20 நிமிடங்களில் சென்னை டூ பெங்களூர்... ஹைப்பர்லூப் ஒன் நிறுவனம் வெளியிட்ட புதிய தகவல்கள்!
ஹைப்பர்லூப் போக்குவரத்து கட்டமைப்பை இந்தியாவில் ஏற்படுத்துவதற்கு ஹைப்பர்லூப் ஒன் நிறுவனம் தீவிரமான முயற்சிகளை எடுத்து வருகிறது.
ஹைப்பர்லூப் போக்குவரத்து சாதனத்தை இந்தியாவில் கொண்டு வருவதற்கு ஹைப்பர்லூப் ஒன் நிறுவனம் மிக தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இதற்காக, டெல்லியில் நேற்று பத்திரிக்கையாளர் சந்திப்பிற்கு ஹைப்பர்லூப் ஒன் நிறுவனம் ஏற்பாடு செய்திருந்தது.
அதில், இந்தியாவில் ஹைப்பர்லூப் ஒன் போக்குவரத்து கட்டமைப்பை உருவாக்குவதற்கான திட்டம் குறித்த பல புதிய தகவல்களை அந்த நிறுவனம் வெளியிட்டது. அதனை இந்த செய்தியில் காணலாம்.

சென்னை- பெங்களூர் இடையில் ஹைப்பர்லூப் போக்குவரத்து கட்டமைப்பை ஏற்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இரு நகரங்களுக்கும் இடையிலான 334 கிமீ தூரத்தை ஹைப்பர்லூப் சாதனத்தின் மூலமாக வெறும் 20 நிமிடத்தில் கடந்து விட முடியும் என்று ஹைப்பர்லூப் ஒன் நிறுவனம் தெரிவித்துள்ளது.

பெங்களூர்- திருவனந்தபுரம் நகரங்களுக்கு இடையிலான 736 கிமீ தூரத்தை வெறும் 41 நிமிடங்களில் கடந்து விட முடியும் என்று ஹைப்பர்லூப் ஒன் நிறுவனம் தெரிவித்துள்ளது.

பெங்களூர் வழியாக சென்னையிலிருந்து மும்பைக்கு ஒரு வழித்தடம் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. 1,102 கிமீ தூரமுடைய இந்த வழித்தடத்தை வெறும் 50 நிமிடங்களில் கடந்து விட முடியுமாம்.

டெல்லியிலிருந்து மும்பைக்கு ஜெய்ப்பூர் மற்றும் இந்தூர் வழியாக ஹைப்பர்லூப் போக்குவரத்து கட்டமைப்பை ஏற்படுத்துவதற்கான வழித்தடமும் முன்வைக்கப்பட்டுள்ளது. டெல்லி- மும்பை இடையிலான 1,317 கிமீ தூரத்தை ஹைப்பர்லூப் போக்குவரத்து சாதனம் வெறும் 55 நிமிடங்களில் கடந்துவிடுமாம்.

இந்த திட்டம் இப்போது முன்வைக்கப்பட்டு இருக்கும் நிலையில், இந்த திட்டத்தை நடைமுறைக்கு கொண்டு வருவதற்கு குறைந்தது 5 ஆண்டுகள் ஆகும். ஏனெனில், ஹைப்பர்லூப் போக்குவரத்து சாதனத்திற்கான கட்டமைப்பு இப்போது மாதிரி வடிவத்தில்தான் வைத்து சோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. இது முழுமையான சாதனமாக போக்குவரத்துக்கு ஏற்ற முழுமையை பெறுவதற்கு சில ஆண்டுகள் பிடிக்கும்.

அதேபோன்று, ஹைப்பர்லூப் சாதனத்தை இந்தியாவில் கொண்டு வருவதற்கு சட்ட திட்டங்களிலும் மாறுதல்கள் செய்ய வேண்டியிருக்கும். எனவே, குறைந்தது 5 ஆண்டுகள் கழித்துத்தான் இந்த திட்டம் இந்தியா வருவதற்கான வாய்ப்புகள் உள்ளன. ஹைப்பர்லூப் சாதனத்தின் சிறப்புகளையும் தொடர்ந்து பார்த்துவிடலாம்.

மெட்ரோ ரயிலுக்கு இருப்பது போன்று ராட்சத தூண்களில் அமைக்கப்பட்டு இருக்கும் பிரம்மாண்ட குழாய்களில் கேப்சூல் எனப்படும் போக்குவரத்து சாதனத்தை குறிப்பிட்ட இடைவெளிகளில் இயக்கும் புதுமையான போக்குவரத்து கட்டமைப்புதான் ஹைப்பர்லூப்.

இந்த குழாய்களில் மணிக்கு 1,100 கிமீ வேகத்தில் கேப்சூல் சாதனங்களை இயக்க முடியும். இது வெற்றிடமாக்கப்பட்ட குழாய்களில் இயக்கப்படுவதால், அதிர்வுகள், சப்தம் இருக்காது என்பதால் சொகுசான பயணத்தை பெற முடியும்.

சாதாரண ரயில் போல அல்லாமல், பஸ் போன்று தொடர் இடைவெளிகளில் இயக்க முடிவதால், பயணிகளுக்கு மிகுந்த சவுகரியமாக இருக்கும். அதாவது, நாள் ஒன்றுக்கு பலமுறை குறிப்பிட்ட இரு நகரங்களுக்கு இடையே இந்த ஹைப்பர்லூப் கேப்சூல்களை ஒன்றன்பின் ஒன்றாக தொடர் இடைவெளிகளில் இயக்க முடியும்.

புல்லட் ரயில் கட்டமைப்பை உருவாக்க ஒரு கிலோமீட்டருக்கு ரூ.140 கோடி வரை செலவாகும். இதில் பாதி செலவுதான் ஹைப்பர்லூப் கட்டமைப்பை உருவாக்குவதற்கு செலவாகுமாம். எனவே, டிக்கெட் கட்டணத்தையும் மிக சரியாக நிர்ணயிக்க முடியும்.

நிலநடுக்கம் உள்ளிட்ட இயற்கை சீற்றங்களால், இந்த ஹைப்பர்லூப் கட்டமைப்பு பாதிக்கப்படாது. இது முற்றிலும் தானியங்கி முறையில் இயங்குவதால், மனித தவறுகளால் ஏற்படும் விபத்துக்களும் தவிர்க்கப்படும்.

உலகின் முதல் ஹைப்பர்லூப் போக்குவரத்து கட்டமைப்பு துபாய்- அபுதாபி நகரங்களுக்கு இடையே அமைக்கப்பட உள்ளது. இந்த சாதனம் போக்குவரத்து உலகில் புதிய புரட்சியை படைக்கும் என்று கருதப்படுகிறது.
புதிய பிஎம்டபிள்யூ ஜி310ஆர் பைக்கின் படங்கள்!
புதிய பிஎம்டபிள்யூ ஜி310ஆர் பைக்கின் படங்களை கீழே உள்ள கேலரியில் காணலாம்.


Click it and Unblock the Notifications








