எடப்பாடியின் முயற்சியால் சென்னைக்கு வரவிருக்கும் 7000 கோடி முதலீடு...!!!
எடப்பாடியின் முயற்சியால் தமிழகத்துக்கு 7 ஆயிரம் கோடி ரூபாயில் முதலீடு கிடைத்துள்ளது. இதுகுறித்த பதிவை செய்தியில் காண்போம்.

உலகம் முழுவதும் பெருகி வரும் தொழிற்சாலை மற்றும் வாகனங்களால் சுற்றுச்சூழல் பெருமளவில் பாதிக்கப்பட்டு வருகிறது. மேலும், உலக வெப்பமயமாதல் என்னும் பின்விளைவையும் சந்தித்து வருகிறது. இதன்காரணமாக, புவி கடுமையாக வெப்பமடைந்து பனி மலைகள் உருகி, கடல்மட்டம் உயர்ந்து வருகிறது.

மேலும், பருவகால நிலையில் மாற்றம் அடைந்து, முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு கடுமையான குளிர், மழை, வெயிலின் தாக்கம் என பல இடர்பாடுகளை மக்கள் சந்தித்து வருகின்றனர். இதைத்தொடர்ந்து, புது புது வியாதிகளும் மக்களிடையே பரவி வருகிறது.

இவற்றைத் தவிர்க்கும் விதமாக பெட்ரோல், டீசலால் இயங்கும் வாகனங்களின் பயன்பாட்டை குறைக்க உலகம் முழுவதும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சமீபகாலாமாக இந்திய அரசும் இதுகுறித்த முயற்சியில் ஈடுபட்டு வருகிறது.

அதன்படி, பெட்ரோல் டீசல் வாகங்கள் பயன்பாட்டைக் குறைத்து, மின்வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிக்க முயற்சி செய்துவருகிறது. இதற்காக மின்வாகனங்களுக்கு மானியம் வழங்கவும் மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

மத்திய அரசின் இந்த நடவடிக்கையைத் தொடர்ந்து பல்வேறு வாகன தயாரிப்பு நிறுவனங்கள் மின்வாகன உற்பத்தியைத் தொடங்கியுள்ளது.

இந்நிலையில், சென்னை நந்தம்பாக்கத்தில் நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் ஹூண்டாய் கார் தயாரிப்பு நிறுவனம், தனது கோனா எலக்ட்ரிக் எஸ்யூவி மாடல் காரினை அறிமுகம் செய்தது.

தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நேற்று தொடங்கிய உலக முதலீட்டாளர்கள் மாநாடு இன்றுடன் முடிவடைகிறது. இம்மாநாட்டில் பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், தொழில்துறை அமைச்சர் எம்சி சம்பத் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

மேலும், இந்த மாநாட்டில் ஜப்பான், மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளைச் சார்ந்த முதலீட்டாளர்களும் கலந்துகொண்டனர். இதைத்தொடர்ந்து, மாநாட்டில் 250க்கும் மேற்பட்ட தொழில் நிறுவனங்கள் பங்கேற்று, தொழில் சார்ந்த கண்காட்சியை நிகழ்த்தின.

அப்போது, கொரியன் கார் தயாரிப்பு நிறுவனமான ஹூண்டாய் தனது, கோனா எலக்ட்ரிக் எஸ்யூவி மாடல் காரினை இந்தியாவில் முதல் முறையாக அறிமுகம் செய்தது. மேலும், சென்னையில் உள்ள ஹூண்டாய் தயாரிப்பு தொழிற்சாலையில் 7 ஆயிரம் கோடி ரூபாய் முதலீட்டில் கோனா எலக்ட்ரிக் வாகனத்தை தயாரிக்க இருப்பதாக தகவல் தெரிவித்தது.

இதுகுறித்து ஹூண்டாய் நிறுவன துணை தலைவர் பாலசந்தர தத்தா கூறியதாவது, "கோனா எலக்ட்ரிக் காரானது ஒரு முறை முழுமையாக ரீசார்ஜ் செய்தால் 350 கிமீ வரை பயணிக்கும். குறைந்தது 60 நிமிடங்களில் இதன் பேட்டரிகள் சார்ஜாகிவிடும். இதுபோன்ற அதிநவீன தொழில்நுட்பத்தை இந்தியாவில் முதல்முறையாக ஹீண்டாய் நிறுவனம் தயாரித்து வெளியிட உள்ளது" என்றார்.

'கோனா தயாரிப்பைத்தொடர்ந்து பல்வேறு ரக மின்சார கார்களையும் சென்னையில் உள்ள ஹூண்டாய் தயாரிப்பு நிறுவனத்தில் தயாரிக்க உள்ளோம். இதன்மூலம் 1,500 பேருக்கு வேலை வாய்ப்பு உருவாக உள்ளது' என அவர் தெரிவித்தார்.

அதன்படி, இந்த ஆண்டின் இரண்டாம் அரையிறுதியில் கோனா எலக்ட்ரிக் எஸ்யூவி மாடல் கார் தயாரிப்பினை ஹூண்டாய் நிறுவனம் தொடங்க உள்ளது. இதற்காக எம்ஓயூ ஒன்றில் தமிழக அரசு கையெழுத்திட உள்ளது.

ஹூண்டாயின் கோனா எலக்ட்ரிக் எஸ்யூவி கார்கள் இந்தியாவுக்கு புது வரவு என்றாலும், இந்த மாடல் கார் வெளிநாடுகளில் பெட்ரோல், டீசல் ஆகிய மாடல்களில் கிடைக்கிறது. ஆனால், இந்தியாவுக்கு எலக்ட்ரிக் மாடலில்தான் வரவிருக்கிறது.

இந்த காரில் பேட்டரியானது தரைதளத்தில் பொறுத்தப்பட்டு இருப்பதால் உட்புறத்தில் இட வசதி தாரளமாக உள்ளது. மேலும், 17 இன்ச் அலாய் வீல்கள் சாலைகளில் ஸ்மூத்தாக செல்ல நிறுவப்பட்டுள்ளன. இதுமட்டுமின்றி டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர், ஏழு அங்குல திரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் உள்பட பல்வேறு முக்கிய அம்சங்கள் பொறுத்தப்பட்டுள்ளன.

இந்த எஸ்யூவி மாடல் மிகச் சிறப்பாக ஏரோடைனமிக்ஸ் வடிவமைப்பைக் கொண்டிருப்பதால், பேட்டரி ஆற்றல் விரையமாவது தடுக்கப்பட்டு நீண்ட பேட்டரி லைப்பைக் கொடுக்கிறது. மேலும், இது மணிக்கு 167 கிமீ வேகம் வரை செல்லக்கூடிய திறன் உடையது. இதில் பொறுத்தப்பட்டுள்ள மிகச் சக்தி வாய்ந்த மின் மோட்டார் 131 பிஎச்பி பவரையும், 395 டார்க்யூ திறனையும் வழங்குகிறது.

இந்த காரை 100kw திறனுடைய டிசி குயிக் சார்ஜர் மூலம் சார்ஜ் செய்யும்போது ஒரு மணி நேரத்தில் முழுமையாக சார்ஜ் ஆகிவிடும். ஆனால் சாதாரண ஏசி பாயிண்டில் சார்ஜ் செய்யும்போது குறைந்தது 6 மணி நேரம் வரை சார்ஜ் ஆகும்.


Click it and Unblock the Notifications








