இன்னமும் பழைய பிளாட்டினா பைக்கை வைத்திருக்கும் முகமது சிராஜ்... காரணத்தை கேட்டு கண் கலங்கும் ரசிகர்கள்...
இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ் அனைவரையும் கண் கலங்க வைத்துள்ளார். இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவராக முகமது சிராஜ் தற்போது உருவெடுத்துள்ளார். தமிழ் நாட்டை சேர்ந்த வேகப்பந்து வீச்சாளர் நடராஜனை போன்று, இவரும் மிகவும் ஏழ்மையான குடும்ப பின்னணியில் இருந்து வந்தவர்தான். ஆனால் இந்திய கிரிக்கெட் அணியில் இடம் கிடைத்த பிறகு, அவரது குடும்ப சூழல் நல்ல நிலைக்கு மாறியுள்ளது.

ஆனால் முகமது சிராஜ் இன்னமும் தனது பழைய வாழ்க்கையை மறக்கவில்லை. ஆரம்ப நாட்களில் தான் சந்தித்த போராட்டங்களை அவர் தற்போது வெளி உலகிற்கு தெரியப்படுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், ''எனது பழைய பஜாஜ் பிளாட்டினா பைக்கை இன்னமும் வைத்துள்ளேன். நான் கிரிக்கெட் விளையாட தொடங்கிய ஆரம்ப நாட்களில் அந்த பைக் நல்ல கண்டிஷனில் இல்லை.

செல்ஃப் ஸ்டார்ட், கிக் ஸ்டார்ட் என எதுவுமே அந்த பைக்கில் இல்லை. இன்ஜினை ஸ்டார்ட் செய்ய வேண்டும் என்றால், அந்த பைக்கை தள்ளி கொண்டு சிறிது தூரம் ஓட வேண்டும். ஆனால் நான் மைதானத்திற்கு சரியான நேரத்திற்கு செல்வதற்கு அந்த பைக்தான் எனக்கு உதவி செய்தது. இருந்தாலும் அந்த பைக் மிகப்பெரிய தர்மசங்கடத்தை எனக்கு ஏற்படுத்தியது.

நான் ஐதராபாத் நகரில் போட்டிகள் மற்றும் பயிற்சியில் பங்கேற்கும்போதெல்லாம், எனது சக அணி வீரர்கள் அவர்களுடைய காரில் புறப்படும் வரை காத்திருப்பேன். அதன் பிறகுதான் எனது பைக்கை தள்ளி கொண்டு ஓடி ஸ்டார்ட் செய்வேன். தற்போது என்னிடம் விலை உயர்ந்த கார்கள் உள்ளன. ஆனால் இன்னமும் நான் எனது பழைய பஜாஜ் பிளாட்டினா பைக்கை வைத்துள்ளேன்.

ஏனெனில் இது என்னுடைய போராட்டத்தின் அடையாளம். அத்துடன் என்னிடம் இருந்து சிறப்பான பந்து வீச்சு வெளிப்படுவதற்கு இது என்னை ஊக்குவிக்கிறது'' என்றார். முகமது சிராஜ் தெரிவித்துள்ள இந்த தகவல்கள் இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மிகவும் சிரமத்திற்கு மத்தியில், இந்தளவிற்கு முன்னேறியுள்ள முகமது சிராஜிற்கு ரசிகர்கள் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.

இன்னமும் பழைய பஜாஜ் பிளாட்டினா பைக்கை வைத்துள்ள முகமது சிராஜிற்கு, இந்தியாவின் முன்னணி தொழிலதிபர்களில் ஒருவரான ஆனந்த் மஹிந்திரா சமீபத்தில் புதிய தலைமுறை மஹிந்திரா தார் எஸ்யூவி காரை பரிசாக வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆஸ்திரேலியாவிற்கு எதிரான தொடரில் சிறப்பாக விளையாடிய 6 வீரர்களுக்கு இந்த பரிசை வழங்குவதாக ஆனந்த் மஹிந்திரா அறிவித்திருந்தார்.

இதில், முகமது சிராஜிம் ஒருவர். இதன்படி சமீபத்தில் புதிய தலைமுறை மஹிந்திரா தார் எஸ்யூவி அவருக்கு பரிசாக வழங்கப்பட்டது. மேலும் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் புதிய பிஎம்டபிள்யூ கார் ஒன்றையும் முகமது சிராஜ் வாங்கினார். ஆனால் தனது போராட்டத்தின் அடையாளமாக இன்னமும் பழைய பஜாஜ் பிளாட்டினா பைக்கை அவர் வைத்திருப்பது சிறப்பான விஷயம்.

இந்திய கிரிக்கெட் வீரர்கள் பலர் சொகுசு மற்றும் அரிய வாகனங்கள் மீது காதல் கொண்டுள்ளனர். முன்னாள் கேப்டன் டோனி, தற்போதைய கேப்டன் கோஹ்லி போன்றோரை இதற்கு உதாரணமாக கூறலாம். இந்த வகையில் முகமது சிராஜூம் பல்வேறு கார்கள் மற்றும் மோட்டார்சைக்கிள்களை வாங்குவதற்கு நாம் நம்முடைய பாராட்டுக்களை தெரிவித்து கொள்வோம்.


Click it and Unblock the Notifications








