பணியாளர்களின் வயிற்றில் பாலை வார்த்த ஹூண்டாய்!! விடுமுறையும் உண்டு... சம்பளமும் உண்டாம்!
அடுத்த ஐந்து நாட்களுக்கு சென்னை தொழிற்சாலையை மூட ஹூண்டாய் மோட்டார்ஸ் நிறுவனம் தொழிலாளர்களால் கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை தொடர்ந்து பார்க்கலாம்.

ஒவ்வொரு நாளும் கொரோனா வைரஸினால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வரவே, தமிழ்நாடு அரசு கடந்த இரு வாரங்களாக அமலில் இருந்த ஊரடங்கு உத்தரவுகளை மேலும் 1 வாரத்திற்கு நீட்டித்து உத்தரவிட்டது.

தற்போது அமலில் இருக்கும் இந்த ஊரடங்கில் தளர்வுகள் எதுவும் கிடையாது. மருந்தகங்கள் தவிர்த்து மற்ற கடைகள் அனைத்தும் முழுவதுமாக மூடப்பட்டுள்ளன. பொது மக்கள் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

வாகனங்களில் வெளியே செல்ல வேண்டி இருப்போர் கட்டாயம் இ-பாஸை வைத்திருக்க வேண்டும். இத்தகைய கட்டுப்பாடுகள் இருப்பினும் ஹூண்டாய் மோட்டார்ஸின் சென்னை தொழிற்சாலை நேற்று (மே 24) வழக்கம்போல் செயல்பட துவங்கியது. முன்னதாக சமீபத்தில் இரு தொழிலாளர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இறந்தனர்.

இதனால் கோபமடைந்த தொழிலாளர்கள் தங்களது அசவுகரியங்களை கூறி நேற்று தொழிற்சாலைக்கு உள்ளே போராட்டத்தை நடத்தினர். அவர்களது கோரிக்கையை ஏற்று கொண்ட ஹூண்டாய் நிறுவனம் அடுத்த ஐந்து நாட்களுக்கு தொழிற்சாலையை மூடுவதாக அறிவித்து, தொழிலாளர்களுக்கு விடுமுறை அளித்துள்ளது.

இதுகுறித்து ஹூண்டாய் மோட்டார் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் இருந்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் தற்போதைக்கு நிலவும் சூழலை கருத்தில் கொண்டு, ஹுண்டாய் நிர்வாகம் அதன் தொழிற்சாலை பணிகளை 5 நாட்களுக்கு தற்காலிகமாக நிறுத்த முடிவெடுத்துள்ளது.

மே 25ல் இருந்து துவங்கும் இந்த ஐந்து நாட்கள் விடுமுறை மே 29 வரையிலானது என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த 5 நாட்களுக்கான சம்பளம் தொழிலாளர்களுக்கு எந்தவொரு பிடித்தமும் இன்றி வழங்கப்படும் என செய்திகள் தெரிவிக்கின்றன.

ஹூண்டாய் மோட்டார்ஸ் நிறுவனம் அதன் பிரபல எஸ்யூவி மாடலாக விற்பனையாகி கொண்டிருக்கும் க்ரெட்டாவின் 7-இருக்கை வெர்சனை இந்திய சந்தையில் விற்பனைக்கு கொண்டுவர தீவிரமாக பணியாற்றி வந்தது. இதற்கிடையில் தற்போது சென்னை தொழிற்சாலையின் பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன.

இதன் காரணமாக க்ரெட்டாவின் 7-இருக்கை வெர்சனாக கொண்டுவரப்படும் அல்கஸாரின் தயாரிப்பு பணிகள் துவங்குவதிலும், அதன் அறிமுகத்திலும் தாமதம் ஏற்பட்டுள்ளது. ஹூண்டாயை தொடர்ந்து வேறு சில நிறுவனங்களும் தங்களது தொழிற்சாலைகளை மூட ஆயத்தமாகி வருகின்றன.

சென்னையில் உள்ள ரெனால்ட், நிஸான் நிறுவனங்களின் தொழிற்சாலை நிர்வாகங்கள் ஆலையை மூடவில்லை என்றால் போராட்டத்தை தொடுக்க இந்த தொழிற்சாலைகளில் பணியாற்றுபவர்கள் திட்டமிட்டுள்ளனர். ஏனெனில் தொழிற்சாலைக்குள் அரசின் பாதுகாப்பு வழிமுறைகள் சரிப்பட கடைப்பிடிக்கப்படுவதில்லை என அவர்கள் புகார்கள் தெரிவித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications








