Hyundai Creta கார் ஓனர் டோல்கேட் கட்டணத்தில் இருந்து தப்பிக்க செய்த காரியம்... வெச்சு செஞ்ச புனே போலீஸார்!!
போலி எம்.எல்.ஏ ஸ்டிக்கர் உடன் ஹூண்டாய் க்ரெட்டா (Hyundai Creta) காரை ஓட்டிவந்த 22 வயதான இளைஞர் ஒருவர் மீது போலீஸார் அதிரடியாக வழக்கு பதிவு செய்துள்ளனர். யார் அந்த இளைஞர்? அவருக்கு விதிக்கப்பட்டுள்ள அபராத தொகை எவ்வளவு என்பது குறித்த விபரங்களை இனி பார்க்கலாம்.
போக்குவரத்து விதிமுறைகளை முறையாக பின்பற்ற போலீஸாரின் அதிரடி நடவடிக்கைகளும், அவர்களது துரிதமான செயல்பாடுகளும் கட்டாயம் தேவைப்படக்கூடிய ஒன்றாக உள்ளது. அவ்வாறு போலீஸாரின் அதிரடி தண்டனைகளுக்கு உள்ளான வாகன ஓட்டிகள் பலரை பற்றி இதற்குமுன் நமது டிரைவ்ஸ்பார்க் தமிழ் செய்தித்தளத்தில் பார்த்துள்ளோம். அந்த வரிசையில், நீண்ட நாட்களாக மாநில சட்டமன்ற உறுப்பினர் (எம்.எல்.ஏ) ஸ்டிக்கர் உடன் காரை இயக்கி வந்த நபரை புனே போலீஸார் கையும் களவுமாக பிடித்துள்ளனர்.

கடந்த ஏப்ரல் 15ஆம் தேதி புனே போலீஸார் வழக்கம்போல் கார்களில் கருப்பு நிற டிண்ட் கண்ணாடிகளை பயன்படுத்திவரும் வாகன ஓட்டிகளை பிடிக்க சோதனையில் ஈடுப்பட்டு கொண்டிருந்தனர். அப்போது, காலேவாடி பகுதியை சேர்ந்த ரிதுராஜ் கெய்க்வாட் என்ற இளைஞர் தனது ஹூண்டாய் க்ரெட்டா காருடன் ஜேஜுரி சோதனை மையத்தில் போலீஸாரிடம் சிக்கியுள்ளார்.
காரின் முன்பக்க விண்ட்ஷீல்டில், இது அரசியல் செல்வாக்கு கொண்டவரின் வாகனம் என்பதை குறிக்கும் வகையிலான ஸ்டிக்கர் இருப்பதை முதலாவதாக போலீஸார் கண்டறிந்துள்ளனர். இதனால் கார் யார் பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளது என்பதை அறியும் முயற்சியில் போலீஸார் இறங்கினர். அப்போதுதான் அவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்துள்ளது. ஏனெனில் எம்.எல்.ஏ ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட அந்த க்ரெட்டா காருக்கு அரசியல்வாதிகள் யாரும் உரிமையாளர் கிடையாது.
காரை ஓட்டிவந்த ரிதுராஜ் கெய்க்வாட்டின் பெயரில் தான் இந்த கார் ஆர்டிஓ-வில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இருப்பினும், ரிதுராஜிடம் அடையாளம் அட்டையை காண்பிக்கும்படி போலீஸார் கேட்டுள்ளனர். அதனை வழங்கவும் ரிதுராஜ் தவறிவிட்டார். இதனால் போலி எம்.எல்.ஏ ஸ்டிக்கர் உடன் ரிதுராஜ் கெய்க்வாட் காரை இயக்கி வருவதை உறுதிப்படுத்தி கொண்ட போலீஸார், காரில் ஒட்டப்பட்டு இருந்த ஸ்டிக்கரை நீக்கியதுடன், ரிதுராஜ் மீது வழக்கு பதிவு செய்தனர்.
மேலும், மோட்டார் வாகன சட்டத்தின்படி ரூ.6,500 அபராதத்தையும் ரிதுராஜ் மீது போலீஸார் விதித்துள்ளனர். இவற்றுடன், 22 வயது மட்டுமே ரிதுராஜை போலீஸார் கடுமையாக எச்சரித்துள்ளனர். ஏனெனில், போலி ஸ்டிக்கரை உபயோகித்து இந்த இளைஞர் கடந்த பல மாதங்களாக சுங்க கட்டணம், பார்க்கிங் கட்டணங்கள் மற்றும் மற்ற கட்டணங்களை செலுத்தாமல் மோசடி செய்து வந்துள்ளதை போலீஸார் கண்டறிந்துள்ளனர்.
எம்.எல்.ஏ வாகனம் என கூறி முன்பதிவு செய்யப்பட்ட பார்க்கிங் பகுதிகளிலும் காரை பார்க் செய்து ரிதுராஜ் ஜெய்க்வாட் அடாவடி செய்து வந்துள்ளதாகவும் போலீஸார் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து முதன்மை போலீஸ் இன்ஸ்பெக்டர் ஒருவர் கூறுகையில், "உள்ளூர் இளைஞர் ஒருவர் தனது க்ரெட்டா காரில் போலி எம்.எல்.ஏ ஸ்டிக்கரை பயன்படுத்தி இருப்பது எங்களுக்கு தெரியவந்ததை அடுத்து, அவர் மீது ஐபிசி 419 சட்டம் 1950இன் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளோம், மேலும் விசாரணை நடந்து வருகிறது" என்றார்.
டிரைவ்ஸ்பார்க்கின் கருத்து: இவ்வாறு கட்டணங்களில் இருந்து தப்பிப்பதற்காக போலி அடையாள அட்டையை பயன்படுத்தி மோசடியில் ஈடுப்படுவோரை அவ்வப்போது செய்திகளில் பார்த்து வருகிறோம். ஆனால் 22 வயது மட்டுமே ஆன ஓர் இளைஞர் இவ்வாறான செயலில் கடந்த பல மாதங்களாக ஈடுப்பட்டு வருவதாக போலீஸாரே தெரிவித்து இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. இவ்வாறான செயல்களை தடுக்க, ரூ.6,500 அபராதம் கூட போதாது என்றுதான் நாங்கள் கூறுவோம்.


Click it and Unblock the Notifications








