காஞ்சிபுர மாவட்ட மக்களுக்காக ஹூண்டாயின் 50 ஆக்ஸிஜன் செறிவூட்டிகள்!! கலெக்டரிடம் ஒப்படைப்பு...!
உலகின் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனங்களுள் ஒன்றான ஹூண்டாய் மோட்டார்ஸ் காஞ்சிபுர மாவட்டத்திற்காக 50 ஆக்ஸிஜன் செறிவூட்டிகளை அந்த மாவட்ட கலெக்டரிடம் வழங்கியுள்ளது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதை பார்த்து கொண்டு தான் வருகிறோம். குறிப்பாக, முதல் அலையை காட்டிலும் இரண்டாவது அலை முழு இந்தியாவையும் தலைக்கீழாக புரட்டி போட்டுள்ளது என்று தான் சொல்ல வேண்டும்.

இதனை சமாளிக்க மத்திய, மாநில அரசாங்கங்கள் பல்வேறு விதமான தடுப்பு நடவடிக்கைகளை சூழ்நிலைக்கு ஏற்ப மேற்கொண்டு வருகின்றன. இருப்பினும் அரசாங்கங்கள் மட்டுமே முயற்சிகளை மேற்கொண்டு வந்தால் தற்போதைய அசாதாரண சூழலை தீர்க்க முடியாது.

தனியார் நிறுவனங்களும் மக்களுக்கு உதவ வந்தால் தான் இந்த சூழலை விரைவாக கடக்க முடியும். சில கார்ப்பிரேட் நிறுவனங்கள் கொரோனா வைரஸ் பரவ துவங்கியதில் இருந்தே தனது ஆதரவு கரங்களை நீட்டி வருகின்றன. அவ்வாறான நிறுவனங்களுள் ஒன்று தான் ஹூண்டாய்.

ஹூண்டாய் மோட்டார்ஸுக்கு தமிழகத்தில் ஸ்ரீபெரும்பத்தூரில் தொழிற்சாலைகள் உள்ளன. இதனால் தான் என்னவோ, காஞ்சிப்புர மாவட்டத்திற்காக 50 ஆக்ஸிஜன் செறிவூட்டிகளை மாவட்ட கலெக்டர் மகேஷ்வரி ரவிக்குமாரிடம் ஹூண்டாய் நிறுவன அதிகாரிகள் நேரில் சென்று வழங்கியுள்ளனர்.

இந்த 50 ஆக்ஸிஜன் செறிவூட்டிகள் கலெக்டரின் ஆணைக்கிணங்க காஞ்சிபுரத்தில் உள்ள மருத்துவமனைகளுக்கு பிரித்து அனுப்பி வைக்கப்படவுள்ளன. தற்சமயம் 'மீண்டும் வாழ்க்கைக்கு திரும்புதல்' என்ற பெயரிலான திட்டம் ஒன்றை ஹூண்டாய் செயல்படுத்தி வருகிறது.

மிகவும் முக்கியமான ஆக்ஸிஜன் தயாரிப்புகளை இந்தியாவில் கொரோனா வைரஸால் மிகவும் பாதிக்கப்பட்ட மாநில மற்றும் நகர மக்களுக்காக உடனடியாக வழங்குவதே ஹூண்டாயின் இந்த திட்டத்தின் நோக்கமாகும்.
இந்த வகையில் தற்போது காஞ்சிபுரம் மாவட்ட மக்களுக்காக 50 ஆக்ஸிஜன் செறிவூட்டிகளை வழங்கியது குறித்து ஹூண்டாய் மோட்டார் இந்தியா அறக்கட்டளையின் அறங்காவலர் ஸ்டீபன் சுதாகர் பேசுகையில், ஹூண்டாயின் 'மீண்டும் வாழ்க்கைக்கு திரும்புதல்' திட்டத்தின்படி, பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு முக்கிய உயிர்பாதுகாப்பு ஆக்ஸிஜன் தயாரிப்புகளை விரைவாக வழங்குவதை உறுதி செய்கின்றோம்.
மாவட்டத்தில் உள்ள மருத்துவமனைகளுக்கு பிரித்து வழங்குவதற்காக 50 ஆக்ஸிஜன் செறிவூட்டிகளை காஞ்சிபுர மாவட்ட கலெக்டரிடம் வழங்கியுள்ளோம். பாதிக்கப்பட்ட மக்கள் இந்த தயாரிப்புகள் மூலம் பயனடைய முடியும் என்பதையும், பாதிக்கப்பட்ட மாநிலங்கள் இயல்பு நிலைக்கு திரும்ப உதவுவதையும் உறுதி செய்வது எங்களது முழுமையான உறுதிப்பாடாகும் என தெரிவித்தார்.
ஹூண்டாய் கேர்ஸ் 3.0 கோவிட்-19 நிவாரண முயற்சியின் கீழ், மகாராஷ்டிரா, தமிழ்நாடு, ஹரியானா, டெல்லி மற்றும் தெலுங்கானா என பல்வேறு மாநிலங்களுக்கு ஹூண்டாய் மோட்டார் இந்தியா அறக்கட்டளையின் மூலம் முக்கியமான மருத்துவ உபகரணங்கள் தொடர்ந்து விரைவாக வழங்கப்பட்டு வருகின்றன.


Click it and Unblock the Notifications








