2021-ல் ஹைப்பர்லூப் போக்குவரத்து இந்தியாவில் துவங்க வாய்ப்பு?
ஹைப்பர்லூப் போக்குவரத்தை இந்தியாவில் துவங்குவதற்கு ஹைப்பர்லூப் ஒன் இந்தியா நிறுவனம் தீவிரம் காட்டி வருகிறது. அதன் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.
மணிக்கு 1,200 கிமீ வேகத்தில் பயணிக்கும் ஹைப்பர்லூப் சாதனம் உலக அளவில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. நாள் கணக்கிலான பயணங்களை நிமிடக்கணக்கில் மாற்றும் வல்லமை வாய்ந்த போக்குவரத்தாக ஹைப்பர்லூப் சொல்லப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், இந்தியாவில் ஹைப்பர்லூப் போக்குவரத்து கட்டமைப்பை ஏற்படுத்துவதற்கு, ஹைப்பர்லூப் ஒன் மிக மும்முரமாக இறங்கி உள்ளது. பிரதமர் நரேந்திர மோடியை ஹைப்பர்லூப் ஒன் இந்தியா நிறுவன அதிகாரிகள் பலமுறை சந்தித்து இந்த திட்டத்திற்கு ஒத்துழைப்பு நல்குமாறு வேண்டி உள்ளனர்.

இந்த நிலையில், தற்போது உள்ள முனைப்புடன் செயல்பட்டால் வரும் 2021ம் ஆண்டு இந்தியாவில் ஹைப்பர்லூப் போக்குவரத்து துவங்குவதற்கான வாய்ப்பு இருப்பதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. பிரதமர் தவிர்த்து பல்வேறு மாநில முதல்வர்களையும் ஹைப்பர்லூப் ஒன் இந்தியா அதிகாரிகள் சந்தித்து பேசி உள்ளனர்.

இதனிடையே, ஹைப்பர்லூப் ஒன் அதிகாரிகளின் தீவிரமான செயல்பாடுகளால் புல்லட் ரயிலுக்கு முன்பாக ஹைப்பர்லூப் சாதன போக்குவரத்து துவங்கிவிடும் என்று கருத முடிகிறது. ஏனெனில், அமெரிக்காவில் ஹைப்பர்லூப் ஒன் சோதனை ஓட்டக் கள பணிகள் இறுதிக் கட்டத்தை எட்டிவிட்டது.

அத்துடன், ஹைப்பர்லூப் கட்டமைப்பில் ராட்சத குழாய்களுக்குள் செலுத்துவதற்கான பாட் எனப்படும் பயணிகள் அமர்ந்து செல்வதற்கான போக்குவரத்து சாதனம் தயாரிக்கும் பணிகளும் தீவிரமாக நடந்து வருகின்றன.

இந்த நிலையில், பெங்களூரை சேர்ந்த வொர்க்பென்ச் புரொஜெக்ட்ஸ் என்ற நிறுவனம் ஹைப்பர்லூப் பாட் சாதனத்தை தயாரிக்கும் வாய்ப்பை பெற்றிருக்கிறது. வரும் 22ந் தேதி இந்த பாட் சாதனம் தயாரிக்கும் பணிகளை வொர்க்பென்ச் நிறுவனம் துவங்க இருக்கிறது.

இந்த பாட் சாதனம் அமெரிக்காவில் அமைக்கப்பட்டு வரும் சோதனை ஓட்டக் களத்தில் வைத்து சோதனை செய்யப்படும். அடுத்த சில மாதங்களில் இந்த பாட் சாதனம் தயாரிக்கப்பட்டு அமெரிக்கா செல்ல இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பெங்களூர் வொர்க்பென்ச் நிறுவனம் தயாரிக்கும் பாட் சாதனம் மணிக்கு 460 கிமீ வேகம் வரை செலுத்தி சோதனை செய்யப்படும். அதன்பிறகு, தயாரிக்கப்படும் பாட் சாதனங்கள் படிப்படியாக வேகம் அதிகரிக்கப்படும்.

மணிக்கு 1,000 கிமீ முதல் 1,200 கிமீ வேகம் வரை செல்லும் வகையில் இந்த போக்குவரத்து சாதனம் உருவாக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், தலைநகர் டெல்லியில் இருந்து ஜெய்பூர், இந்தூர் வழியாக மும்பைக்கு ஒரு வழித்தடத்திலும், தென் இந்தியாவில் சென்னை- பெங்களூர் இடையே ஹைப்பர்லூப் போக்குவரத்தை துவங்குவதற்கு முன்னுரிமை அளிக்க ஹைப்பர்லூப் ஒன் இந்தியா நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

டெல்லி- மும்பை இடையிலான தூரத்தை 80 நிமிடங்களிலும், சென்னை- பெங்களூர் இடையிலான தூரத்தை இந்த ஹைப்பர்லூப் சாதனம் வெறும் 21 நிமிடங்களில் கடந்துவிடும் என்று ஹைப்பர்லூப் ஒன் இந்தியா நிறுவனம் தெரிவிக்கிறது. இதுதவிர, நாடு முழுவதும் முக்கிய நகரங்களை ஹைப்பர்லூப் மூலமாக இணைக்கவும் திட்டங்களை அறிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications