சென்னை- பெங்களூர் உட்பட உலகின் டாப் -10 ஹைப்பர்லூப் தடங்கள் அறிவிப்பு!
சென்னை- பெங்களூர் உட்பட உலகின் டாப் -10 ஹைப்பர்லூப் தடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.
ராட்சத வெற்றிட குழாய்களில் அதிவேகத்தில் செல்லும் புதிய போக்குவரத்து நுட்பத்தை ஹைப்பர்லூப் ஒன் நிறுவனம் உருவாக்கி வருகிறது. ஹைப்பர்லூப் என்ற பெயரில் அழைக்கப்படும் இந்த புதிய போக்குவரத்து சாதனத்தை நனவாக்கும் முயற்சிகள் தொடர்ந்து நடந்து வருகின்றன.

ஹைப்பர்லூப் போக்குவரத்து எனும் கனவு ஆரம்ப நிலையில் இருந்தபோதிலும், அதுகுறித்து மாதத்திற்கு ஒன்றிரண்டு முறை வரும் செய்திகள் மிகப்பெரிய அதிர்வுகளை ஏற்படுத்துகின்றன. ஏனெனில், அதிக போக்குவரத்து மிக்க நகரங்களுக்கு இடையிலான பயண நேரத்தை பன்மடங்கு குறைக்கும் என்பதே காரணம்.

இந்த நிலையில், ஹைப்பர்லூப் போக்குவரத்து தேவையான வழித்தடங்கள் குறித்து உலக அளவில் ஒரு ஆய்வை ஹைப்பர்லூப் ஒன் நிறுவனம் நடத்தியது. மேலும், இந்த வழித்தடங்கள் குறித்து விண்ணப்பங்களை அனுப்புமாறும் கோரியிருந்தது.

இதன்படி, உலக அளவில் 2,600 விண்ணப்பங்கள் ஹைப்பர்லூப் ஒன் நிறுவனத்திற்கு வந்தன. அதில், டாப்-10 வழித்தடங்களை ஹைப்பர்லூப் ஒன் நிறுவனம் தேர்வு செய்து அறிவித்துள்ளது. அதில், சென்னை - பெங்களூர் மற்றும் சென்னை- மும்பை என இந்தியாவில் இரண்டு வழித்தடங்கள் இடம்பிடித்துள்ளன.

உலக அளவில் சென்னையை மையப்படுத்தியே இந்த இரண்டு இந்திய வழித்தடங்களையும் டாப்- 10 பட்டியலில் ஹைப்பர்லூப் ஒன் நிறுவனம் தேர்வு செய்து அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதுதவிர, அமெரிக்காவில் செயென்- டென்வர்- பியூப்லோ, சிகாகோ- கொலம்பஸ்- பிட்ஸ்பர்க், மியாமி- ஓர்லேண்டோ, டல்லாஸ்- ஹுஸ்டன் ஆகிய 4 வழித்தடங்கள் இடம்பிடித்துள்ளன.

இங்கிலாந்தில் எடின்பர்க்- லண்டன் இடையிலும், க்ளாஸ்கோ- லிவர்பூல் இடையிலான தடமும் இடம்பெற்றிருக்கிறது. மெக்ஸிகோ நாட்டில் மெக்ஸிகோ சிட்டி- க்வாட்லராஜா நகரங்களுக்கு இடையிலான தடமும், கனடா நாட்டில் டொரன்டோ மற்றும் மான்ட்ரியல் இடையிலான தடமும் டாப்- 10 பட்டியலில் இடம்பெற்றிருக்கின்றன.

இந்த வழித்தடங்களில் நிச்சயமாக ஹைப்பர்லூப் கட்டமைப்பு வருமா என்பது சந்தேகமாக இருந்தாலும், இந்த வழித்தடங்களில் ஹைப்பர்லூப் ஒன் போக்குவரத்து கட்டமைப்பை ஏற்படுத்துவதற்கு ஹைப்பர்லூப் ஒன் நிறுவனம் தீவிர முயற்சிகளை மேற்கொள்ளும்.

ஏற்கனவே, ஆந்திராவின் புதிய தலைநகரமாக உருவாகும் அமராவதி- விஜயவாடா இடையே ஹைப்பர்லூப் தடம் அமைப்பதற்கு அண்மையில் ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த நிலையில், உலகின் டாப்- 10 வழித்தடங்களில் சென்னை- பெங்களூர்- மும்பபை வழித்தடம் இடம்பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

ஹைப்பர்லூப் ஒன் அறிவித்த வழித்தடங்களில் வட இந்திய நகரங்கள் ஒன்றுகூட இடம்பிடிக்கவில்லை. எனினும், டெல்லி- மும்பை, டெல்லி- கோல்கட்டா ஆகிய வழித்தடங்களில் ஹைப்பர்லூப் அமைப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்று தெரிகிறது.

புல்லட் ரயில்களைவிட 4 மடங்கு கூடுதல் வேகத்தில் பயணிக்க வல்ல ஹைப்பர்லூப் சாதனம், இந்தியா போன்ற பரந்த நிலபரப்பு கொண்ட தேசங்களுக்கு வரப்பிரசாதமாக அமையும். மேலும், புல்லட் ரயில் கட்டுமானத்திற்கான செலவீனத்தைவிட இந்த ஹைப்பர்லூப் கட்டமைப்புக்கான செலவீனம் குறைவாக இருக்கும் என்பதுடன், மிக வேகமாக திட்டத்தை செயல்படுத்தும் வாய்ப்பும் உள்ளது.

ஆனால், ஹைப்பர்லூப் போக்குவரத்து தொழில்நுட்பம் ஆரம்ப கட்டத்தில் இருப்பதால், இது முழுமை பெற்று இந்தியா வருவதற்கு நீண்ட கால அளவு தேவைப்படும் என்றே கருதப்படுகிறது.


Click it and Unblock the Notifications








