பாராமோட்டாரில் 10,000 கிமீ தூரம் பறந்து சாதனை புரிந்த இந்திய விமானப்படை குழு!
பாராமோட்டாரில் 10,000 கிமீ தூரம் சாகசப் பயணம் மேற்கொண்டு இந்திய விமானப்படையை சேர்ந்த பைலட்டுகள் புதிய சாதனை புரிந்துள்ளனர்.
மலைப்பிரதேசங்கள், பாலைவனம், சமவெளி, கடற்கரையோர பகுதிகள் மற்றும் கடினமான சீதோஷ்ண நிலைகள் என இந்தியாவின் பன்முகத் தன்மையை கடந்து இந்த குழுவினர் பயணத்தை நிறைவு செய்துள்ளனர்.

பாராமோட்டார்
இருக்கையுடன் கூடிய சிறிய ஃப்ரேமில் பொருத்தப்பட்டிருக்கும் எஞ்சினை முதுகில் கட்டிக்கொண்டு பாராசூட் உதவியுடன் பறக்கும் வகையிலான சாதனத்தையே, பாராமோட்டார் அல்லது பாராகிளைடிங் என்று குறிப்பிடுகின்றனர். மேலே எழும்புவதற்கான விசையை ஃப்ரேமில் பொருத்தப்பட்டிருக்கும் எஞ்சின் வழங்குகிறது. இதனை முதுகில் கட்டிக் கொண்டு பறப்பதற்கு யாருடைய உதவியும் தேவையில்லை.

திறந்த காக்பிட்
இந்த பாராமோட்டார் அல்லது பாராகிளைடிங் எனப்படும் இந்த சாதனத்தில் திறந்த இருக்கையில் அமர்ந்தவாறு பைலட் பயணிக்க வேண்டியிருக்கும். குறைந்த தூர பயணமென்றால் பரவாயில்லை. ஆனால், இந்திய விமானப்படை குழு பல்வேறு சீதோஷ்ண நிலை மற்றும் நில அமைப்பை கடந்து 10,000 கிமீ தூரம் என்ற மிக சவாலான தூரத்தை கடந்து சாதனை புரிந்துள்ளனர்.

பயணத் திட்டம்
கடந்த பிப்ரவரி 1ந் தேதி மேற்கு வங்க மாநிலம் கலைகுண்டாவிலிருந்து துவங்கிய பயணம் கிழக்கு கடற்கரை பகுதி வழியாக தஞ்சாவூர் உள்ளிட்ட பல நகரங்களை கடந்து கன்னியாகுமரியை அடைந்தது. அங்கிருந்து வடக்கு நோக்கி பறந்து மேற்கு கடலோர பகுதி வழியாக குஜராத் சென்றது. அங்கிருந்து ராஜஸ்தான் பாலைவனம், பஞ்சாப் வழியாக இமயமலைக்கு மேலாக பறந்து ஜம்முவை அடைந்தது. அங்கிருந்து தெற்கு நோக்கி டெல்லியை வந்தடைந்த குழுவினர், உத்தரபிரதேசம், பீகார் வழியாக மேற்கு வங்கத்தை அடைந்து மீண்டும் முகாமிற்கு திரும்பினர்.

இந்திய விமானப்படை குழு
விங் கமாண்டர் எம்.பி.எஸ். சோலங்கி தலைமையிலான 14 விமானப் படை வீரர்கள் கொண்ட குழுவினர் இந்த சாகதப் பயணத்தை மேற்கொண்டனர். இவர்களுக்கு உதவியாக சிறப்புக் குழுவினரும், மருத்துவ குழுவினரும் அவர்களை தரைவழியாக பின்தொடர்ந்தனர்.

சாதனை
ஏற்கனவே 9,132 கிமீ தூரம் பாராமோட்டாரில் பயணித்ததே சாதனையாக இருந்தது. தற்போது அந்த சாதனை முறியடிக்கப்பட்டிருக்கிறது. இது தேசிய சாதனையாக குறிப்பிடப்பட்டாலும், உலக அளவிலும் பாராமோட்டாரில் அதிக தூரம் பயணித்த சாதனையாகவும் இது குறிப்பிடப்படுகிறது.

