2,000 சதுர அடியில் புதிய பயிற்சி மையத்தை தொடங்கிய ஹூண்டாய் நிறுவனம்!
ஹூண்டாய் கார் தயாரிப்பு நிறுவனம் தனது 11வது தொழில்நுட்ப பயிற்சி அகாடமி மற்றும் பட்டறையை உத்தரப் பிரதேசத்தில் நேற்று திறந்து வைத்தது.

உத்தரப்பிரதேசம் மாநிலம், லக்னோவில் உள்ள பீயார் ஹூண்டாய் நிறுவனத்தில் ஹூண்டாய் மோட்டார்ஸ் இந்தியா நிறுவனம் தனது 11வது தொழில்நுட்ப பயிற்சி அகாடமியை நேற்று தொடங்கியது. இந்த பயிற்சி அகாடமி மூலம் கார்கள் குறித்த தொழில்நுட்பம் சார்ந்த (மெக்கானிக் மற்றும் சர்வீஸ்) பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

இந்த பயிற்சி அகாடமியைத் தொடங்கிவைத்த பின்னர் அந்நிறுவனத்தின் விபி மற்றும் தேசிய சர்வீஸ் தலைவர் புன்னைவனம் கூறியதாவது, "ஒவ்வொரு ஆண்டும் சிறந்த பயிற்சி பெற்ற 25 ஆயிரம் தொழில்நுட்ப வல்லுநர்களை துறைக்கு அனுப்புவதே எங்களின் இலக்கு. இதற்காக இந்தியா முழுவதும் 22 பயிற்சி நிலையங்கள் செயல்படுத்தி வருகிறோம்.

எங்களின் வாடிக்கையாளர்களுக்கு சிறந்த சர்வீஸ் அனுபவத்தை வழங்கும் நோக்கில் நாங்கள் இந்த சேவையைச் செய்து வருகிறோம். அவ்வாறு, இந்த சிறப்பான சேவை மூலம் புதிய சில வாடிக்கையாளர்களையும் கவரும் வகையில் இந்த செயல்பாட்டில் நாங்கள் ஈடுபட்டு வருகிறோம்" என்றார்.

தற்போது லக்னோவில் திறக்கப்பட்டுள்ள இந்த புத்தம் புதிய பயிற்சி மையம் 2 ஆயிரம் சதுர அடியில், நவீன தொழில்நுட்பங்களுடன் உருவாக்கப்பட்டுள்ளது. இதில், மாணவர்களுக்கு பாடம் எடுக்கும் வகையில் மிகப்பெரிய வகுப்பறைகள், பிராக்டிக்கல் லேப்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், மாணவர்களுக்கு சிறப்பான பயிற்சியை அளிக்கும் வகையில் உத்தரபிரதேசத்தில் உள்ள சிறந்த வல்லுநர்களைக் கொண்டு பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

'ஸ்கில் இந்தியா கேம்பைன்' மூலம் நடத்தப்படும் இந்த பயிற்சி மையமானது நாட்டில் வேலையில்லா திண்டாட்டத்தைக் குறைக்கும் வகையில் நடத்தப்பட்டு வருகிறது. இந்த பயிற்சியில் சிறப்பாக விளங்கும் மாணவர்களுக்கு ஹூண்டாய் நிறுவனத்திலேயே வேலை வாய்ப்பு அளிக்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு, எம்ஓயு மற்றும் தன்னார்வ திறன் மேம்பாட்டு கவுன்சில் (ASDC) ஆகிய இரு நிறுவனங்களுடன் ஹெச்எம்ஐஎல் அமைப்பு இணைந்து 8வது அல்லது அதற்குமேல் படித்தவர்களுக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்தி தரும் வகையில் ஹூண்டாயின் நிறுவனத்தின் இந்த பயிற்சி மையத்தில் ஒப்பந்தம் செய்தது குறிப்படித்தக்கது.


Click it and Unblock the Notifications








