ஏர் ஃபில்டர் காற்றை வடிகட்டாம எஞ்ஜினுக்கு அப்படியே அனுப்பினா என்ன ஆகும்? இந்த விஷயத்துல மட்டும் கஞ்ச தனம் நோ!
எஞ்ஜினை பாதுகாக்கும் மிக முக்கியமான அம்சங்களில் ஏர் ஃபில்டர் (Air Filter)-ம் ஒன்றாகும். உலகின் அதிகம் மாசுபடிந்த நகரங்களில் சில இந்தியாவிலும் உள்ளன. இந்த மாதிரியான நகரங்களில் வாகனங்களை அதிக ஆரோக்யத்துடன் பாதுகாக்கவே ஏர் ஃபில்டர்கள் உதவுகின்றன. தூசி மற்றும் அழுக்குகள் உள்ளிட்டவற்றிடம் இருந்தே இந்த ஏர் ஃபில்டர்கள் எஞ்ஜினைப் பாதுகாக்கின்றன.
ஆகையால், இந்த ஏர் ஃபில்டரின் ஆரோக்கியத்தைப் பேணிக் காப்பது என்பது மிகுந்த அவசியமாக பார்க்கப்படுகின்றது. ஒருவேளை இந்த ஏர் ஃபில்டர் சரியாக வேலை செய்யவில்லை என்றால் என்ன நடக்கும் என்பதை என்றைக்காவது யோசித்து பார்த்திருக்கின்றீர்களா? மேலும், என்ன நடக்கும் என்பதாவது உங்களுக்கு தெரியுமா?

இது பற்றி அறியாதவராக நீங்கள் இருந்தால், இந்த தகவல் உங்களுக்கானதுதான். ஆமாங்க, இந்த பதிவில் ஏர் ஃபில்டர் சரியாக வேலை செய்யவில்லை என்றால் எஞ்ஜினில் என்ன மாதிரியான பாதிப்புகள் ஏற்படும் என்பது பற்றிய தகவலையே பார்க்க உள்ளோம். வாருங்கள் விரிவான பதிவிற்குள் போகலாம்.
ஏர் ஃபில்டர்கள் எதைக் கொண்டு தயாரிக்கப்படுகின்றன? எஞ்ஜினைப் பாதுகாப்பதில் முக்கிய பங்கினை வகிக்கும் இந்த ஏர் ஃபில்டர்கள் பேப்பர் மற்றும் சிந்தடிக் ஃபைரினால் ஆன கலவையால் தயாரிக்கப்படுகின்றது. இதுவே மிக துண்ணிய தூசிகளுக்கான பொறியாக செயல்படுகின்றது. அதாவது, காற்றில் இருந்து தூசி தடுத்து சுத்தமான காற்றை மட்டும் எஞ்ஜினுக்குள் செல்ல உதவுகின்றது.

இந்த பணி நடக்க தவறினால் எஞ்ஜினுக்குள் என்ன ஆகும்? காற்று வடிகட்டப்படாமல் அப்படியே எஞ்ஜினுக்குள் உள்ளே செல்ல நேரிடும். இவ்வளவுதானா என இதனை சுலபமாக எடைப் போட்டுவிட வேண்டாம். இந்த செயல்தான் எஞ்ஜினில் ஏற்படும் பல்வேறு சிக்கல்களுக்கும், ஆபத்துக்கும் மூலகாரணம் ஆகும்.
குறிப்பாக உங்களுடைய கார் டர்போசார்ஜர் எஞ்ஜினைக் கொண்டிருக்கும் எனில் சேதம் மிகப் பெரியதாக இருக்கும் என்பதை மறந்துவிடாதீர்கள். ஏனெனில் டர்போசார்ஜர் வகை எஞ்ஜினின் அதிக செயல்திறன்பாட்டிற்கு காற்று மிக முக்கியமானதாக இருக்கின்றது. இதன் திறன் அதிகரிக்க அதிக அழுத்தத்துடன் காற்று அழுத்தப்படுகின்றது.

