துப்பாக்கி குண்டு துளைத்ததைப் போல வெடித்து சிதறிய காரின் சன் ரூஃப்: வீடியோ...!
ஹூண்டாய் நிறுவனத்தின் டூஸான் காரின் சன் ரூஃப், பயணத்தின்போது தானாக வெடித்துச்சிதறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த தகவலை இந்த பதிவில் காணலாம்.

ஹூண்டாய் நிறுவனத்தின் டூஸான் காரை பயன்படுத்தி வரும் மார்க் பர்சோம் (Mark Barsoum), அந்த காரினால் பெரிய அச்சுறுத்தலுக்கு ஆளாகியுள்ளார். காரினால், எப்படி அவர் அச்சுறுத்தலுக்கு ஆளாகினார் என்று தானே கேட்கிறீர்கள், இதுகுறித்த தகவலை முழுமையாக இந்த பதிவில் காணாலாம்.

கனடா நாட்டின் மிக முக்கிய நகரங்களில் ஒன்றாக இருக்கும் டொரண்டோவைச் சேர்ந்தவர் மார்க் பர்சோம். இவர் தன் மனைவியுடன் ஹூண்டாய் நிறுவனத்தின் டூஸான் காரில் விடுமுறை தினத்தை கழிக்கும் விதமாக வெளியேச் சென்றுள்ளார். அப்போது, காரின் சன் ரூஃப் எனப்படும் மேற்கூரை கண்ணாடி திடீரென வெடித்துச் சிதறியுள்ளது.

இதனால், அதிர்ச்சியுற்ற மார்க், உடனடியாக காரை நிறுத்திவிட்டு பதற்றத்துடன் காரை விட்டு வெளியேறியுள்ளார். மேலும், சாலையில் பயணித்துக் கொண்டிருக்கும்போது கார் கண்ணாடி எவ்வாறு வெடித்தது என்று தெரியாமல் திகைத்து நின்ற அவர், அதுகுறித்து அப்பகுதி போலிஸிடம் புகார் தெரிவித்துள்ளார்.

புகாரில், கார் சன் ரூஃப் மீது யாரோ துப்பாக்கியால் சுட்டதைப்போன்ற சப்தத்துடன் வெடித்து சிதறியதாக அவர் விவரித்துள்ளார். மேலும், அந்த கண்ணாடி சிதறல்கள் காருக்குள் இருந்தவர்கள் மீது மழைப் போன்று பொழிந்ததாகவும் கூறினார்.

இதுபோன்று காரின் சன்ரூஃப் கண்ணாடி தானாக வெடித்து சிதறுவது முதல் முறையல்ல, இதற்கு முன்னதாகவும் பலமுறை இதுபோன்ற சம்பவம் அரங்கேறியுள்ளன. அந்தவகையில்தான், மார்கின் காருடைய சன்ரூஃபும் நொருங்கியுள்ளது. இதில், அவருடைய காரின் சன்ரூஃப்மீது பெரியளவிலான பந்து மோதியதைப் போன்று தெரிகிறது. ஆனால், அதுபோன்று எந்தவொரு பொருளும் மோதியதற்கான தடையமும் அங்கு காணப்படவில்லை.

அதேசமயம், இந்த விபத்தினால் மார்க்கிற்கும் அவரது மனைவிக்கும் எந்தவிதமான அசம்பாவிதமும் ஏற்படவில்லை என கூறப்படுகிறது. இருப்பினும் இச்சம்பவத்தால் அவர்கள் இருவரும் பெரும் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளனர். அந்த அளவிற்கு சன்ரூஃப் சத்தத்துடன் வெடித்து சிதறியுள்ளது.
இந்த சம்பவம், அவரது காரின் டேஷ்போர்டில் பொருத்தப்பட்டிருந்த கேமிராவில் காட்சியாக பதிவாகியிருந்தது. இதைத்தான், தற்போது அவர் சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். மேலும், இதுகுறித்த செய்திகளும் சர்வதேச ஊடகங்களில் பேசப்பட்டு வருகிறது.

மார்க், ஹூண்டாயின் இந்த டூஸான் மாடல் காரை கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்புதான் வாங்கியுள்ளார். மேலும், அந்த கார் இதுவரை 40 ஆயிரம் கிலோ மீட்டர்கள் மட்டுமே இதுவரை ஓடியுள்ளது. அதேசமயம், இந்த காருக்கு இன்னும் வாரண்டியும் இருக்கிறது. ஆனால், இதனை வாரண்டி மூலம் மாற்றித் தர முடியாது என ஹூண்டாய் சர்வீஸ் சென்டர் தரப்பில் கூறப்பட்டுள்ளது. மாறாக, அதனை இன்சூரன்ஸ் மூலம் சரி செய்துகொள்ளவும் அவர்கள் ஆலோசனை வழங்கியுள்ளனர்.

ஆனால், இதுவரை டக்சன் காரின் சன்ரூஃப் உடைந்ததற்கான உண்மையான காரணம் தெரிய வரவில்லை. அதேசமயம் யூகத்தின்பேரில் பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன. இதற்கு முன்னதாகவும் இதேபோன்று, சன்ரூஃப் தானாக வெடித்துச் சிதறியதாக பல்வேறு கார்களின் உரிமையாளர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

அந்தவகையில், கடந்த அக்டோபர் மாதம் 16ம் தேதி இதுகுறித்த 351 வழக்குகள் கனடா நீதிமன்றத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதில் வழக்குகள் 61 ஹூண்டாய் நிறுவனத்தின் கார்களாக இருக்கின்றன. மற்றவை பெரும்பாலும் நிஸான், பிஎம்டபிள்யூ மற்றும் ஃபோர்டு நிறுவனத்தின் கார்களாக இருக்கின்றன.


Click it and Unblock the Notifications








