இப்பதான் லான்ச் ஆச்சு! அதுக்குள்ள விபத்தா! டாடா ஷோரூம் முன்னாடி நடந்ததால் சந்தேகம் கிளப்பும் நெட்டிசன்கள்!
இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியிருந்த கார்களில் ஒன்று ஹூண்டாய் எக்ஸ்டர் (Hyundai Exter). இது மைக்ரோ எஸ்யூவி (Micro SUV) ரகத்தை சேர்ந்த கார் ஆகும். ஹூண்டாய் எக்ஸ்டர் கார், வெகு சமீபத்தில்தான் இந்திய சந்தையில் அதிகாரப்பூர்வமாக விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது.
ஹூண்டாய் நிறுவனம் எக்ஸ்டர் காரை விற்பனைக்கு அறிமுகம் செய்த கையோடு, டெலிவரி பணிகளையும் தொடங்கி விட்டது. இது டாடா பன்ச் (Tata Punch) காருக்கு நேரடி போட்டியாக களமிறக்கப்பட்டுள்ள கார் ஆகும். டாடா பன்ச் கார், குளோபல் என்சிஏபி (Global NCAP) மோதல் சோதனைகளில் முழுமையாக 5 ஸ்டார் ரேட்டிங் (5-star Rating) பெற்றுள்ளது.

எனவே ஹூண்டாய் நிறுவனமும் எக்ஸ்டர் காரில் ஏராளமான பாதுகாப்பு வசதிகளை வாரி வழங்கியுள்ளது. ஆனால் ஹூண்டாய் எக்ஸ்டர் காரின் குளோபல் என்சிஏபி மோதல் சோதனை முடிவுகள் எதுவும் இன்னும் வெளியாகவில்லை. இருப்பினும் டாடா பன்ச் போலவே, ஹூண்டாய் எக்ஸ்டர் காரும் 5 ஸ்டார் பாதுகாப்பு ரேட்டிங் பெறலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த சூழலில் புத்தம் புதிய ஹூண்டாய் எக்ஸ்டர் கார் விபத்தில் சிக்கிய வைரல் வீடியோ (Viral Video) ஒன்று சமூக வலை தளங்களில் தற்போது மிகவும் வேகமாக பரவி வருகிறது. யூடியூப் (YouTube) தளத்தில் இந்த வீடியோ பதிவேற்றப்பட்டுள்ளது. ஹூண்டாய் எக்ஸ்டர் கார் கட்டுப்பாட்டை இழந்த காரணத்தால், டிவைடரில் மோதி நிற்பதை இந்த வீடியோவில் நம்மால் பார்க்க முடிகிறது.

பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்த சம்பவம் குஜராத் மாநிலத்தில் நடைபெற்றதாக கூறப்படுகிறது. ஆனால் இது வாடிக்கையாளர் ஒருவருக்கு டெலிவரி செய்யப்பட்ட காரா? அல்லது டெஸ்ட் டிரைவ் காரா? என்பது உறுதியாக தெரியவில்லை. எனினும் இது புத்தம் புதிய கார் என்பதில் நமக்கு துளியும் சந்தேகம் இல்லை.
டிரைவர் கட்டுப்பாட்டை இழந்த காரணத்தால், இந்த ஹூண்டாய் எக்ஸ்டர் கார் விபத்தில் சிக்கியுள்ளது. ஆனால் இந்த விபத்திற்கு என்ன காரணம்? என்பது உறுதியாக தெரியவில்லை. வீடியோவை பார்க்கும்போது நமக்கு ஒரு விஷயம் தெரியவருகிறது. மழை காரணமாக சாலை மிகவும் ஈரமாக உள்ளது.
அந்த சமயத்தில் டிரைவர் சற்று அலட்சியமாக ஓட்டிய காரணத்தால், கார் அவரின் கட்டுப்பாட்டை இழந்து விபத்தில் சிக்கியிருப்பதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. அதேபோல் காருக்கு உள்ளே எத்தனை பேர் இருந்தனர்? அவர்களுக்கு காயம் ஏற்பட்டுள்ளதா? என்பதும் வீடியோவில் குறிப்பிடப்படவில்லை என்பதும் கவனிக்க வேண்டிய விஷயமாக உள்ளது.
இந்திய சந்தையில் ஹூண்டாய் எக்ஸ்டர் காரின் ஆரம்ப விலை (Price) வெறும் 6 லட்ச ரூபாய் மட்டுமே. அதே நேரத்தில் இந்த காரின் டாப் வேரியண்ட்டின் விலை 10.10 லட்ச ரூபாயாக மட்டுமே இருக்கிறது. இவை எக்ஸ் ஷோரூம் விலையாகும். இந்த விலைக்கு இது மிகவும் சிறப்பான காராக கருதப்படுகிறது.
எனவே ஹூண்டாய் எக்ஸ்டர் காருக்கு இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவிலான வரவேற்பு கிடைத்து வருகிறது. இதன் காரணமாக வரும் மாதங்களில் டாடா பன்ச் காருக்கு ஹூண்டாய் எக்ஸ்டர் கார் விற்பனையில் மிக கடுமையான நெருக்கடியை ஏற்படுத்துவதற்கான வாய்ப்புகள் மிகவும் பிரகாசமாக இருக்கின்றன.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்த விபத்திற்கான காரணம் என்னவென்று உறுதியாக தெரியாவிட்டாலும் கூட, ஈரமான சாலையில் டிரைவர் அலட்சியமாக ஓட்டியது ஒரு முக்கியமான காரணியாக இருக்கலாம் என கருதப்படுகிறது. எனவே ஈரமான சாலைகளில் வாகனம் ஓட்டும்போது மிதமான வேகத்திலும், கவனமாகவும் பயணம் செய்யுங்கள். தற்போது மழைக்காலம் என்பதால், எச்சரிக்கையுடன் இருங்கள்.
இங்கே குறிப்பிட வேண்டிய மற்றொரு விஷயம் என்னவென்றால், டாடா ஷோரூமிற்கு முன்பாக இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. எனவே டாடா பன்ச் காருக்கு தனது கட்டுமான தரத்தை நிரூபித்து காட்டுவதற்காக ஹூண்டாய் எக்ஸ்டர் கார் விபத்தில் சிக்கியதாக நெட்டிசன்கள் சிலர் வேடிக்கையாக குறிப்பிட்டு வருகின்றனர்.


Click it and Unblock the Notifications








