ஆள் இல்லா தாக்குதல் விமானங்களை வாங்கும் இந்திய விமானப் படை!
இஸ்ரேல் நாட்டிலிருந்து ஆள் இல்லா தாக்குதல் போர் விமானங்களை வாங்குவதற்கு இந்திய விமானப்படை ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது.
அடுத்த ஓர் ஆண்டிற்குள் இந்த ஆள் இல்லா உளவு விமானங்கள் இந்திய விமானப் படையில் சேர்க்கப்பட உள்ளது. இதன்மூலம், சீனா, பாகிஸ்தான் ஆகிய நாடுகளுக்கு இணையான ஆள் இல்லா தாக்குதல் விமானங்களை இந்தியாவும் பெற இருக்கிறது.

இஸ்ரேல் தயாரிப்பு
இஸ்ரேல் நாட்டின் விமான நிறுவனத்திடமிருந்து 10 ஆள் இல்லா ஐஏஐ ஐட்டன் விமானங்களை இந்திய விமானப் படை வாங்க இருக்கிறது. இதற்கான ஒப்பந்தம் செய்யப்பட்டுவிட்டது. அடுத்த ஓர் ஆண்டில் இந்த திறன் வாய்ந்த ஆள் இல்லா விமானங்கள் இந்திய விமானப் படையில் சேர்க்க்ப்படும்.

ஆர்டர் மதிப்பு
ஐஏஐ ஐட்டன் விமானம் ஒவ்வொன்றும் தலா 40 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பில் வாங்கப்பட உள்ளது. மொத்தம் 400 மில்லியன் டாலர்களுக்கும் அதிகமான விலையில் இந்த ஆர்டர் கொடுக்கப்பட்டு இருக்கிறது.

இந்திய தயாரிப்பு
கடந்த 2012ம் ஆண்டு இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ரஸ்டம் 2 ஆள் இல்லா தாக்குதல் விமானங்களை சேர்க்க இந்திய விமானப் படை திட்டமிட்டது. ஆனால், டெலிவிரியில் தாமதம் ஏற்பட்டு வருகிறது. அதேநேரத்தில், சீனா மற்றும் பாகிஸ்தான் நாடுகள் சக்திவாய்ந்த ஆள் இல்லா தாக்குதல் விமானங்களை சோதனை செய்துவிட்டன. இதனால், வேறு வழியின்றி, வெளிநாட்டிலிருந்து இந்த வகை தாக்குதல் திறன் கொண்ட ஆள் இல்லா விமானங்களை இந்திய விமானப் படை அவசரமாக வாங்குகிறது.

நீண்ட நேரம் பறக்கும்
இஸ்ரேலிடமிருந்து வாங்கப்படும் ஐஏஐ ஐயிட்டன் ஆள் இல்லா தாக்குதல் விமானங்கள் நீண்ட தூரம் பறக்கும் திறன் கொண்டது. 30,000 அடி முதல் 50,000 அடி உயரம் வரை பறந்து செல்லும். வானில் 36 மணிநேரம் வரை தொடர்ந்து பறக்கும் திறன் கொண்டது. மேலும், ஆள் இல்லா விமானங்களிலேயே இது மிகப்பெரிய ரகத்தை சேர்ந்தது.

ஆயுதங்கள்
இந்த ஐஏஐ ஐயிட்டன் விமானம் ஒரு டன் எடையுடைய ஆயுதங்களை சுமந்து சென்று தாக்குதல் நடத்தும் திறன் கொண்டது. மேலும், இலக்குககளை சரியாக அறிந்து கொண்டு, தாக்குதல் நடத்துவதோடு, உளவு விமானமாகவும் செயல்படும்.

தாக்குதல் திறன்
இந்த விமானம் லேசர் வழிகாட்டுதல் தொழில்நுட்பத்தில் ஆயுதங்களை ஏவும் திறன் கொண்டது. இதன்மூலமாக, நகரும் எதிரி படையினரையும், தீவிரவாதிகளையும் துல்லியமாக குறிவைத்து தாக்குதல் நடத்தும்.

சிறப்பம்சம்
இந்த ஆள் இல்லா தாக்குதல் விமானத்தை கட்டுப்பாட்டு அறையிலிருந்து இயக்க முடியும். எனவே, இந்த விமானத்தின் மீது எதிரிகள் தாக்குதல் நடத்தினாலும், உயிரிழப்பு தவிர்க்கப்படும்.


Click it and Unblock the Notifications