சூரியனை பற்றி ஆராய்வதற்காக தயாராகும் விண்கலம்- சிறப்புத் தகவல்கள்!
செவ்வாய் கிரகத்தையும், சந்திரன் கிரகத்தையும் ஆராய்ச்சி செய்வதற்காக ஆளில்லா விண்கலங்களை இஸ்ரோ மையம் வெற்றிகரமாக செலுத்தியிருக்கிறது. இதையடுத்து, சூரியனை பற்றி ஆராய்ச்சி செய்வதற்கான விசேஷ விண்கலத்தையும் தயார் செய்து வருகிறது.
இந்த விசேஷ விண்கலத்தை 2020ம் ஆண்டில் விண்ணி்ல செலுத்த திட்டமிட்டு இருப்பதாக இஸ்ரோ மையத்தின் இயக்குனர் மயில்சாமி அண்ணாதுரை தூத்துக்குடியில் நடந்த நிகழ்ச்சியில் உறுதிப்படுத்தியிருக்கிறார். இந்த நிலையில், சூரியனுக்கு அனுப்பப்படும் ஆளில்லா விண்கலத் திட்டம் குறித்த சிறப்புத் தகவல்களை தொடர்ந்து காணலாம்.

வெற்றி...
செவ்வாய் கிரகத்தை ஆராய்வதற்காக மங்கள்யான் விண்கலத்தையும், சந்திரன் கிரகத்தை பற்றி ஆராய்வதற்காக சந்திராயன் விண்கல திட்டங்களை முதல் முயற்சியிலேயே வெற்றிகரமாக செய்திருக்கிறது இஸ்ரோ.

சந்திராயன் - 2
சந்திரனை பற்றிய துல்லியமான ஆராச்சிக்காக சந்திராயன்- 2 திட்டத்திலும் இஸ்ரோ மூழ்கியிருக்கிறது. சந்திராயன் 2 திட்டத்தை ரஷ்ய விண்வெளி மையத்தின் துணையில்லாமலேயே சொந்தமாக நிறைவேற்ற இருக்கிறது இஸ்ரோ.

மெகா திட்டம்
மங்கள்யான், சந்திராயன் வெற்றிகளை ருசித்துவிட்ட இஸ்ரோ தற்போது சூரியனை பற்றி ஆராய்வதற்காக விசேஷ விண்கலத்தை ஏவும் முயற்சிகளில் தீவிரமாக இறங்கியிருக்கிறது. ஆதித்யா எல்-1 என்ற பெயரில் சூரியனை ஆராய்ச்சி செய்வதற்கான திட்டம் குறிப்பிடப்படுகிறது. இதற்கான செயற்கைகோள் மற்றும் ராக்கெட்டுகளை உருவாக்கும் பணிகள் மிக தீவிரமாக நடந்து வருகின்றன.

நோக்கம்
சூரியனின் வெளிப்பகுதியில் நிலவும் வெப்பநிலை, விண்வெளியின் வானிலை மாற்றங்கள் போன்றவை குறித்து ஆதித்யா எல்-1 செயற்கைகோள் மூலமாக ஆய்வுகள் மேற்கொள்ளப்படும். விண்வெளியில் நிலவும் வானிலை மாற்றங்களை முன்கூட்டியே தெரிந்துகொள்வதன் மூலமாக, வானில் சுற்றி வரும் நம் நாட்டு செயற்கைகோள்களை பாதுகாக்க வழிபிறக்கும்.

தொலைதொடர்பு துறைக்கு உதவும்
சூரியனிலிருந்து வெளிப்படும் கதிர்வீச்சுகளின் தன்மை மற்றும் அந்த வெப்ப கதிர்களால் தொலைதொடர்பு சாதனங்களுக்கும், சிக்னல்களுக்கும் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் ஆய்வுகள் செய்யப்பட உள்ளது. சூரிய கதிர்வீச்சுக்களால் காற்று மண்டலத்தில் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் ஆய்வு செய்யப்படும்.

சுற்று வட்டப்பாதை
பூமியிலிருந்து சூரியன் கிட்டத்தட்ட 15 கோடி கிமீ தொலைவில் உள்ளது. ஆனால், சூரியனை எந்நேரமும் ஆய்வு செய்வதற்கும், பாதிப்புகளை விலக்கிக் கொள்வதற்குமான சுற்று வட்டப்பாதையில் ஆதித்யா செயற்கைகோள் நிலைநிறுத்தப்படும்.

தொடர் கண்காணிப்பு
பூமியிலிருந்து 15 லட்சம் கிலோமீட்டர் தொலைவில் உள்ள சுற்று வட்டப்பாதையில் எல்1 என்ற புள்ளியில்தான் ஆதித்யா செயற்கைகோள் நிலைநிறுத்தப்பட உளளது. இதன்மூலமாக, சூரியனை தொடர்ந்து கண்காணிக்க வாய்ப்பு ஏற்படும்.

ராக்கெட் விபரம்
இந்தியாவின் வெற்றிகரமான பிஎஸ்எல்வி ராக்கெட்டின் விசேஷ மாடலான பிஎஸ்எல்வி எக்ஸ்எல் என்ற ராக்கெட்தான் ஆதித்யா செயற்கைகோளை விண்ணிற்கு எடுத்துச் செல்ல இருக்கிறது. இதுவரை 14 முறை வெற்றிகரமாக இந்த ராக்கெட் ஏவப்பட்டிருக்கிறது.

ஏவுதளம்
சென்னை அருகே ஸ்ரீஹரிகோட்டாவில் அமைந்திருக்கும் ராக்கெட் ஏவுதளத்தில் இருந்துதான் இந்த பி.எஸ்.எல்.வி.எக்ஸ்.எல் ராக்கெட் மூலம் ஆதித்யா-எல் 1 செயற்கை கோள் விண்ணில் செலுத்தப்பட உள்ளது.

எலைட் குரூப்
அமெரிக்கா, கனடா, ரஷ்யா, ஜப்பான், பிரான்ஸ், நெதர்லாந்து, ஜெர்மனி உள்ளிட்ட நாடுகள் சூரியனை பற்றி ஆராய்வதற்கான செயற்கைகோள்களை ஏவி இருக்கின்றன. இந்த வரிசையில் இந்தியாவும் அடுத்த சில ஆண்டுகளில் இடம்பெற உள்ளது.

பிஎஸ்எல்வி ராக்கெட்டை கண்டு அலறும் அமெரிக்க ராக்கெட் நிறுவனங்கள்!


Click it and Unblock the Notifications








