சும்மா பேச்சுக்கு சொல்லல.. குறிப்பிட்ட போக்குவரத்து விதிமீறலுக்கு 20 ஆயிரம் ரூபா வரை அபராதம் வசூலிக்க போறாங்க!
குறிப்பிட்ட போக்குவரத்து விதிமீறலுக்கு ரூ. 20 ஆயிரம் வரை அபராதம் வசூலிக்கப்படும் என மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

போக்குவரத்து விதிமீறல்கள் அதிகம் அரங்கேறும் உலக நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் ஒன்று. "பொருளாதாரத்திலோ, வளரும் நாடுகளின் பட்டியலிலோ நாடு முன்னணி இடத்தில் இருந்தால், அதனை வரவேற்கலாம். இதுல முன்னணி நாடாக இருந்து என்ன பயன்" என சமூக நல ஆர்வலர்கள் வேதனைத் தெரிவிக்கின்றனர். இந்த மாதிரியான அவலநிலையை களையும் பொருட்டு மத்திய, மாநில அரசுகள் பல்வேறு கடும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.

அந்தவகையில், தற்போது ஓர் புதிய விதி அமலுக்குக் கொண்டு வரப்பட்டிருப்பதாகவும், அது ரூ. 20,000 வரை அபராதம் விதிப்பதற்கு வழி வகுக்கும் எனவும் அதிர்ச்சியளிக்கும் தகவல்கள் வெளியாகியுள்ளன. நம் நாட்டில் இன்னும் பலரின் சம்பளம் ரூ. 10 ஆயிரத்திற்கும் குறைவாக இருக்கின்றநிலையில் என்ன மாதிரியான சிக்கல்கள் இந்த புதிய விதியால் நாட்டில் ஏற்பட போகின்றதோ அச்சம் அனைவரின் மத்தியிலும் எழும்பியிருக்கின்றது. அதேவேலையில், இது குறிப்பிட்ட அந்த போக்குவரத்து விதிமீறலைக் குறைக்க உதவும் என மிக உறுதியாக நம்பப்படுகின்றது.

போக்குவரத்து விதிமீறல்களால் விபத்துகளும், உயிரிழப்புகளும் அதிகளவில் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன. இது அரசுக்கும், குறிப்பிட்ட துறை சார்ந்த அதிகாரிகளுக்கும் கடும் தலை வலியாக மாறியிருக்கின்றது. எனவேதான் இந்த விவகாரத்தில் அவ்வப்போது புதிய விதிகளை அரசு அமல்படுத்திக் கொண்டிருக்கின்றது. அதாவது, போக்குவரத்து விதிமீறல்வாதிகளைக் கடுமையாக தண்டிக்கும் வகையில் புதிய விதிகள் அறிமுகம் செய்யப்பட்டு வருகின்றன.

அந்தவகையிலேயே ரூ. 20 ஆயிரம் வரை அபராதம் விதிக்கக் கூடிய புதிய விதியை மத்திய அரசு அமலுக்குக் கொண்டு வந்திருக்கின்றது. மோட்டார் வாகனம் பயன்படுத்தக் கூடாத லேன்களில் (Non Motorized Vehicle Lane) கார் அல்லது மோட்டார்சைக்கிள் அல்லது ஸ்கூட்டர் போன்ற எந்த வாகனம் பயணிக்குமானாலும், அந்த குறிப்பிட்ட வாகனத்தை இயக்கிய ஓட்டுநருக்கே இந்த உச்சபட்ச அபராதம் விதிக்கப்படும் என அரசு எச்சரிக்கை விடுத்திருக்கின்றது.

இதுமட்டுமின்றி, அவசரகால வாகனங்களான ஆம்புலன்ஸ் மற்றும் தீயணைப்பு வாகனங்களுக்கு இடையூறாகவோ அல்லது வழிவிடாமல் பயணிக்கக் கூடிய வாகன ஓட்டிகளுக்கும் அதிகபட்ச அபராதம் விதிக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த விதிமீறலுக்கு ரூ. 10 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும் என கூறப்படுகின்றது. அவசரகால வாகனங்களின் உதவி உடனுக்குடன் கிடைக்க வேண்டும் என்பதைக் கருத்தில் கொண்டு இந்த புதிய விதிகள் நடைமுறைக்குக் கொண்டு வரப்பட்டிருக்கின்றன.

குறிப்பாக, விதிமீறல்களால் ஏற்படும் விபத்துகளையும், இன்னல்களையும் குறைக்கும் பொருட்டு கடும் அபராதம் போன்ற நடவடிக்கைகளை அரசுகள் மேற்கொண்டு வருகின்றன. இதன் அடிப்படையிலேயே புதிய விதிகளை அரசு அமலுக்குக் கொண்டு வந்திருக்கின்றது. மோட்டார் வாகன சட்டம் 115/194(1) மற்றும் 194இ ஆகிய விதிகளின்கீழ் இந்த உச்சபட்ச அபராதம் அமல்படுத்தப்பட்டுள்ளது.

விதிகளையும், அபராதங்களையும் கடுமையாக்குவதனால் போக்குவரத்து விதிமீறல்களைப் பல மடங்கு குறைக்க முடியும் என அரசு நம்புகின்றது. இதன் அடிப்படையிலேயே பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு, போக்குவரத்து விதிமீறல்களுக்கான அபராதங்களை பல மடங்கு அதிகமாக உயர்த்திக் கொண்டிருக்கின்றது.

அந்தவகையில், முன்னதாக 100 ரூபாய் மற்றும் 200 ரூபாய் என இருந்த விதிமீறல்களுக்கான அபராதங்களை ஆயிரம், பத்தாயிரம் ரூபா என உயர்த்தப்பட்டது. குறிப்பாக, ட்ரிங்க் அன்ட் டிரைவிற்கு உச்சபட்சமாக ரூ. 10,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. நாட்டில் பெரும்பாலான விபத்துகளுக்கு போதையில் வாகனங்களை இயக்கியதே முக்கிய காரணமாக இருக்கின்றது.

இதுமட்டுமின்றி, செல்போனில் பேசியபடி வாகனத்தை இயக்குவதாலும், தவறான பாதையில் பயணிப்பதாலும், அதிக வேகத்தில் பயணிப்பது போன்ற காரணங்களினாலும் அதிகளவில் விபத்துகள் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன. இதுமட்டுமின்றி, பயணங்களின்போது ஹெல்மெட்டை அணியாமல் இருப்பது சீட் பெல்டை பயன்படுத்தாது உள்ளிட்டவற்றால் காயமடைவோர் மற்றும் உயிரிழப்போரின் எண்ணிக்கையும் அதிகரித்துக் காணப்படுகின்றது.

எனவேதான் இந்த விவகாரத்திலும் அரசு மிகக் கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. குறிப்பாக, ஹெல்மெட் அணியாத இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு உச்சபட்ச அபராதம் வழங்கப்படுகின்றது. பைக்கை ஓட்டுபவர் மட்டுமின்றி பின்னால் அமர்ந்து பயணிப்பவரும் ஹெல்மெட் அணிய வேண்டும் என்பது விதியாகும். இதை பின்பற்றாத நபர்களுக்கும் போக்குவரத்துத்துறை அதிகாரிகள் கடுமையான அபராதங்களை விதித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications








