ஊர் சுற்ற ரொம்ப ஆசை! நண்பன் என்ற பெயரில் இளைஞர் செய்த காரியம் பதற வைக்குது... உஷாரா இருந்துக்கோங்க!!
ஊர் சுற்ற வேண்டும் என்பதற்காக இளைஞர் ஒருவர் செய்த காரியம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலைக் கீழே காணலாம்.

இந்தியாவில் நாளுக்கு நாள் வாகன திருட்டு சம்பவங்கள் அதிகரித்த வண்ணம் இருக்கின்றன. இந்தநிலையில், தெலங்கானா மாநிலம் சைபரபாத்தில் அரங்கேறியதாக வெளிவந்திருக்கும் விநோத திருட்டு சம்பவம் பொதுமக்கள் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விநோத திருட்டு சம்பவத்திற்கு காரணம் என கூறி இன்ஜினியரிங் பட்டதாரி இளைஞர் ஒருவரை போலீஸார் கைது செய்திருக்கின்றனர்.

வாகனங்களை திருடி பயன்படுத்தப்பட்ட வாகன சந்தையில் விற்பனைச் செய்வதே இந்த பொறியியல் பட்டதாரி இளைஞரின் பிரதான வேலை என கூறுகின்றது காவல்துறை. போலீஸார் வெளியிட்டிருக்கும் தகவலின்படி, கைது செய்யப்பட்டிருக்கும் இளைஞரின் பெயர் குதாதி மஹேஷ் குமார் என்பது கண்டறியப்பட்டுள்ளது.

இவரே வாகனங்களை திருடி யூஸ்டு வாகன சந்தையில் விற்று பணம் பார்த்தவர் ஆவார். இவர் மிக அதிக விலைக் கொண்ட வாகனங்களைக் கூட மிக குறைந்த விலையில் விற்றிருக்கின்றார். அந்தவகையில், மிக சமீபத்தில் ராயல் என்பீல்டு டெசர்ட் பைக்கை ஒன்றை திருடிய இவர் அப்பைக்கைக் கொண்டே லடாக்கிற்கு சுற்றுலா சென்று வந்திருக்கின்றார்.

அவ்வாறு, சுற்றுலா சென்று திரும்பிய பின்னரே ஆந்திர போலீஸார் இவரை கொத்தாக பைக்குடன் தூக்கியிருக்கின்றனர். குதாதி மஹேஷ் பயணங்கள் மீது அதிக ஆர்வம் கொண்டவர் என கூறப்படுகின்றது. எதிர்காலத்தில் டிராவல் ஏஜென்சியை அமைப்பதே இவரின் லட்சியம் ஆகும்.

இந்த மாதிரியான நேரத்திலேயே போலீஸார் அவரை கைது செய்திருக்கின்றனர். ஆந்திரா மாநிலத்தின் மேற்கு கோதாவரி பகுதியைச் சேர்ந்தவர் மஹேஷ். இவருக்கு பயணங்களின் மீதான ஆர்வம் இப்போது தொடங்கியது அல்ல. சிறு வயதில் இருந்தே இந்த ஆசை தொடங்கியிருக்கின்றது.

இதன் வெளிப்பாடாக தனக்கு இருக்கும் நண்பர்கள் வட்டாரத்தை அவர் விரிவாக்கத் தொடங்கிக் கொண்டார். குறிப்பாக, வேற்று பகுதி, மாநிலங்களைச் சார்ந்த நண்பர்களை அதிகம் உருவாக்கிக் கொண்டார். இவர்களின் வாயிலாகவே அவரவர்களின் ஊருக்கு செல்வது, இடங்களைப் பார்ப்பது என தனது வாழ்க்கையை பயணங்களுக்காகவே செலவழித்திருக்கின்றார்.
இதுமாதிரியான பயணங்களை மேற்கொள்வதற்கு தன்னிடத்தில் வாகனம் இல்லாதது பெரும் தடையாக இருந்திருக்கின்றது. இந்த மாதிரியான இடத்திலேயே அவரது கிரிமினல் மைண்ட் வேலை செய்ய தொடங்கியிருக்கின்றது. தன்னுடன் நெருக்கமாக பழகும் நண்பர்களின் ஆவணங்களை அவர்களுக்கே தெரியாமல் டூப்ளிகேட் செய்து, அவற்றின் மூலம் வாடகை வாகன நிறுவனங்களிடம் இருந்து தனக்கு தேவையான வாகனங்களை வாடகைக்கு எடுக்கத் தொடங்கினார், மஹேஷ்.

அந்த வாகனங்களையே சில சூழ்ச்சமங்களைச் செய்து யூஸ்டு வாகன சந்தையில் விற்று அவர் பணம் பார்த்திருக்கின்றார். இவரின் இந்த தில்லுமுல்லு வேலைகள் பல மாதங்களாக நடைபெற்று வந்ததாகக் காவல்துறை தெரிவிக்கின்றது. இருப்பினும், அவரது நெருங்கிய நண்பர்களுக்குகூட இந்த விஷயம் தெரியவில்லை.

வாகனங்களை களவாடவும், அதனை யூஸ்டு வாகன சந்தையில் விற்கவும் மகேஷ் கையாண்ட யுக்தி ஒட்டுமொத்த காவல்துறையையுமே மிரட்டும் வகையில் அமைந்திருக்கின்றது. மகேஷ், அதிகம் ஜூம்கார், டிரைவ்ஸி, ரெவ் மற்றும் ராயல் பிரதர்ஸ் ஆகிய நிறுவனங்களிடம் இருந்தே வாடகைக்கு வாகனங்களைப் பெற்று தன் கைவரிசையைக் காட்டியிருக்கின்றார்.

தான் திருடும் வாகனங்களில் இருக்கும் கண்கானிப்பு கருவிகளை நீக்குவதே மகேஷ் குமார் செய்யும் முதல் வேலையாக இருக்கின்றது. இதன் மூலம் வாடகை நிறுவனங்களின் பார்வையில் இருந்து தப்பித்து, அந்த வாகனத்தை வேறொரு பகுதியில் அவர் விற்பனைச் செய்துவிடுவார். இவ்வாறே அவரது வாகன திருட்டு பயணம் தொடர்ந்து வந்திருக்கின்றது. இதுமட்டுமின்றி இவர் மீது செல்போன் பறிப்பு வழக்குகளும் உள்ளன.


Click it and Unblock the Notifications








