிக அமைதியாக இருந்தன. எனினும் பல இடங்களில் காவல் துறையினர் சோதனை செய்வதை எங்களால் பார்க்க முடிந்தது.

நாங்கள் பெங்களூரை சென்றடைந்ததும், ரியாவின் சகோதரி ரீனுவும், அவரது கணவர் பினோயும் உணவுடன் காத்திருந்தனர். முதல் முறையாக கைகளை குலுக்காமல் நாங்கள் வணக்கம் தெரிவித்து கொண்டோம். கொரோனா அனைத்தையும் மாற்றி விட்டது'' என்றார். இதன்பின்னர் பயணத்தை தொடர்ந்தபோது, ஏராளமான சிக்கல்களை ஜூபில் எதிர்கொள்ள நேரிட்டுள்ளது.

குறிப்பாக புனே-மும்பை எக்ஸ்பிரஸ் ஹைவே-யில் பல சிக்கல் ஏற்பட்டுள்ளன. இது தொடர்பாக ஜூபில் கூறுகையில், ''கேரவனில் பிரச்னை இருப்பது எங்களுக்கு தெரியவந்தது. எனவே வகாட் என்ற இடத்தில், கேரவனை மெக்கானிக் ஷாப்பிற்கு கொண்டு சென்றோம். அங்கு கொரோனா பாதிப்பு அதிகமாக இருந்ததால், மெக்கானிக் ஷாப்கள் மதியம் 3 வரை வரை மட்டுமே திறந்திருந்தன.

உடனடியாக பழுதை சரி செய்ய முடியாது எனக்கூறிய மெக்கானிக், அன்றைய தினம் கேரவனை அங்கேயே விட்டு விட்டு செல்லும்படி கூறினார். நாங்கள் அவரிடம் நிலைமையை எடுத்து சொல்லி பார்த்தோம். ஆனால் அடுத்த நாள் வரை காத்திருப்பதை தவிர வேறு வழியில்லை என்பதை புரிந்து கொண்டோம். கேரவனை முறையாக பார்க் செய்வதற்காக ரிவர்ஸ் எடுத்தபோது மற்றொரு பிரச்னை கிளம்பியது.

பின்னால் நின்று கொண்டிருந்த ஸ்கூட்டர் ஒன்றின் மீது கேரவன் எதிர்பாராத விதமாக மோதியது'' என்றார். ஸ்கூட்டருக்கு பெரிய அளவில் சேதம் இல்லை என்றாலும் கூட, இளைஞர்கள் சிலர் ஜூபில் மற்றும் ராய் ஆண்டனியிடம் மிகப்பெரிய தொகையை கேட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து ஜூபில் கூறுகையில், ''அவர்கள் எங்களிடம் வாக்குவாதம் செய்தனர்.

அத்துடன் அடித்து விடுவதை போல் எங்களை அச்சுறுத்தவும் செய்தனர். எனவே நடிப்புதான் நம்மை காக்கும் என நாங்கள் புரிந்து கொண்டோம். நானும், ராய் ஆண்டனியும் ஏழை டிரைவர்கள் போல் நடித்தோம். எங்கள் முதலாளியை கேரளா அழைத்து வருவதற்காக குஜராத் சென்று கொண்டிருப்பதாக அவர்களிடம் தெரிவித்தோம்.

சாப்பாடு வாங்குவதற்கு கூட எங்களிடம் பணம் இல்லை என நாங்கள் கூறியபோது எங்கள் திட்டம் நன்றாக வேலை செய்தது'' என்றார். இதன்பின் இளைஞர்கள் அங்கிருந்து சென்று விட்டனர். ஆனால் சிறிது நேரத்தில் அவர்கள் மீண்டும் திரும்ப வந்தனர். இந்த முறை ஜூபில் மற்றும் ராய் ஆண்டனிக்காக அவர்கள் உணவு கொண்டு வந்திருந்தனர்.

இதுகுறித்து ஜூபில் கூறுகையில், ''இம்முறை கண்ணீரால் எங்கள் கண்கள் குளமாகி விட்டன. ஆனால் அந்த கண்ணீர் உண்மை. நாங்கள் நடிக்கவில்லை'' என்றார். ஜூபில் மற்றும் ராய் ஆண்டனிக்கு மேலும் ஒரு சில வசதிகளையும் அந்த இளைஞர்கள் செய்து கொடுத்துள்ளனர். இதன்பின் நான்காவது நாளில், கேரவன் அகமதாபாத்தை சென்றடைந்தது.

சாலைகள் வெறிச்சோடி கிடந்ததை பார்க்க ஆச்சரியமாக இருந்தது என ஜூபில் அதனை விவரித்துள்ளார். கேரளாவிற்கு திரும்பி வரும்போது ஜூபில் மற்றும் ராய் ஆண்டனியுடன், ரியா மட்டுமல்லாது அவரது பெற்றோரும் இணைந்து கொண்டனர். இதுகுறித்து ஜூபில் கூறுகையில், திரும்பி வரும் வழியில் எங்களுக்கான உணவை நாங்கள் சமைத்து கொண்டோம்.

இரவு நேரங்களில் வாகனத்தை பார்க் செய்து விடுவோம். கர்ப்பிணியான ரியாவை பார்க்கும்போது, மக்கள் எங்களுக்கு ஒரு சில உதவிகளை செய்தனர். உலகில் இருந்து இரக்கம் மறைந்து விட்டது என்பதை தற்போது நான் நம்பவில்லை. எங்களது குழந்தை வளர்ந்த பின்னர், நீ அதிர்ஷ்டசாலி. நாட்டின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பல நல்ல இதயங்கள் உனக்காக உதவின என நான் கூறுவேன்'' என நெகிழ்ச்சியுடன் கூறினார். இதுகுறித்து Onmanorama செய்தி வெளியிட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








