நாளைய உலக கோப்பையின் பத்து நிமிஷத்தை மட்டும் மிஸ் பண்ணிடாதீங்க.. வானத்துல தரமான சம்பவம் நடக்கபோகுது!
நாளை தினம் இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான ஐசிசி உலக கோப்பை இறுதி ஆட்டம் நடைபெற இருக்கின்றது. இந்த போட்டி குஜராத் மாநிலத்தில் அமைந்துள்ள நரேந்திர மோடி விளையாட்டு மைதானத்தில் நடைபெற உள்ளது. போட்டிக்கான அனைத்து ஏற்பாடுகளும் இங்கு தயார் செய்யப்பட்டு உள்ளன.
மேலும், இந்த போட்டியைக் காண ஏராளமான கிரிக்கெட் ரசிகள் மிகுந்த ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். இந்தியா - ஆஸ்திரேலியா மேட்சைப் பார்ப்பதற்கு உலக நாடுகளில் இருந்தும் கிரிக்கெட் விளையாட்டு ரசிகர்கள் இந்தியா வந்த வண்ணம் இருக்கின்றனர். எனவே நாளை மிகப் பெரிய விரு விருப்பான ஆட்டம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்த மாதிரியான சூழலில் போட்டி தொடங்குவதற்கு முன், பத்து நிமிடங்களுக்கு விளையாட்டு மைதானத்தின் வான்வெளியில் சூப்பரான ஏர் ஷோ-வை நிகழ்த்த இந்திய விமான படை திட்டமிட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த ஏர் ஷோ-வை சூர்ய கிரண் குழுவே விளையாட்டு மைதானத்தின் மேல் நிகழ்த்த இருக்கின்றது.
சுமார் ஒன்பது விமானங்கள் வான் கண்காட்சியில் ஈடுபடுத்தப்பட இருக்கின்றன. வான் வெளியில் அந்த ஒன்பது விமானங்களும் சீறி பாய்ந்து விளையாட்டு மைதானத்தில் இருக்கும் பார்வையாளர்களின் கண்களுக்கு விருந்தளிக்க இருக்கின்றது. விளையாட்டு வீரர்களை உற்சாகப்படுத்தும் விதமாகவும் சில வான் சாகசங்களில் அந்த விமானங்கள் ஈடுபட இருக்கின்றன.

பத்து நிமிடங்களுக்கு இந்த வான் ஷோ நிகழ்வு நிகழ்த்தப்பட இருக்கின்றது. ஆகையால், ஆட்டம் தொடங்குவதற்கு முன், முதல் பத்து நிமிடத்தை யாரும் தவற விட கூடாது. ஹாவ்க் வகை விமானங்களே சூர்யா கிரண் குழுவில் உள்ளன. இவையே நாளைய தினம் நடைபெற இருக்கும் வான் ஷோவில் சீறி பாய இருக்கின்றன. பலதரப்பட்ட வான் சாகசங்களை இந்த விமானங்கள் மேற்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
சூர்யா கிரண் குழு பற்றிய சுவாரஷ்ய விபரங்கள்: சூர்யா கிரண் என்பது சமஸ்கிருத சொல் ஆகும். இதற்கு சூரியக் கதிர் என்று அர்த்தம். 1996 ஆம் ஆண்டில் அமைக்கப்பட்டதே இந்த குழு ஆகும். ஹாக் எம்கே 132 வகை விமானங்களையே இந்த குழு பயன்படுத்துகின்றது.

இந்த குழுவே இந்திய விமான படையின் அதிகாரப்பூர்வ பிராண்ட் அம்பாசிடர் ஆகும். இந்த குழு இந்தியன் ஏர் ஃபோர்ஸின் 52 வது படைப்பிரிவின் ஒரு பகுதியாகக் காட்சியளிக்கின்றது. இந்த குழு விமான நிகழ்ச்சிகள் மற்றும் சாகசங்களுக்கு என்றே பெயர் போன குழுவாகும்.
சீனா மற்றும் பிற உலக நாடுகளில் நடைபெற்ற ஏர்-ஷோக்களிலும் இவர்கள் பங்கேற்று சிறப்பாக செயல்பட்டிருக்கின்றனர். இந்த சூர்யா கிரண் விமான குழுவில் மொத்தம் 13 விமானிகள் உள்ளனர். இவர்களில் 9 பேர் எப்போதும் தயார் நிலையில் இருப்பாரக்ள். இந்த விமானிகள் மூன்று வருடத்திற்கு ஒரு முறை புதிதாக தேர்வு செய்யப்பட்டு மாற்றப்படுவார்கள் என்பது குறிப்பிடத்தகுந்தது.

தேர்ந்தெடுக்கப்பட்ட விமானிகள் வருடத்திற்கு இரண்டு முறை விமான செயல்முறைகளில் ஈடுபடுத்தப்படுவர். ஒவ்வொரு ஆண்டும் இந்த குழு 30 நிகழ்ச்சிகள் வரை நிகழ்த்துகின்றது. பயிற்சி காலத்தில் ஒரு நாளைக்கு மூன்று முறை வரை அவர்கள் பறப்பார்கள். இவர்கள் சாகசத்தில் ஈடுபடும்போது மணிக்கு 150 கிமீ முதல் 650 கிமீ வேகத்தில் பறப்பார்கள்.
அதிகம் நிபுணத்துவம் வாய்ந்த விமானிகள் மட்டுமே இந்த சாகச குழுவில் இணைக்கப்படுகின்றனர். துள்ளியமான கணிப்பு மற்றும் பார்வை திறன் மற்றும் கூரிய உற்று நோக்கை பார்வையும் அந்த விமானிகளுக்கு கட்டாயம் ஆகும். இந்த குழு இதுவரை 500க்கும் அதிகமான விமான ஷோக்களை நாட்டில் நிகழ்த்தி இருக்கின்றது.
ஸ்ரீநகர் தொடங்கி திருவனந்தபுரம் வரை என நாட்டின் 72 முக்கிய நகரங்களில் சூர்யா கிரண் குழுவின் விமான சாகச நிகழ்ச்சி நிகழ்த்தப்பட்டு இருக்கின்றது. நாளைய தினம் குஜராத் நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தின் வான் பகுதியிலும் இவர்களின் சாகச நிகழ்ச்சி நிகழ்த்தப்பட இருக்கின்றது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: நாளைய தினம் கிரிக்கெட்டை பார்க்க டிக்கெட் புக் செய்தவர்களுக்கு கூடுதலாக கண்களுக்கு விருந்தளிக்கும் விதமாக விமான சாகச நிகழ்ச்சி நிகழ்த்தப்பட இருக்கின்றது. லியோ படத்தின் முதல் 10 நிமிடத்தை பார்க்க தவறவிட்டாலும், அடுத்த முறை அந்த படத்திற்கு சென்று அந்த பத்து நிமிடத்தை பார்த்துவிட முடியும். ஆனால், இதை தவறவிட்டால் விட்டதுதான்.


Click it and Unblock the Notifications









