208km/h வேகத்தில் இந்த சாகசம் எல்லாம் அவசியம் தானா!! இவருக்கு எல்லாம் எப்படி லைசன்ஸ் கொடுத்தாங்க?
உலகில் அதிக எண்ணிக்கையில் சாலை விபத்துகள் நடைபெறும் நாடுகளுள் நமது இந்தியாவும் ஒன்றாக உள்ளது. இதற்கு பல காரணங்கள் கூறப்பட்டாலும், முக்கியமான காரணங்களுள் ஒன்று அதிவேகமான பயணம் ஆகும். அதிகப்பட்சமாக இந்திய விரைவுச்சாலைகளில் மணிக்கு 120கிமீ வேகத்திற்கு செல்லலாம் என அனுமதிக்கப்படுகிறது.
அதாவது, இந்திய சாலைகளில் ஓட்டுவதற்கு அனுமதிக்கப்பட்ட அதிகப்பட்ச வேக வரம்பு 120km/h ஆகும். நகரங்களுக்குள் 50, 60km/h வேகம் தான் அதிகப்பட்ச வேகமே. 120km/h வேகத்தை கூட விரைவுச்சாலையில் முன்னால் செல்லும் வாகனத்தை முந்துவதற்காக மட்டுமே பயன்படுத்த வேண்டும். மற்றப்படி, இந்திய விரைவுச்சாலைகளில் 110- 115kmph வேகம் தான் அதிகப்பட்ச வேகம் ஆகும்.

தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் இந்த அதிகப்பட்ச வேக வரம்பு இன்னும் குறைவாகவே நிர்ணயிக்கப்படுகிறது. ஆனால், இங்கு ஒரு ஹூண்டாய் கிரெட்டா என்-லைன் (Hyundai Creta N-Line) கார் டிரைவர் ஒருவர் மணிக்கு சுமார் 208kmph வேகத்தில் காரை பறக்க விட்டுள்ளார். அத்துடன், அப்போது எடுக்கப்பட்ட பதைபதைக்க வைக்கும் வீடியோ ஒன்றையும் அவர் வெளியிட்டுள்ளார்.
தேசிய நெடுஞ்சாலையாக இருந்தாலும், 208kmph வேகம் என்பது மிகவும் அதிகமாகும். இதைவிட அதிர்ச்சியாக்கும் விஷயம் என்னவென்றால், இந்த கிரெட்டா என்-லைன் கார் டிரைவர் நெடுஞ்சாலையின் ஓரத்தில் 208kmph வேகத்தில் சென்றுள்ளார். பொதுவாகவே, சாலையில் வலதுப்பக்கத்தில் தான் வாகனங்கள் வேகமாக ஓட்டப்படுவது வழக்கம். ஏனெனில், சாலையின் இடதுப்பக்கத்தில் பாதசாரிகள், இருசக்கர வாகன ஓட்டிகளில் மெதுவான வேகத்தில் சென்றுக் கொண்டிருப்பர்.

தற்போது இணையத்தில் வெளியாகியுள்ள வீடியோவில் கூட, இந்த கிரெட்டா என்-லைன் கார் டிரைவர் 208kmph வேகத்தில் சென்றபோது மிகவும் அருகில் ஒருவர் மெதுவான வேகத்தில் ஸ்கூட்டரில் செல்வதை காணலாம். சில நேரங்களில் சாலையின் மற்ற லேன்களுக்கும் இந்த நபர் அசால்ட்டாக மாறி மாறி செல்வதையும் வீடியோவில் பார்க்க முடிகிறது. இது முற்றிலும் தவறானது ஆகும்.
நெடுஞ்சாலையில் ஒரு லேனில் இருந்து இன்னொரு லேனுக்கு மாறுவதற்கு முன்னர் எச்சரிக்கைகளை பின்னால் வரும் வாகன ஓட்டிகளுக்கு தெரிவிக்க வேண்டும். முடிந்தவரையில், அவ்வப்போது லேன்களை மாற்றாமல் வாகனம் ஓட்டவே முயற்சிக்க வேண்டும். ஆனால் இந்த கிரெட்டா என்-லைன் கார் டிரைவர் அதை எல்லாம் மதிக்காமல் சென்றதினால்தான் ஒருகட்டத்தில் ஹூண்டாய் ஐ20 (Hyundai i20) கார் ஒன்றை முந்தும்போது மிகவும் நெருக்கமாக, அந்த கார் உடன் மோதுவதுபோல் சென்றுள்ளார்.
பதற்றத்தில் ஸ்டேரிங் சக்கரத்தை கொஞ்சம் வேகமாக திருப்பி இருந்தால், நிச்சயமாக அந்த ஹூண்டாய் ஐ20 கார் உடன் இவர் மோதி இருப்பார். அதேபோல், சாலையின் ஓரத்தில் வேகமாக சென்ற சமயத்தில் மாருதி சுஸுகி வேகன்ஆர் (Maruti Suzuki WagonR) கார் ஒன்றுடன் மோதுவதை தவிர்க்க, மொத்தமாக நெடுஞ்சாலையில் இருந்து விலகி பாதசாரிகள் மற்றும் இருசக்கர வாகன ஓட்டிகளுக்கான பாதையில் இந்த நபர் காரை ஓட்டியுள்ளார்.
அத்தகைய பாதைக்கு கிரெட்டா என்-லைன் போன்ற 4-சக்கர வாகனத்தை கொண்டு செல்வதும் தவறானது ஆகும். ஏனெனில், அங்கிருந்து நீங்கள் மீண்டும் மெயின் ஹைவேக்குள் நுழையும்போது விபத்துகள் ஏற்படுவதற்கு வாய்ப்புள்ளது. இத்துடன் இவர் செய்த அட்டூழியங்கள் நிற்கவில்லை. சில நேரங்களில் இவர் ஒரு கையால் கார் ஓட்டுவதையும் வீடியோவில் பார்க்க முடிகிறது. அதுவும் 208kmph வேகத்தில் சென்றுக் கொண்டிருக்கும்போது.
மற்றொரு கை மொபைல் போனில் படம் பிடித்துக் கொண்டிருந்தது. காரின் டாப்-ஸ்பீடில் ஒரு கையில் டிரைவிங் மிக பெரிய தவறு ஆகும். ஒரு சிறிய தவறு கூட பெரிய இழப்புகளை ஏற்படுத்தக் கூடும். 208km/h வேகத்தில் செல்லும்போது ஸ்டேரிங் சக்கரம் அதிக எடை உள்ளதுபோல் இருக்கும். அதனை கண்ட்ரோல் செய்ய இரு கைகள் கட்டாயம் அவசியம் ஆகும். ஆனால், இவற்றை பற்றி எல்லாம் கவலைப்படாத இந்த நபர் 208kmph வேகத்தில் இருந்து நீண்ட நேரமாக இறங்கவே இல்லை.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: 208kmph என்பது கிரெட்டா என்-லைன் காரின் அதிகப்பட்சமாக வேகம் ஆகும். அதாவது, அதற்கும் மேலாக வேகமாக செல்ல முடியாது. காரின் டாப்-ஸ்பீடை எட்டுவதாக கூறிதான் இந்த வீடியோவை இந்த கிரெட்டா என்-லைன் கார் டிரைவர் பதிவிட்டுள்ளார். இந்த நபரையும், அவரது இந்த ஹூண்டாய் காரையும் போலீஸார் பறிமுதல் செய்வதற்கு அதிக வாய்ப்புள்ளது. என்ன நடக்க போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.


Click it and Unblock the Notifications








