இந்திய விமானப்படை எடுத்த அதிரடி முடிவு இதுதான்... 13 பேர் பரிதாபமாக உயிரிழந்ததால் நடவடிக்கை...
13 பேர் பரிதாபமாக உயிரிழந்ததால், அதிரடியான முடிவு ஒன்றை இந்திய விமானப்படை எடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

அஸ்ஸாம் மாநிலம் ஜோர்ஹட் நகரில், விமானப்படை தளம் செயல்பட்டு வருகிறது. இங்கிருந்து அருணாச்சல பிரதேச மாநிலத்தில் உள்ள மெச்சுகா நகருக்கு, கடந்த ஜூன் 3ம் தேதி மதியம் சுமார் 12.30 மணியளவில், இந்திய விமானப்படைக்கு (IAF - Indian Air Force) சொந்தமான ஏஎன்32 (AN32) ரக போக்குவரத்து விமானம் புறப்பட்டது. இதில், மொத்தம் 13 பேர் பயணம் செய்தனர்.

ஏஎன்32 விமானம் மதியம் 1.30 மணியளவில் மெச்சுகா நகருக்கு சென்றிருக்க வேண்டும். ஆனால் மதியம் 1 மணியளவில் இந்த விமானம் திடீரென மாயமானது. எனவே விமானத்தை தேடும் பணி உடனடியாக தொடங்கப்பட்டது. இந்திய விமானப்படையின் போர் விமானங்கள், ஹெலிகாப்டர்கள் மூலம் தேடுதல் வேட்டை முடுக்கி விடப்பட்டது.

ஆனால் விமானம் எங்கே சென்றது? விமானத்தில் பயணம் செய்தவர்களின் நிலை என்ன? என்பது குறித்து எவ்விதமான தகவலும் தெரியவரவில்லை. எனினும் சுமார் 9 நாட்கள் தீவிர தேடுதல் வேட்டைக்கு பிறகு, அருணாச்சல பிரதேச மாநிலத்தில் உள்ள லிப்போ மலைப்பகுதியில், மாயமான ஏஎன்32 விமானத்தின் பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

அத்துடன் அந்த விமானத்தில் பயணம் செய்த 13 பேரும் பரிதாபமாக உயிரிழந்ததாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. முன்னதாக ஏஎன்32 விமானத்தை தேடும் பணியில், இந்திய விமானப்படை பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டது. குறிப்பாக விமானம் விபத்தில் சிக்கிய லிப்போ மலைப்பகுதிக்கு செல்வதில் வீரர்கள் மிகுந்த சிரமங்களை சந்திக்க நேரிட்டது.

எனவே ஆல் டெர்ரெய்ன் வாகனங்கள் (All Terrain Vehicles - ATVs) மூலமாக, மீட்பு பணி திறன்களை அதிகரித்து கொள்ள இந்திய விமானப்படை முடிவு செய்துள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன. அதாவது ஆல் டெர்ரெய்ன் வாகனங்களை கொள்முதல் செய்ய இந்திய விமானப்படை தற்போது திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது. இதுகுறித்து தி எகனாமிக் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

இதன் ஒரு பகுதியாக அமெரிக்காவை சேர்ந்த போலரிஸ் (Polaris) நிறுவனம் இந்திய விமானப்படை அதிகாரிகளுக்கு சமீபத்தில், ஆல் டெர்ரெய்ன் வாகனங்கள் தொடர்பாக செயல் விளக்கம் அளித்துள்ளது. இந்திய ராணுவம் மற்றும் பாராமிலிட்டரி படைகள் ஏற்கனவே ஏடிவி வாகனங்களை பயன்படுத்தி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த வரிசையில் இந்திய விமானப்படையும் தற்போது ஏடிவி வாகனங்களை வாங்கவுள்ளது. ஆனால் எவ்வளவு எண்ணிக்கையில் ஏடிவி வாகனங்கள் வாங்கப்படுகின்றன என்பது குறித்த தகவல்கள் எதுவும் தற்போதைக்கு வெளியாகவில்லை. இதுகுறித்து போலரிஸ் இந்தியா நிறுவனத்தின் தலைவர் பங்கஜ் துபே கூறுகையில், ''இந்திய விமானப்படை அதிகாரிகளுக்கு, ஃபரிதாபாத்தில் (ஹரியானா மாநிலம்) வைத்து, ஏடிவி வாகனங்களின் திறன்கள் தொடர்பாக செயல்விளக்கம் அளித்துள்ளோம்'' என்றார்.

மீட்பு பணிகளில் ஏடிவி வாகனங்கள் எவ்வாறு செயலாற்றும் என்பது தொடர்பாக விரிவான செயல் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. ஏடிவி வாகனங்களில் ஸ்ட்ரெச்சர்கள் மற்றும் அடிப்படை மருத்துவ உபகரணங்களை பொருத்தி செயல் விளக்கம் அளிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அமெரிக்காவை சேர்ந்த போலரிஸ் நிறுவனம் ஏடிவி வாகனங்கள் தயாரிப்பில் புகழ்பெற்று விளங்குகிறது.

ராணுவம் உள்ளிட்ட பாதுகாப்பு படைகளுக்கு ஏடிவி வாகனங்களை சப்ளை செய்வதில் போலரிஸ் நிறுவனம் முதன்மையான இடத்தில் உள்ளது. இந்திய வருவாயில் 40 சதவீதம் அரசாங்கத்திற்கு விற்பனை செய்வதன் மூலம் கிடைக்கும் என எதிர்பார்ப்பதாகவும் போலரிஸ் இந்தியா நிறுவனத்தின் தலைவர் பங்கஜ் துபே தெரிவித்துள்ளார்.
பாலைவனங்கள், காடுகள் மற்றும் மலைகள் போன்ற கடினமான நிலப்பரப்பு கொண்ட பகுதிகளில் சாதாரண வாகனங்களில் பயணம் செய்வது கடினம். ஆனால் இத்தகைய கடினமான இடங்களில் எளிதாக பயணிக்க உதவும் வகையில் ஆல் டெர்ரெய்ன் வாகனங்கள் டிசைன் செய்யப்படுகின்றன. ஜம்மு காஷ்மீர் போலீசாரும் கூட ஆல் டெர்ரெய்ன் வாகனங்களை பயன்படுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஏடிவி வாகனங்களின் பல்வேறு வேரியண்ட்களை அவர்கள் பயன்படுத்துகின்றனர்.


Click it and Unblock the Notifications








