ஐசிஐசிஐ வழங்கும் அசத்தலான காப்பீட்டு திட்டம்... பல வாகனங்களுக்கு ஒரே இன்சூரன்ஸ்...
"ஒரு உரிமையாளர், பல வாகனங்கள்" என்ற திட்டத்தின் அடிப்படையில் ஐசிஐசிஐ சிறப்பு காப்பீட்டு திட்டத்தை அறிமுகம் செய்ய உள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.

வாகனங்கள் சாலையில் இயங்குவதற்கு பதிவு சான்று, ஓட்டுநர் உரிமம் போன்ற ஆவணங்கள் எந்தளவிற்கு முக்கியமோ அதே அளவிற்கு காப்பீடு மிக முக்கியமானதாகக் கருதப்படுகின்றது.
இது வாகன திருட்டு மற்றும் விபத்து போன்ற சம்பவங்களில் இழப்பீடை ஈட்டி தருவதற்கும், உரிய நிவாரணத்தைப் பெறுவதற்கும் உதவியாக இருக்கின்றத. இதன்காரணமாகவே, வாகனங்களுக்கான காப்பீடு கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இதற்கான விதி கடந்த 1988ம் ஆண்டு முதலே மோட்டார் வாகன சட்டத்தில் இடம்பெற்று வருகின்றது. இந்த விதியானது, புதிதாக வாங்கப்படும் வாகனங்களுக்கு ஆண்டுக்கு ஒரு முறை காப்பீட்டை புதுப்பிக்க வேண்டும் என கட்டாயப்படுத்தி வந்தது.
ஆனால், இதில் மிகப்பெரிய மாற்றத்தை கடந்த 2018ம் ஆண்டு ஜுலை மாதம் 20ம் தேதி நாட்டின் முதன்மை நீதிமன்றமான உச்சநீதிமன்றம் செய்தது.

அதன்படி, புதிதாக பதிவு செய்யப்படும் வாகனங்கள் மூன்று அல்லது ஐந்து ஆண்டுகள் வரை கட்டாயமாக காப்பீடு செய்யப்பட வேண்டும் என்ற புதிய வழிகாட்டுதல் ஐஆர்டிஏ-விற்கு வழங்கப்பட்டது.

நாட்டில் இயங்கும் காப்பீடு பெறாத வாகனங்கள் முறையான இன்சூரன்ஸை பெறும் என்ற எதிர்பார்ப்பில் இந்த புதிய வழிமுறையை உச்சநீதிமன்றம் ஐஆர்டிஏ-விற்கு வழங்கியது. இருப்பினும், இந்த விதிமுறையை ஒருசில காப்பீட்டு நிறுவனங்கள் இன்றளவும் நடைமுறைக்குக் கொண்டுவரவில்லை என்ற புகார் எழுந்த வண்ணம் உள்ளது.

இவ்வாறு காப்பீடு விவகாரத்தில் பல்வேறு சூழ்நிலைகள் நிலவிக் கொண்டிருக்கும் வேலையில் பெருவாரியான வாடிக்கையாளர்களைக் கவரும் நோக்கில் "ஒரு பிரிமியம் பாலிசியில், பல கார்களுக்கு காப்பீடு பெறும் திட்டத்தை ஐசிஐசிஐ லம்பார்டு காப்பீடு நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

'ப்ளோட்டர்' (floater) பாலிசி தேர்வு என்றழைக்கப்படும் இது, நாம் எப்படி ஒரே பாலிசியில் கணவன், மனைவி, பிள்ளைகள் என ஒரு குடும்பம் முழுவதையும் காக்கின்றோமோ அதேபோன்று இந்த திட்டத்தின்கீழ், ஒரு உரிமையாளரின் பல கார்களுக்கு காப்பீடு செய்ய முடியும்.

முன்னதாக, குடும்பங்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டு வந்த இந்த சிறப்பு திட்டத்தை ஐசிஐசிஐ லம்போர்டு "சிங்கிள் ஓவ்னர், மல்டிபிள் வாகனங்கள்" என்றதன் அடிப்படையில் வாகனங்களுக்கு வழங்கவிருக்கின்றது. இது முழுக்க முழுக்க செல்போன் செயலியை மையமாகக் கொண்டு இயங்கும் சேவையாகும். இதில், மூன்று முதல் நான்கு கார்களுக்கு காப்பீடு செய்ய முடியும்.

இது இரண்டு, மூன்று சக்கர வாகனங்களுக்கும் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. தற்போது ஆரம்பநிலையில் தொடங்கப்பட்டுள்ள இத்திட்டம் ஆறு மாதங்களுக்கு பின்னரே விரிவாக்கம் செய்யப்படும் என ஐசிஐசிஐ காப்பீட்டு நிறுவனத்தின் முக்கிய அதிகாரியான சஞ்சய் தத் தெரிவித்துள்ளார்.

பல வாகனங்களுக்கு உரிமையாளராக இருக்கும் ஓர் நபர் ஒரே நேரத்தில் அனைத்து கார்களையும் இயக்க முடியாது, அவரால் ஒரு வாகனத்தை மட்டுமே இயக்க முடியும் என்ற காரணத்தினால் இத்தகைய திட்டத்தை ஐசிஐசிஐ வழங்க இருக்கின்றது.

தற்போது, பெரும்பாலான காப்பீட்டாளர்கள் வாடிக்கையாளர்களின் சொந்த சேதத்தை மதிப்பீடு செய்து காப்பீடு வழங்கி வருகின்றனர். அதாவது, வாகனம் தயாரித்தல், மாடல், வயது, இருப்பிடம் மற்றும் பாலிசியில் பொருந்தாத உரிமைகோரல் போனஸ் ஆகியவற்றை மையமாகக் கொண்டு பிரிமியம் வழங்கி வருகின்றனர்.

காப்பீடு செய்யப்படும் வாகனங்களுக்கு ஏற்படும் சேதம் அல்லது அந்த வாகனத்தால் ஏற்படும் இழப்பு ஆகியவற்றிற்கான உரிய இழப்பீட்டை சம்பந்தப்பட்ட காப்பீட்டு நிறுவனங்கள் வழங்க வேண்டும். இதற்காகவே வாகனங்களுக்கான காப்பீடு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இது, அதிகபட்சம் விபத்து போன்ற அவசரகாலங்களிலேயே பொருந்தும். மேலும், வாகன திருட்டின்போது உரிய நிவாரணம் பெறுவதற்கும் காப்பீடு உதவும்.

குறிப்பாக, ஒரு சில வாகன காப்பீட்டு நிறுவனங்கள் வாகனத்தின் பயன்பாடு மற்றும் இன்சூரன்ஸ் கிளைமிங் உள்ளிட்டவற்றைக் கணக்கிட்டு, காப்பீட்டை புதுப்பிக்கும்போது பல்வேறு சலுகைகளை வழங்கி வருகின்றது. இவ்வாறு, வாடிக்கையாளர்கள் ஈர்க்கும்விதமாக மேற்கொள்ளப்படும் இந்த முயற்சிகள் பல நேரங்களில் தோல்வியைதான் சந்திக்கின்றன.

ஆனால், ஐசிஐசிஐ லம்பார்டு மேற்கொள்ளவிருக்கும் இத்திட்டம் நல்ல வரவேற்பைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது. அதேசமயம், இது எந்த அளவிற்கு சாத்தியமாகின்றது என்பதைக் காண இன்னும் ஆறு மாதங்கள் காத்திருக்க வேண்டும்.


Click it and Unblock the Notifications








