சென்னை ஈசிஆர் சாலையை அவசர கால விமான ஓடுதளமாக பயன்படுத்த அனுமதி!
நாட்டிலுள்ள 12 நெடுஞ்சாலைகளில், அவசர சமயத்தில் விமானங்கள் தரையிறங்குவதற்கான தற்காலிக ஓடுதளமாக பயன்படுத்திக் கொள்வதற்கான அனுமதியை இந்திய விமானப்படை வழங்கி இருக்கிறது.
நாட்டிலுள்ள 12 தேசிய நெடுஞ்சாலைகளை அவசர கால விமான ஓடுதளமாக பயன்படுத்துவதற்கு இந்திய விமானப்படை அனுமதி வழங்கி இருக்கிறது. இதில், சென்னை - புதுச்சேரி இடையிலான ஈசிஆர் சாலைக்கும் அனுமதி வழங்கப்பட்டு இருக்கிறது.

போர் சமயங்களிலும், இயற்கை சீற்றங்களின்போதும் விமானப்படை தளங்கள் மற்றும் விமான நிலையங்கள் பாதிப்படையும் ஆபத்து அதிகம். அதுபோன்ற சமயங்களில் போர் விமானங்களையும், மீட்புப் பணிகளுக்கான விமானங்களையும் தரையிறக்குவதில் சிரமங்கள் ஏற்படுகின்றன.

இதனை கருத்தில்கொண்டு, தேசிய நெடுஞ்சாலைகளை தற்காலிக ஓடுதளமாக பயன்படுத்திக் கொள்ள இந்திய விமானப் படை முடிவு செய்தது. அதன்படி, டெல்லி- ஆக்ரா இடையிலான விரைவு சாலையில் போர் விமானம் தரையிறங்க ஏதுவாக மாற்றங்கள் செய்யப்பட்டு வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது.

இதைத்தொடர்ந்து, லக்ணோ- ஆக்ரா இடையிலான விரைவு சாலையிலும் போர் விமானங்கள் தரையிறக்கப்பட்டு சோதனை செய்யப்பட்டன. ஒரேநேரத்தில், பல ரக போர் விமானங்கள் தரையிறக்கப்பட்டு வெற்றிகரமாக சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.
Recommended Video


இந்நிலையில், தற்போது மேலும் 12 நெடுஞ்சாலைகளை அவசர கால விமான ஓடுதளமாக பயன்படுத்துவதற்கான அனுமதியை இந்திய விமானப் படை வழங்கி இருக்கிறது. சென்னை - புதுச்சேரி இடையிலான ஈசிஆர் சாலையிலும் விமானங்கள் தரையிறங்குவதற்கான அனுமதி வழங்கப்பட்டு இருக்கிறது.

இதுதவிர, ஜாம்ஷெட்பூர்- பலசூர் நெடுஞ்சாலை, சத்தர்பூர்- திகா நெடுஞ்சாலை, கிஷன்கஞ்ச்- இஸ்லாம்பூர் நெடுஞ்சாலை, டெல்லி- மொராதாபாத் நெடுஞ்சாலை, விஜயவாடா- ராஜமுந்திரி நெடுஞ்சாலை உள்பட நாட்டின் பல்வேறு மாநிலங்களில் உள்ள 12 தேசிய நெடுஞ்சாலைகளுக்கு விமானங்கள் தரையிறங்குவதற்கான அனுமதி வழங்கப்பட்டு இருக்கிறது.

விமானங்கள் தரையிறங்குவதற்கு ஏதுவாக, சாலைகளின் தரம் உயர்த்தப்பட இருக்கிறது. சாலை ஓரத்தில் உயர் மின் கோபுரங்கள், கம்பங்கள் மற்றும் மரங்கள் இல்லாத பகுதியாக தேர்வு செய்யப்பட்டு இருக்கிறது.

அவசர சமயங்களில் விமானங்கள் தரையிறங்கும்போது, இந்த சாலைகளில் போக்குவரத்து நிறுத்தப்படும். அதேநேரத்தில், போக்குவரத்துக்கு இடையூறு இல்லாத வகையில், மாற்றுப் பாதைகள் அமைக்கப்பட்டு போக்குவரத்து திருப்பி விடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

அவசர சமயங்களில் தற்காலிக கட்டுப்பாட்டு மையங்கள் அமைக்கப்பட்டு இந்த சாலைகளில் விமானங்கள் தரையிறங்க அனுமதிக்கப்படும். குறிப்பாக, இயற்கை சீற்றங்களின்போது விரைவாக மீட்புப் பணிகளை மேற்கொள்ள இது மிகச் சிறந்த வாய்ப்பாக அமையும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.


Click it and Unblock the Notifications








