வாடிக்கையாளருக்கு 3 லட்சம் இழப்பீடு வழங்க ஹூண்டாய் நிறுவனத்திற்கு உத்தரவு... காரணம் தெரிஞ்சா ஆடிப்போயிருவீங்க!
வாடிக்கையாளருக்கு 3 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என ஹூண்டாய் நிறுவனத்திற்கு அதிரடியாக உத்தரவிடப்பட்டுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

ஹூண்டாய் நிறுவனத்தின் மிகவும் பிரபலமான கார்களில் ஒன்று கிரெட்டா (Hyundai Creta). இது மிட்-சைஸ் எஸ்யூவி ரகத்தை சேர்ந்த கார் ஆகும். இந்திய சந்தையில் கியா செல்டோஸ், ஃபோக்ஸ்வேகன் டைகுன் மற்றும் ஸ்கோடா குஷாக் போன்ற கார்களுக்கு ஹூண்டாய் கிரெட்டா விற்பனையில் கடுமையான சவாலை வழங்கி வருகிறது.

இந்த நிலையில், கிரெட்டா காரின் உரிமையாளர் ஒருவருக்கு ஹூண்டாய் நிறுவனம் 3 லட்ச ரூபாயை வழங்க வேண்டிய சூழல் தற்போது உருவாகியுள்ளது. கடந்த 2017ம் ஆண்டு நடைபெற்ற சாலை விபத்து ஒன்றில், சைலேந்தர் பட்நாகர் (Shailender Bhatnagar) என்ற ஹூண்டாய் கிரெட்டா காரின் உரிமையாளர் காயமடைந்தார்.

ஏர்பேக்குகள் சரியாக செயல்படாததுதான் இதற்கு முக்கியமான காரணமாக கூறப்படுகிறது. இது தொடர்பான வழக்கில், மனுதாரர் சைலேந்தர் பட்நாகருக்கு 3 லட்ச ரூபாயை இழப்பீடாக வழங்கும்படி, ஹூண்டாய் நிறுவனத்திற்கு உச்ச நீதிமன்றம் தற்போது அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. சைலேந்தர் பட்நாகர் ஹூண்டாய் கிரெட்டா காரை கடந்த 2015ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வாங்கினார்.

இதன் முன் பகுதியில் இரண்டு ஏர்பேக்குகள் இருந்தன. பாதுகாப்பை மனதில் வைத்துதான், சைலேந்தர் பட்நாகர் இந்த காரை தேர்வு செய்தார். ஆனால் தனது ஹூண்டாய் கிரெட்டா காரில் பயணம் செய்து கொண்டிருந்தபோது, டெல்லி-பானிபட் நெடுஞ்சாலையில், சைலேந்தர் பட்நாகர் விபத்தில் சிக்க நேரிட்டது. இந்த விபத்து கடந்த 2017ம் ஆண்டு நவம்பர் 16ம் தேதி நடைபெற்றது.

ஆனால் அப்போது ஏர்பேக்குகள் செயல்படவில்லை. ஏர்பேக்குகள் சரியான சமயத்தில் விரிவடையாத காரணத்தால் சைலேந்தர் பட்நாகர் காயமடைய நேரிட்டது. எனவே டெல்லி மாநில நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில், ஹூண்டாய் நிறுவனத்திற்கு எதிராக சைலேந்தர் பட்நாகர் வழக்கு தொடர்ந்தார். இதனை விசாரித்த டெல்லி மாநில நுகர்வோர் குறைதீர் ஆணையம், சைலேந்தர் பட்நாகருக்கு ஆதரவாக தீர்ப்பு வழங்கியது.

அத்துடன் ஹூண்டாய் நிறுவனம் 3 லட்ச ரூபாயை இழப்பீடாக வழங்க வேண்டும் எனவும் உத்தரவிட்டது. மருத்துவ செலவுகள் மற்றும் வருவாய் இழப்பிற்காக 2 லட்ச ரூபாய், வழக்காடலுக்காக 50 ஆயிரம் ரூபாய் மற்றும் மன உளைச்சல் ஏற்படுத்தியமைக்காக 50 ஆயிரம் ரூபாய் என ஒட்டுமொத்தமாக 3 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

ஆனால் இந்த உத்தரவை எதிர்த்து, தேசிய நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. ஆனால் இங்கும் சைலேந்தர் பட்நாகருக்கு சாதகமாகதான் தீர்ப்பு வந்தது. இறுதியாக இந்த உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. உச்ச நீதிமன்றமும் சைலேந்தர் பட்நாகருக்கு ஆதரவாகவே தீர்ப்பு வழங்கியுள்ளது.

அத்துடன் அவருக்கு இழப்பீடு வழங்கும்படி, ஹூண்டாய் நிறுவனத்திற்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. தேசிய நுகர்வோர் குறைதீர் ஆணையத்தின் தீர்ப்பை உறுதி செய்ததுடன், வாகனத்தை மாற்றி வழங்க வேண்டும் எனவும் ஹூண்டாய் நிறுவனத்திற்கு உச்ச நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. இது ஹூண்டாய் நிறுவனத்திற்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

தற்போதைய நிலையில் மாருதி சுஸுகி நிறுவனத்திற்கு அடுத்தபடியாக இந்திய சந்தையில் அதிக கார்களை விற்பனை செய்யும் 2வது மிகப்பெரிய நிறுவனமான ஹூண்டாய் திகழ்கிறது. ஆனால் சமீப காலமாக டாடா மோட்டார்ஸ் நிறுவனம் ஹூண்டாய் நிறுவனத்திற்கு கடுமையான போட்டியை வழங்கி வருகிறது. ஹூண்டாய் நிறுவனத்தின் தடுமாற்றத்திற்கு, செமி கண்டக்டர் சிப்களுக்கான பற்றாக்குறையும் ஒரு முக்கியமான காரணமாக பார்க்கப்படுகிறது.

இப்படிப்பட்ட ஒரு சூழலில்தான், ஹூண்டாய் நிறுவனத்திற்கு எதிராக உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. ஹூண்டாய் நிறுவனம் தற்போதைய நிலையில் கிரெட்டா மட்டுமல்லாது, வெனியூ, கிராண்ட் ஐ10 நியோஸ், ஐ20, அவ்ரா, அல்கஸார் போன்ற பல்வேறு பிரபலமான கார்களையும் இந்திய சந்தையில் விற்பனை செய்து வருகிறது. அத்துடன் கோனா என்ற எலெக்ட்ரிக் எஸ்யூவி காரையும் ஹூண்டாய் விற்பனை செய்து கொண்டுள்ளது.
Note: Images used are for representational purpose only.


Click it and Unblock the Notifications








