100 ஊழியர்களுக்கு 100 கார்களை பரிசளித்த சென்னை கம்பெனி... மொத்தமா எவ்ளோ கோடி செலவு பண்ணியிருக்காங்க தெரியுமா?
ஐடி நிறுவனம் ஒன்று 100 ஊழியர்களுக்கு 100 கார்களை பரிசாக வழங்கியுள்ள நிகழ்வு அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

ஐடி நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களுக்கு கார்களை பரிசாக வழங்கும் கலாச்சாரம் தற்போது வேகமாக பரவி வருகிறது. சென்னையை சேர்ந்த கிஸ்ஃப்ளோ (Kissflow) என்ற நிறுவனம் வெகு சமீபத்தில், 5 ஊழியர்களுக்கு கார்களை பரிசாக வழங்கியிருந்தது. கிஸ்ஃப்ளோ நிறுவனம் தனது ஊழியர்களுக்கு வழங்கியது, பிஎம்டபிள்யூ 5 சீரிஸ் (BMW 5 Series) கார்கள் ஆகும்.

மிகவும் விலை உயர்ந்த பிஎம்டபிள்யூ கார்களை கிஸ்ஃப்ளோ நிறுவனம் தனது ஊழியர்களுக்கு வழங்கியது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. இந்த ஆச்சரியத்தில் இருந்து மக்கள் வெளியே வருவதற்குள், மற்றொரு ஆச்சரியம் நிகழ்ந்துள்ளது. ஆம், தற்போது மற்றொரு ஐடி நிறுவனமும் தங்கள் ஊழியர்களுக்கு புதிய கார்களை பரிசாக வழங்கியுள்ளது.

ஐடியாஸ்2ஐடி (Ideas2IT) என்ற நிறுவனம்தான் தற்போது தனது ஊழியர்களுக்கு புதிய கார்களை பரிசாக வழங்கியுள்ளது. சென்னையில் அலுவலகத்தை கொண்டுள்ள ஐடியாஸ்2ஐடி நிறுவனம், சமீப காலமாக மிக சிறப்பான வளர்ச்சியை பதிவு செய்து வருகிறது. அந்த நிறுவனத்தின் வருவாய் அதிகரித்து வருவதற்கு, ஊழியர்களின் மிக சிறப்பான பங்களிப்பே மிக முக்கியமான காரணமாக பார்க்கப்படுகிறது.

எனவே ஊழியர்களை ஊக்குவிக்கும் வகையில், தற்போது 100 ஊழியர்களுக்கு 100 கார்களை ஐடியாஸ்2ஐடி நிறுவனம் பரிசளித்துள்ளது. ஐடியாஸ்2ஐடி நிறுவனம், பதவி நிலையை அடிப்படையாக வைத்து, கார்களை பரிசாக வழங்கவில்லை. மாறாக ஐடியாஸ்2ஐடி நிறுவனத்தில் 5 ஆண்டுகளை நிறைவு செய்த அனைத்து ஊழியர்களுக்கும் புதிய கார்கள் பரிசாக வழங்கப்பட்டுள்ளன.

மாருதி சுஸுகி நிறுவனத்தின் எஸ்-க்ராஸ் (Maruti Suzuki S-Cross) மற்றும் பலேனோ (Maruti Suzuki Baleno) போன்ற கார்களை, ஐடியாஸ்2ஐடி நிறுவனம் தனது ஊழியர்களுக்கு பரிசாக வழங்கியுள்ளது. இந்த நிகழ்ச்சியின் புகைப்படங்கள் தற்போது சமூக வலை தளங்களில் வேகமாக பரவி வருகின்றன. இதில், மாருதி சுஸுகி நிறுவனத்தின் மற்ற கார்களையும் நம்மால் காண முடிகிறது.

இதன்படி மாருதி சுஸுகி எர்டிகா (Maruti Suzuki Ertiga) மற்றும் மாருதி சுஸுகி விட்டாரா பிரெஸ்ஸா (Maruti Suzuki Vitara Brezza) உள்ளிட்ட கார்களையும் நம்மால் பார்க்க முடிகிறது. எனவே இந்த கார்களும் ஊழியர்களுக்கு பரிசாக வழங்கப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது. ஊழியர்களுக்கு காரை பரிசளிப்பதற்காக, ஐடியாஸ்2ஐடி நிறுவனம் சுமார் 15 கோடி ரூபாயை செலவிட்டதாக கூறப்படுகிறது.

ஊழியர்களுக்கு கார்களை பரிசாக வழங்கும் நிகழ்ச்சியில், ஐடியாஸ்2ஐடி நிறுவனத்தின் நிறுவனர் முரளி விவேகானந்தன் (Murali Vivekanandan), தலைமை செயல் அதிகாரியான காயத்ரி விவேகானந்தன் (Gayathri Vivekanandan) ஆகியோர் கலந்து கொண்டனர். அவர்கள் மூலம் ஊழியர்களுக்கு புதிய கார்களின் சாவிகள் ஒப்படைக்கப்பட்டன.

இந்தியாவின் நம்பர்-1 கார் நிறுவனம் என்ற மகுடத்தை தன்வசம் வைத்துள்ள மாருதி சுஸுகி நிறுவனத்தின் கார்கள்தான் தற்போது ஐடியாஸ்2ஐடி நிறுவனத்தின் ஊழியர்களுக்கு பரிசாக வழங்கப்பட்டுள்ளன. மாருதி சுஸுகி நிறுவனம் தற்போது இந்திய சந்தையில் தீவிரமாக பணியாற்றி வருகிறது. பல்வேறு கார்களை தொடர்ச்சியாக மாருதி சுஸுகி நிறுவனம் களமிறக்கி கொண்டுள்ளது.

புதிய தலைமுறை செலிரியோ, செலிரியோ சிஎன்ஜி, 2022 பலேனோ, 2022 வேகன் ஆர் என மாருதி சுஸுகி நிறுவனத்தின் அப்டேட் செய்யப்பட்ட புதிய கார்கள் தொடர்ச்சியாக சந்தைக்கு வந்து கொண்டுள்ளன. இதைதொடர்ந்து புதிய எர்டிகா மற்றும் எக்ஸ்எல்6 ஆகிய கார்கள் நடப்பு ஏப்ரல் மாதம் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளன.

முதலில் எர்டிகா காரின் புதிய மாடலும், அதை தொடர்ந்து எக்ஸ்எல்6 காரின் புதிய மாடலும் விற்பனைக்கு கொண்டு வரப்படவுள்ளன. இவை இரண்டுமே எம்பிவி ரகத்தை சேர்ந்த கார்கள் ஆகும். கியா நிறுவனம் சமீபத்தில் கேரன்ஸ் என்ற புதிய காரை விற்பனைக்கு அறிமுகம் செய்தது. மாருதி சுஸுகி எர்டிகா மட்டுமல்லாது, எக்ஸ்எல்6 காருக்கும் இது கடுமையான போட்டியை ஏற்படுத்தியுள்ளது.

கியா கேரன்ஸ் மூலம் உருவாகியுள்ள புதிய போட்டியை, 2022 எர்டிகா மற்றும் 2022 எக்ஸ்எல்6 கார்கள் மூலமாக சமாளிப்பதற்கு மாருதி சுஸுகி நிறுவனம் திட்டமிட்டுள்ளது. புதிய மாடல்களின் வருகைக்கு பின், இந்திய சந்தையில் எர்டிகா மற்றும் எக்ஸ்எல்6 கார்களின் விற்பனை உயரும் என மாருதி சுஸுகி நிறுவனம் எதிர்பார்க்கிறது.


Click it and Unblock the Notifications