சென்னை- பெங்களூர் இடையே ஹைப்பர்லூப் போக்குவரத்து... எலான் மஸ்க் திட்டம்!
சென்னையிலிருந்து பெங்களூருக்கு ஹைப்பர்லூப் போக்குவரத்து கட்டமைப்பை ஏற்படுத்த ஹைப்பர்லூப் ஒன் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
இந்தியாவில் முதலாவதாக சென்னையிலிருந்து பெங்களூருக்கு ஹைப்பர்லூப் போக்குவரத்து சாதன கட்டமைப்பை நிறுவுவதற்கு ஹைப்பர்லூப் ஒன் நிறுவனத்தின் தலைவர் எலான் மஸ்க் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இந்த போக்குவரத்து கட்டமைப்பு நிறுவப்பட்டால், வெறும் 30 நிமிடங்களில் சென்னையிலிருந்து பெங்களூர் நகரை அடைய முடியும். இதுகுறித்து விரிவானத் தகவல்களை தொடர்ந்து காணலாம்.

மணிக்கு 1,200 கிமீ வேகத்தில் பயணிக்க வல்ல ஹைப்பர்லூப் என்ற புதிய வகை போக்குவரத்து சாதன கட்டமைப்பு திட்டத்தை அமெரிக்காவை சேர்ந்த ஹைப்பர்லூப் ஒன் நிறுவனத்தின் தலைவர் எலான் மஸ்க் வெளியிட்டார். இந்த திட்டத்தை செயல்பாட்டுக்கு கொண்டு வருவதற்கான முயற்சிகளில் 250 பொறியாளர்கள் அடங்கிய குழு ஈடுபட்டுள்ளது. அதில், 25 பேர் இந்திய பொறியாளர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

முதல்முறையாக துபாய்- அபுதாபி இடையே இந்த ஹைப்பர்லூப் போக்குவரத்து கட்டமைப்பு உருவாக்கப்பட உள்ளது. இந்த நிலையில், ஹைப்பர்லூப் ஒன் நிறுவனம் இந்தியாவிலும் ஹைப்பர்லூப் போக்குவரத்து கட்டமைப்பை ஏற்படுத்த விருப்பம் தெரிவித்தது.

சமீபத்தில் ஹைப்பர்லூப் ஒன் நிறுவனம் வெளியிட்டிருக்கும் டிவிட்டில் சென்னை- பெங்களூர், சென்னை- மும்பை, பெங்களூர் -திருவனந்தபுரம் மற்றும் மும்பை- டெல்லி ஆகிய வழித்தடங்களில் ஹைப்பர்லூப் போக்குவரத்து கட்டமைப்பை அமைக்க விருப்பம் தெரிவித்துள்ளது. ஆனால், சென்னை- பெங்களூர் வழித்தடத்தில் முதலாவதாக அமைக்க அந்த நிறுவனம் முடிவு செய்து வைத்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

குறிப்பாக, சென்னை- பெங்களூர் வழித்தடம் எலான் மஸ்க் தயாரித்திருக்கும் பட்டியலில் முதன்மையாக இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த திட்டத்தை இந்தியா கொண்டு வருவதற்கு மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சகம் தீவிர முனைப்பு காட்டி வருகிறது.

ஹைப்பர்லூப் சாதனம் என்பது விமானத்தை விட விரைவானது. வெற்றிடமாக்கப்பட்ட ராட்சத குழாய்களில் ரயில் பெட்டி போன்ற பாட் சாதனங்கள் ஒன்றன் பின் ஒன்றாக மணிக்கு 1,200 கிமீ வேகத்தில் பயணிக்கும். உதாரணத்திற்கு, சென்னையிலிருந்து பெங்களூர் நகருக்கு ஹைப்பர்லூப் சாதனம் அமைக்கப்பட்டால், வெறும் 30 நிமிடங்களில் சென்றுவிட முடியும்.

சென்னையிலிருந்து பெங்களூருக்கு வெறும் 38 மாதங்களில் ஹைப்பர்லூப் போக்குவரத்து கட்டமைப்பை ஏற்படுத்திவிட முடியும். இந்த ஹைப்பர்லூப் கட்டமைப்பில் இடம்பெறும் ராட்சத தூண்கள் நிலநடுக்கம் மற்றும் இதர பிரச்னைகளால் எந்த சேதமும் ஏற்படாது.

புல்லட் ரயில் போக்குவரத்தை அமைக்க ஒரு கிலோமீட்டர் தூரத்திற்கு ரூ.300 கோடி வரை செலவாகும். ஆனால், ஹைப்பர்லூப் போக்குவரத்துக்கான கட்டமைப்புக்கு ஒரு கிலோமீட்டருக்கு ரூ.72 கோடி மட்டுமே செலவாகும்.

இந்த நிலையில், அரசின் வழிகாட்டுதல்களின்படி, இந்தியாவில் டிக்கெட் கட்டணத்தை நிர்ணயிப்பது என்பது மிகுந்த சவாலானதாக இருக்கும் என்று தெரிவிக்கப்படுகிறது. ஏனெனில், தற்போது ரூபாய் மதிப்பின் அடிப்படையில் கட்டுமான செலவை கணக்கிடும்போது ரூ.6,000 வரை ஒரு வழிக் கட்டணமாக நிர்ணயிக்கப்பட வாய்ப்புள்ளது.

சென்னை- பெங்களூர் இடையே ரூ.6,000 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டால், அது வர்த்தக ரீதியில் வெற்றிகரமாக இருக்காது என்பதால், மத்திய அரசு தயக்கம் காட்டி வருவதாகவும் ஹைப்பர்லூப் ஒன் நிறுவனம் தெரிவித்துள்ளது.

எனினும், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியிலும், விரைவான போக்குவரத்திலும் ஹைப்பர்லூப் போக்குவரத்து சாதனம் மிகச் சிறந்ததாக இருக்கும் என்று கருதப்படுகிறது. விரைவான, பாதுகாப்பான பயணத்திற்கும் இந்த ஹைப்பர்லூப் போக்குவரத்து மிகச் சிறந்ததாக இருக்கும்.
2017 கவாஸாகி நின்ஜா 650 பைக்கின் ஆல்பம்!
2017 கவாஸாகி நின்ஜா 650 ஸ்போர்ட்ஸ் டூரர் பைக்கின் படங்களின் தொகுப்பை கீழே உள்ள கேலரியில் கண்டு ரசிக்கலாம்.


Click it and Unblock the Notifications








