தேஜஸ் போர் விமானங்களுக்கு மெகா ஆர்டர்... சொந்த போர் விமானங்களுடன் கெத்து காட்டத் தயாராகும் இந்தியா!
உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட தேஜஸ் போர் விமானங்களுடன் எதிரிகளை ஒரு கை பார்ப்பதற்கான முயற்சிகளில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது. இதனால், தேஜஸ் போர் விமானங்களை கொள்முதல் செய்வதற்கு எச்ஏஎல் நிறுவனத்திற்கு மிகப்பெரிய ஆர்டரையும் வழங்கி இருக்கிறது. நடப்பு தசாப்தத்திற்குள் அனைத்து தேஜஸ் போர் விமானங்களும் இந்திய விமானப்படையில் சேர்ப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

சீனா, பாகிஸ்தான் உள்ளிட்ட அண்டை நாடுகள் ராணுவ பலத்தை வைத்துக் கொண்டு இந்திய எல்லைகளில் அவ்வப்போது தொல்லை கொடுத்து வருகின்றன. குறிப்பாக, சீனா நேரடியாகவே இந்திய எல்லைகளில் அத்துமீறும் போக்கை கடைபிடித்து வருகிறது. இந்த நிலையில், நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், ராணுவ பலத்தை வெகுவாக உயர்த்தும் முயற்சிகளில் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு ஈடுபட்டுள்ளது.

மேலும், எல்லைகளை எளிதாக கண்காணிப்பதற்கும், பாதுகாப்பதற்கும் ஏதுவாக இந்திய விமானப் படையின் பலத்தை கூட்டுவதற்கும் தீவிர நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. பிரான்ஸ் நாட்டில் இருந்து ரஃபேல் போர் விமானங்களை வாங்கி களத்தில் இறக்கப்பட்ட நிலையில், அடுத்ததாக உள்நாட்டு தயாரிப்பான தேஜஸ் போர் விமானங்களை வைத்து இந்திய விமானப் படை பலத்தை அதிகரிப்பதற்கான முயற்சிகளும் நடந்து வருகின்றன.

ஏற்கனவே முதல்கட்டமாக தயாரிக்கப்பட்டு வரும் தேஜஸ் போர் விமானங்களை கொண்ட முதல் படையணி கோயம்புத்தூர் அருகே சூலுரில் உள்ள விமானப் படைத் தளத்தில் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில், மேம்படுத்தப்பட்ட அம்சங்கள் கொண்ட தேஜஸ் எம்கே1 ஏ (Tejas Mark 1A) போர் விமானத்திற்கும் பெரிய அளவிலான ஆர்டர் வழங்கப்பட்டுள்ளது.

பெங்களூரில் நடந்த ஏரோ இந்தியா 2021 விமானக் கண்காட்சியில், புதிய தேஜஸ் போர் விமானங்களை வாங்குவதற்கான கொள்முதல் ஒப்பந்தம் ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ்(எச்.ஏ.எல்) பொதுத் துறை நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.

மொத்தம் 83 தேஜஸ் எம்கே1ஏ போர் விமானங்கள் ரூ.48,000 கோடி மதிப்பீட்டில் கொள்முதல் செய்வதற்கான ஆர்டர் தரப்பட்டுள்ளது. இந்த ஆர்டரின்படி, முதல் விமானம் வரும் 2024ம் ஆண்டு பிப்ரவரி மாதம் இந்திய விமானப்படையிடம் வழங்குவதற்கு காலக்கெடு வைக்கப்பட்டுள்ளது. அதன்பிறகு, அடுத்த 9 ஆண்டுகளில் அனைத்து தேஜஸ் எம்கே1ஏ போர் விமானங்களும் இந்திய விமானப்படையிடம் ஒப்படைக்கப்பட்டு விடும்.

ஒரு தேஜஸ் எம்கே1ஏ போர் விமானம் ரூ.309 கோடி என்ற விலையில் இந்திய விமானப்படைக்கு வழங்கப்பட உள்ளது. மேலும், பராமரிப்புப் பணிகளையும் எச்ஏஎல் நிறுவனமே மேற்கொள்ளும். மேலும், விமானங்களை நிறுத்துவதற்கான தளத்தின் கட்டமைப்பு, பயிற்சி, ஸ்பேர் பார்ட்ஸ் இருப்பு வைப்பது உள்ளிட்டவை சேர்த்து இந்த ஆர்டர் மொத்தம் ரூ.48,000 கோடியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் எச்.ஏ.எல் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த செய்தி பெரும் மகிழ்ச்சியையும், பெருமிதத்தையும் இந்தியர்களுக்கு வழங்கி இருக்கும் நிலையில், தேஜஸ் எம்கே1ஏ போர் விமான மாடலை வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்வதற்கு எச்.ஏ.எல் திட்டமிட்டுள்ளது. தென்கிழக்கு ஆசிய மற்றும் மேற்கு ஆசிய நாடுகளுக்கு தேஜஸ் எம்கே1ஏ போர் விமான மாடலை ஏற்றுமதி செய்யும் திட்டம் எச்.ஏ.எல் நிறுவனத்திற்கு உள்ளது.

தேஜஸ் எம்கே1ஏ மாடலானது 4.5 தலைமுறை அம்சங்களை கொண்டது. இந்த தலைமுறை அம்சங்கள் கொண்ட விமானங்களில், தேஜஸ் விலை மிக குறைவாக இருப்பதால் உலகின் பல்வேறு நாடுகள் வாங்குவதற்கு விருப்பமும், ஆர்வமும் காட்டி வருகின்றன.

தற்போது இந்திய விமானப்படைக்கு சப்ளை செய்யப்பட்டு வரும் தேஜஸ் மார்க்1 விமானத்தைவிட 1ஏ மாடலானது கூடுதல் சிறப்பம்சங்களை பெற்றிருக்கிறது. AESA ரேடார், போர்க்கருவிகள் மற்றும் ஆயுதங்களை இயக்குவதற்கான புதிய கட்டுப்பாட்டு சாதனமும் இந்த புதிய மாடலில் இடம்பெறுகிறது. இதனால், மார்க்1 மாடலைவிட இந்த 1ஏ மாடல் மிகச் சிறப்பானதாக இருக்கும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








