முகத்தை காட்டாமல் எக்ஸசைஸ் பண்றது அவங்களா! ரகசியமா வேலையை ஆரம்பித்த இஸ்ரோ! உலகமே திரும்பி பாக்க போகுது
இஸ்ரோ ககன்யான் திட்டம் மூலம் விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பி ஆய்வு செய்ய திட்டமிட்டுள்ள நிலையில் இந்தியாவிலிருந்து விண்வெளிக்கு செல்லும் வீரர்கள் தற்போது இந்திய விமான படையால் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் தற்போது விண்வெளிக்கு செல்வதற்கான பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். இது குறித்த விபரங்களை காணலாம் வாருங்கள்.
இந்தியாவின் விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோ சமீபத்தில் தான் சந்திரயான் 3 திட்டத்தை வெற்றிகரமாக நிறைவு செய்தது. பூமியிலிருந்து விண்கலத்தை பத்திரமாக சந்திரனின் தென் துருவ பகுதியில் தரையிறக்கி உலகில் வேறு எந்த விஞ்ஞானிகளும் செய்யாத சாதனையை செய்துள்ளது. இந்நிலையில் இஸ்ரோவின் அடுத்த மிக முக்கியமான திட்டமாக இருப்பது ககன்யான் திட்டம் தான்.

இந்த ககன்யான் திட்டத்தின் படி பூமியிலிருந்து மனிதர்களை சுமார் 400 கிலோ மீட்டர் உயரத்திற்கு கொண்டு சென்று அங்கு ஆய்வுகளை நடத்தி பின்னர் அவர்களை பத்திரமாக பூமிக்கு திரும்புவது இந்த திட்டத்தின் தலையான நோக்கமாக இருக்கிறது. இஸ்ரோ இந்த திட்டத்திற்காக பல்வேறு ஆய்வு பணிகளை செய்து வருகிறது.
விண்வெளிக்கு மனிதர்களை அனுப்புவது இஸ்ரோவிற்கு இது தான் முதல் முறை. இதனால் இஸ்ரோ பல்வேறு ஆய்வுகளை செய்த பின்பு தான் மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பப் போகிறது. குறிப்பாக இரண்டு முறை மனிதர்கள் இல்லாமல் சோதனை செய்து அது வெற்றிகரமாக முடிந்தால் மட்டுமே மனிதர்களை விண்வெளிக்கு அனுப்புவோம் என இஸ்ரோ தெரிவித்துள்ளது.

திட்டத்திற்காக முதற்கட்ட சோதனை இந்த மாத இறுதிக்குள் நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த ஆறு முதல் எட்டு மாதங்களில் இரண்டாம் கட்ட சோதனையும், 2025ம் ஆண்டில் விண்வெளிக்கு இஸ்ரோ மனிதர்களை அனுப்பும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இந்தியாவிலிருந்து யார் இஸ்ரோவின் மூலம் விண்வெளிக்கு அனுப்பப்பட போகிறார்கள் என்ற கேள்வி மக்கள் மத்தியில் நீண்ட நாட்களாக இருந்து வருகிறது.
இந்நிலையில்தான் இந்திய விமானப்படை தனது 91வது ஆண்டை கொண்டாடும் விதமாக தனது சமூக வலைதள பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் இந்திய விமானப்படை இந்தியாவிற்காக செய்து வரும் பணிகள் குறித்து விளக்கமாக ஒரு குறும்படம் வெளியிடப்பட்டுள்ளது. அதில் இந்திய விமானப்படையும் இஸ்ரோவும் இணைந்து இரண்டு முக்கியமான பணிகள் செய்து வருவதை விளக்கி உள்ளனர்.

அதன்படி இஸ்ரோ தற்போது மீண்டும் மீண்டும் பயன்படுத்தக்கூடிய புதிய விண்கலத்தை தயாரித்துள்ளது. அந்த களத்தை இந்திய விமானப்படையும் உதவியுடன் தான் சோதனை செய்துள்ளது. இந்த சோதனையும் வெற்றிகரமாக முடிந்துள்ளது. அடுத்ததாக தான் ககன்யான் திட்டம். இஸ்ரோ விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் முன் அவர்களுக்கு விண்வெளியில் இருப்பதற்கான பல்வேறு பயிற்சிகள் மற்றும் அனுபவங்கள் தேவை.
இந்திய விமானப்படையில் உள்ள வீரர்கள் தான் தைரியமாகவும் அதே நேரம் வானில் பறக்கும் பயிற்சி மற்றும் அனுபவம் பெற்றவர்களாகவும் இருப்பார்கள். அதனால் அவர்களின் சிலரை தேர்வு செய்து இந்திய விமானப்படை தற்போது அவர்கள் விண்வெளிக்கு செல்வதற்காக பயிற்சிகளை வழங்கி வருகிறது. இந்த தகவலை இந்திய விமானப்படை அதிகாரப்பூர்வமாகவே அந்த வீடியோவில் தெரிவித்துள்ளது.
ஆனால் இந்த வீடியோவில் அந்த வீரர்களின் முகங்கள் எதுவும் காட்டப்படவில்லை. அவர்கள் உடற்பயிற்சி செய்யும் காட்சிகள் மட்டுமே இடம்பெற்றுள்ளது. அதுவும் அவர்கள் முகம் தெரியாதபடி எடுக்கப்பட்டுள்ளது. இந்த வீரர்கள் யாரும் இதுவரை உறுதி செய்யப்படவில்லை. இவர்கள் தற்போது சோதனை கட்டத்திலேயே இருக்கின்றனர். இவர்களுக்கு பல்வேறு சோதனைகள் செய்யப்பட்டு அதிலிருந்து தான் மூன்று வீரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என்பதால் இந்த வீரர்களின் முகம் எதுவும் வீடியோவில் காட்டப்படவில்லை.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவின் விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோ தற்போது சர்வதேச அளவில் மிக பெரிய விண்வெளி ஆய்வு மையமாக வளர்ந்து வருகிறது. வெகு சில நாடுகளை விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பியுள்ள நிலையில் தற்போது இஸ்ரோவும் இந்த முயற்சியை கையில் எடுத்துள்ளது. இந்த முயற்சியும் வழக்கம் போல இஸ்ரோவிற்கு ஒரு வெற்றி மைல்கல்லாகவே அமையும் என நம்பலாம்.


Click it and Unblock the Notifications
