விமானத்தில் போகாதீங்கனு சொன்னா யாரு கேட்க போறாங்க... சென்னை- பெங்களூரு புது ஹைவே வந்துச்சுனா எல்லாமே மாறிடும்!
மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி (Nitin Gadkari), இந்தியாவில் பல குறுகிய தூர விமான சேவைகள் எதிர்காலத்தில் சாத்தியமற்றதாகிவிடும் என்று தனது சமீபத்திய பேட்டியில் தெரிவித்துள்ளார். அதிவேக நெடுஞ்சாலைகள் மற்றும் விரைவுச்சாலைகளில் குறைவான பயண நேரம் காரணமாக, பயணிகள் விமானப் பயணத்திற்குப் பதிலாக சாலைப் போக்குவரத்தைத் தேர்வு செய்வார்கள் என்று அவர் உறுதியாக கூறியுள்ளார்.
இந்த நிலைமை, இந்தியாவில் பல உள்நாட்டு விமான வழித்தடங்களைத் தேவையற்றதாக மாற்றும். இதுகுறித்து தனியார் நிகழ்ச்சி ஒன்றின் விருதுகள் வழங்கும் நிகழ்ச்சியில் பேசிய கட்கரி, சாலை இணைப்பு மேம்படும்போது, டெல்லி-டேராடூன், டெல்லி-ஜெய்பூர், டெல்லி-சண்டிகர் போன்ற குறுகிய தூர வழித்தடங்களில் மக்கள் விமானப் பயணத்தைத் தவிர்ப்பார்கள் எனக் கூறினார். மும்பை-புனே வழித்தடத்தை உதாரணமாகக் கூறி, இந்த வழித்தடத்தில் அமைக்கப்பட்டுள்ள மேம்பட்ட நெடுஞ்சாலைகள் பல விமான சேவைகளை மூடியதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

"இந்த ஆண்டு, டெல்லியில் இருந்து ஆறு இடங்களுக்கான விமான சேவைகளை நான் நிறுத்துவேன். இதை குறித்து வைத்துக் கொள்ளுங்கள்" என மத்திய அமைச்சர் கட்கரி தெரிவித்துள்ளார். "டெல்லி-டேராடூன், டெல்லி-ஜெய்ப்பூர், டெல்லி-அமிர்தசரஸ், டெல்லி-சண்டிகர், சென்னை-பெங்களூரு மற்றும் மைசூரு-பெங்களூரு ஆகிய வழித்தடங்களில் மக்கள் விமானப் பயணத்தை நிறுத்திவிடுவார்கள்" என்றும் அவர் குறிப்பிட்டார்.
மும்பை-புனே உதாரணத்தை விரிவாகப் பகிர்ந்துக் கொண்ட அமைச்சர் நிதின் கட்கரி, "மும்பைக்கும் புனேக்கும் இடையே ஜெட் ஏர்வேஸ் (Jet Airways) எட்டு விமான சேவைகளை இயக்கியது. நான் நெடுஞ்சாலையை அமைத்ததும், அவை அனைத்தும் நிறுத்தப்பட்டன" என்றார். விமானப் பயணத்தில் இருந்து சாலைப் பயணத்திற்கு மாறும் மக்களின் இந்த மாற்றம் ஆனது ஆட்டோமொபைல் (Automobile) மற்றும் பொதுப் போக்குவரத்துத் துறைகளுக்கு லாபமளிக்கும்.

பொதுப் போக்குவரத்திற்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும் எனவும் வலியுறுத்திய மத்திய அமைச்சர் கட்கரி, "வரும் காலத்தில் பொதுப் போக்குவரத்து கணிசமாக உயரும்" என்றார். இந்தியப் பொருளாதாரத்தின் முக்கிய தூணாக ஆட்டோமொபைல் துறை திகழ்கிறது என்று பெருமையுடன் தெரிவித்த அமைச்சர் நிதின் கட்கரி, "ஆட்டோமொபைல் தொழில் எங்கள் பொருளாதாரத்தின் வளர்ச்சி இயந்திரம் ஆகும்.
மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு ஜி.எஸ்.டி-யில் அதிக வருவாயைக் கொண்டு வந்து, வெளிநாடுகளுக்கு அதிகம் ஏற்றுமதியாகும் துறையாகவும் இது உள்ளது," என்றும் அவர் விளக்கினார். கட்கரியின் கூற்றுப்படி, இந்திய ஆட்டோமொபைல் துறை ஏற்கனவே 4.5 கோடி வேலைகளைச் உருவாக்கியுள்ளது - இது நாட்டிலேயே அதிகப்பட்சம் ஆகும். இந்தியாவில் வாகனங்களுக்கான தேவையும் அதிகரிக்கும் என்று அமைச்சர் கூறினார்.

"இதுவரை நீங்கள் பார்த்த சாலைகள் வெறும் ட்ரெய்லர் தான்; உண்மையான படம் இன்னும் தொடங்கவில்லை," என உவமையுடன் கூறிய மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, சாலை வழியாக டெல்லி-டேராடூன் பயண நேரத்தை இரண்டு மணிநேரமாகவும், டெல்லி-குவாலியர் பயண நேரத்தை 2.5 மணிநேரமாக குறைக்கும் திட்டங்களையும் அவர் மேற்கோள் காட்டினார்.
மாசற்ற தூய்மையான போக்குவரத்து குறித்துப் பேசிய அவர், கட்டுமான உபகரணங்கள் மற்றும் போக்குவரத்துத் துறையில் எலெக்ட்ரிக் (Electric), ஹைட்ரஜன் (Hydrogen) மற்றும் மாற்று எரிபொருட்களின் பயன்பாடு அதிகரிக்கும் என்றார். இதன் மூலமாக, இந்தியாவின் ஆட்டோமொபைல் துறை அடுத்த ஐந்து ஆண்டுகளில் உலகின் முதல் இடத்தைப் பிடிக்கும் என்று கொஞ்சம் அதீத நம்பிக்கை உடன் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி பேட்டியளித்துள்ளார்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்திய ஆட்டோமொபைல் துறையின் தற்போதைய மதிப்பு ரூ.22 லட்சம் கோடி ஆகும். முதலிடத்தில் உள்ள அமெரிக்க ஆட்டோமொபைல் துறையின் மதிப்பு ரூ.78 லட்சம் கோடி ஆகும். இத்தகைய அமெரிக்காவை தான் இன்னும் 5 ஆண்டுகளில் இந்த விஷயத்தில் இந்தியா முந்தும் என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவிக்கிறார். இது கூட நடப்பதற்கு வாய்ப்புள்ளதே தவிர்த்து, இந்தியாவின் சிறிய விமான வழித்தடங்கள் மொத்தமாக இல்லாமல் போவதற்கு எந்த அளவிற்கு வாய்ப்புள்ளது என்பது உறுதியாக தெரியவில்லை. ஏனெனில், இன்றைய காலக்கட்டத்திலும் விமானங்களை ஆச்சிரியமாக பார்ப்போரும் இருக்கத்தான் செய்கின்றனர்.


Click it and Unblock the Notifications