பாராமோட்டார் கதை
பாராமோட்டார் எனப்படும் இந்த பறக்கும் சாதனத்தை 1980ல் இங்கிலாந்தை சேரந்த மைக் பிர்னிதான் உருவாக்கினார். உலக அளவில் இந்த பாராமோட்டாரில் பறப்பதற்கு விதிமுறைகள் கடுமையானதாக இல்லை என்பதுடன், பைலட் லைசென்ஸும் தேவையில்லை. ஆனால், பயிற்சியும், உடல் வலிமை மற்றும் மனோதிடம் அவசியம்.

வேகம்
பறக்கும் உயரத்தை பொறுத்து இந்த பாராமோட்டார் அதிகபட்சமாக மணிக்கு 25 கிமீ வேகம் முதல் 72 கிமீ வேகம் வரை பறக்கும். சராசரியாக தரையிலிருந்து 500 அடி உயரத்தில் இந்த பாராமோட்டார் பயணிக்கும். அதிக காற்று வீச்சும், அதிக வெப்பமும் இந்த பாராமோட்டாருக்கு ஒவ்வாமை தரும் விஷயங்கள்.

எடை
இந்த பாராமோட்டார் 20 கிலோ முதல் 40 கிலோ வரை எடை கொண்டது. பாராமோட்டாரை சுமந்து கொண்டு குறைந்தது 10 அடி ஓடிய பின்னரே மேலே எழும்பி பறக்க வேண்டும். இந்த மோட்டாரை இயக்குவதற்கான த்ராட்டில் சுவிட்சும், திசையை மாற்றுவதற்கும், கட்டுப்படுத்துவதற்கும் பிரேக் டோகிள்ஸ் என்ற சுவிட்ச் மூலமாக கைகளாலேயே கட்டுப்படுத்த முடியும்.

எஞ்சின்
பொதுவாக பாராமோட்டாரில் 80சிசி முதல் 350சிசி வரையிலான திறன் கொண்ட எஞ்சின்கள் பயன்படுத்தப்படுகின்றன. பெட்ரோல் மற்றும் ஆயில் கலவை எரிபொருளில் இயங்கும். ஒரு மணி நேரம் பறப்பதற்கு குறைந்தது 3.7 லிட்டர் பெட்ரோல் செலவாகும். பைலட்டின் உடல் வலிமையை பொறுத்து எரிபொருள் நிரப்பிக் கொள்ளலாம்.

விலை
இந்திய மதிப்பில் ரூ.3.5 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரையிலான விலை கொண்டது இந்த பாராமோட்டார். அதேசமயம், இந்த பாராமோட்டாரில் பறப்பதற்கான விசேஷ உடைகளையும் வாங்கி அணிந்து கொண்டுதான் பறக்க வேண்டும்.

பயிற்சி
பாராமோட்டாரில் பறப்பதற்கு முன் பாராசூட்டில் பறந்து பயிற்சி எடுக்க வேண்டும். பின்னர், பயிற்சியாளர் உதவியுடன் எஞ்சின் இயக்கம், கட்டுப்படுத்தும் விதம் போன்றவற்றை கற்றுக் கொள்ள வேண்டியிருக்கும். விமான இயக்கத்திற்கு இணையான அதே கணக்கீடுகள் எஞ்சின் பொருத்தப்பட்ட பாராமோட்டாரை இயக்குவதற்கு தேவைப்படும். அதைத்தொடர்ந்து, விமானப் போக்குவரத்து விதிகள் மற்றும் நேவிகேஷன் பயிற்சியை பெற்ற பின்னரே பாராமோட்டாரை இயக்க முடியும்.

இந்திய விமானப்படை பற்றிய 15 சுவாரஸ்ய விஷயங்கள்!


Click it and Unblock the Notifications