இந்த மாதிரியான சூழலில் காற்று அழக்கு மற்றும் கசடுகளுடன் உள் நுழையும் எனில் டர்போசார்ஜரின் செயல்பாட்டில் சிக்கல் ஏற்படும். குறிப்பாக, டர்போசார்ஜர் வகை எஞ்ஜினின் ஒரு பக்கம் இம்பெல்லராக செயல்படும். இது மோட்டாரின் காற்று உள் நுழையும் சிஸ்டத்துடன் இணைக்கப்பட்டு இருக்கும்.
இந்த நிலையில், காற்று அதிக அழுக்குடன் உள் நுழையும் எனில் இந்த சிஸ்டத்தில் தீவிரமான பாதிப்புகளை ஏற்படும். இதனால், நாளடைவில் எஞ்ஜின் செயலிழப்புகூட ஏற்படலாம். இயந்திரத்தின் பிஸ்டன்களையே முதலில் இந்த நிலை பாதிக்கச் செய்கின்றது. பிஸ்டன் ஒவ்வொரு முறையும் கீழே இறங்கும்போதும் காற்று உள்ளே இழுக்கப்படுகின்றது.
இந்த நிலையில் காற்று வடிகட்டி வேலை செய்யாமல் போனால், நேரடியாக அழுக்குகளும், தூசிகளும் பிஸ்டன், வால்வுகள் மற்றும் சிலிண்டர்களுக்குள் நுழைந்து படிந்துக் கொள்ளும். இதனால், அவற்றின் சுற்று சுவர் பாதிக்கப்படும். அதுமட்டுமின்றி, பிசுக்காக சுற்றிலும் படர்ந்து எஞ்ஜினின் திறனையும் குறைக்கச் செய்யும். இதோடு நில்லாமல் விரைவிலேயே எஞ்ஜினை வேலை செய்யாமல் அவை தடுக்கவும் செய்யலாம்.
இத்தகைய மோசமான பின் விளைவுகளையே அழுக்கான காற்றுகள் காரின் எஞ்ஜினில் ஏற்படுத்துகின்றன. ஆகையால், ஏர் ஃபில்டர் விஷயத்தில் எப்போதும் சமரசம் கூடாது என்பதே எங்களின் அறிவுறுத்தல் ஆகும். காற்று வடிகட்டிக்கா சில நூறு ரூபாய்களைச் செலவு செய்ய யோசித்தால் நாளடைவில் உங்கள் பாக்கெட்டில் இருந்து பல ஆயிரம் ரூபாயை செலவு செய்ய வைத்துவிடும்.
எனவே, அவ்வப்போது காற்று வடிகட்டியைச் சுத்தம் செய்வது, தேவைப்பட்டால் மாற்றுவது போன்ற நடவடிக்கை எடுப்பதே நல்லது. மேலும், சந்தையில் கிடைக்கும் ஏதோ மலிவு விலை காற்று வடிகட்டியைப் பயன்படுத்துவதையும் தவிர்க்க வேண்டும். மலிவு விலை ஏர் ஃபில்டர்கள், செயல்பாட்டிலும் மலிவானதாகவே இருக்கும். ஆகையால், தூசிகள் எளிதில் எஞ்ஜினுக்குள் நுழைய நேரிடலாம்.
உங்கள் கார் அல்லது மற்ற வாகனம் எளிதில் மாசடைவதைத் தவிர்க்க 12 ஆயிரம் மைல்களுக்கு ஒரு முறை ஏர் ஃபில்டரைச் செக் செய்துவிடவும். பிரீமியம் தரத்திலான காற்று வடிகட்டிகள் 99 சதவீதம் காற்றை வடிகட்டியே காற்றை எஞ்ஜினுக்குள் கடத்துகின்றன. அவை 5 முதல் 6 மைக்ரான் அளவுள்ள துகள்களைக்கூட சிறைப் பிடிக்கும் திறன் கொண்டவையாக இருக்கும். ஆகையால், ஏர் ஃபில்டரை தேர்வு செய்யும்போது அதிக சற்று கவனத்துடன் இருப்பதே நல்லது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவின் பல்வேறு நகரங்களில் காற்று மாசுபாடு தலைவிரித்தாடிக் கொண்டிருக்கின்றது. இந்த மாதிரியான சூழல் நிலவுவது உங்களின் வாகனத்திற்கு பேராபத்தான சூழலை ஏற்படுத்தலாம். ஆகையால், காற்று வடிக்கட்டி விஷயத்தில் எந்த சமரசமும் கூடாது என்பதே எங்களின் முதன்மையான அறிவுறுத்தலாக இருக்கின்றது.


Click it and Unblock the Notifications
