விமானம் கிளம்புவதற்கு முன் ஏன் 2 திரவங்களை பீய்ச்சி அடிக்கறாங்க தெரியுமா? லேட் ஆனாலும் இது நம்ம நல்லதுக்குதான்
விமானங்களை பற்றிய ஒவ்வொரு தகவலும் நம் அனைவருக்கும் மிகுந்த ஆச்சரியத்தை ஏற்படுக்க கூடியவை.
Recommended Video
இந்த வரிசையில், விமானங்கள் கிளம்புவதற்கு முன் ஏன் 2 திரவங்களை பீய்ச்சி அடிக்கின்றனர்? என்பதை இந்த செய்தியில் பார்க்கலாம்.

குளிர்காலங்களின்போது விமான நிலையங்களில் ஒரு பொதுவான காட்சியை நாம் அடிக்கடி காண முடியும். விமானங்களில் டீ-ஐசிங் (De-icing) செய்யப்படுவதுதான் அந்த பொதுவான காட்சி. டீ-ஐசிங் என்பது ஒரு மேற்பரப்பில் இருந்து பனியை அகற்றுவதாகும். விமானங்களில் பனி படிவதால், பல்வேறு பிரச்னைகள் ஏற்படலாம்.

எனவே விமானம் புறப்படுவதற்கு முன்பாக, விமான நிலையங்களில் வைத்து டீ-ஐசிங் செய்யப்படும். ஒரு சில சமயங்களில் விமானங்கள் புறப்பட தாமதம் ஆவதற்கு, இந்த டீ-ஐசிங் செயல்முறைகளும் மிக முக்கியமான காரணமாக உள்ளன. குறிப்பாக குளிர்காலங்களில் டீ-ஐசிங் செயல்முறைகள் காரணமாக விமானங்கள் புறப்படுவதில் அடிக்கடி தாமதம் ஏற்படலாம்.

ஆனால் அதற்காக நீங்கள் வருத்தப்பட வேண்டாம். ஏனெனில் நமது பாதுகாப்பிற்காகதான் விமானங்களில் டீ-ஐசிங் செயல்முறைகளை செய்கிறார்கள். விமானங்களில் பனி படிவதால் என்னென்ன பிரச்னைகள் ஏற்படும்? எதற்காக டீ-ஐசிங் செய்கிறார்கள்? விமானங்கள் எப்படி டீ-ஐசிங் செய்யப்படும்? என்ற உங்களுடைய சந்தேகங்களுக்கு எல்லாம் இந்த செய்தியில் பதில் வழங்கியுள்ளோம்.

விமானங்களில் பனி படிவதை நாம் ஒருபோதும் சாதாரணமாக எடுத்து கொள்ள முடியாது. இதனால்தான் டீ-ஐசிங் செய்கிறார்கள். பனி படிவதன் காரணமாக விமானங்களின் ஏரோடைனமிக் பண்புகள் மற்றும் செயல்திறன் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. விமானத்தின் சென்சார்கள் மற்றும் வெண்ட்களிலும் பனி அடைப்புகளை ஏற்படுத்தலாம்.

அத்துடன் பனி படிவதால், விமானத்தின் எடை அதிகரித்து விடும். பொதுவாக விமானத்தில் தேவையில்லாமல் எடையை ஏற்ற மாட்டார்கள் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. அப்படி இருக்கும்போது, பனி படர்வதால் எடை அதிகரிப்பது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாக இருக்கிறது. இதுதவிர விமானம் புறப்பட்ட பின்னர், பனிக்கட்டிகள் உடைந்தாலோ அல்லது உருகினாலோ கூட பிரச்னைகள் ஏற்படும்.

பனிக்கட்டிகள் உடைந்தோ அல்லது உருகியோ விமானத்தின் மற்ற பாகங்களை தாக்கினால் பெரும் ஆபத்து ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. எனவேதான் விமானங்கள் புறப்படுவதற்கு முன்பாக டீ-ஐசிங் செய்யப்படுவது இன்றியமையாத ஒன்றாக உள்ளது. விமானங்களை டீ-ஐசிங் செய்வதற்கு தேவையான உபகரணங்கள் விமான நிலையங்களில் வைக்கப்பட்டிருக்கும்.

விமானங்களை டீ-ஐசிங் செய்வதற்கு முன்னர், வடிகால் வசதிகள் உள்ள பொருத்தமான இடத்தில், அதனை நிறுத்தி விடுவார்கள். டீ-ஐசிங் செயல்முறைகளின்போது 2 திரவங்கள் பயன்படுத்தப்படும். அவற்றை விமானத்தின் மீது 'ஸ்பிரே' செய்வார்கள். முதலில் பயன்படுத்தப்படுவது டீ-ஐசிங் திரவம் ஆகும். இது விமானங்களின் திரட்சியாக படிந்துள்ள பனியை அகற்றும்.

இது பொதுவாக சூடான ''க்ளைகால்-வாட்டர் சொல்யூஷன்''-ஆக (Glycol-water Solution) இருக்கும். விமானத்தின் இறக்கைகள் மற்றும் உடற்பகுதி ஆகிய இடங்களில் இந்த திரவத்தை அதிக அழுத்தத்தில் பீய்ச்சி அடிப்பார்கள். இதற்கு பிறகு, மேற்கொண்டு பனி படிவதை தடுக்க இரண்டாவதாக ஒரு திரவம் பயன்படுத்தபடும். இந்த திரவம் தடிமனாக இருக்கும்.

இது பொதுவாக ''ப்ரொப்பலைன் க்ளைகால்''-ஆக (Propylene Glycol) இருக்கும். இது ''ஜெல்'' போன்று இருக்கும் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. விமானத்தின் இறக்கைகள் போன்ற பகுதிகளில் இந்த திரவம் தொடர்ந்து படிந்தே இருக்கும். விமானங்கள் தரையில் நிறுத்தப்பட்டிருக்கும்போது, மேற்கொண்டு பனி படிவதை இந்த திரவம் தடுக்கிறது.

ஆனால் குறிப்பிட்ட நேரத்திற்கு மட்டுமே பனி படிவதை அதனால் தடுக்க முடியும். எனவே நேர வரம்பை கடைபிடிப்பது மிகவும் அவசியமாகிறது. அதற்கேற்ற வகையில் திட்டமிட்டுதான், இந்த திரவங்களை பயன்படுத்துவார்கள். நாங்கள் ஏற்கனவே குறிப்பிட்டதை போல், விமானத்தின் இறக்கை உள்ளிட்ட பாகங்களில் இந்த திரவம் தொடர்ந்து படிந்திருக்கும்.

விமானம் புறப்பட்டவுடன் இந்த திரவம் சிதறி விடும். இது எந்த வகையிலும் விமானங்களின் செயல்திறனில் பாதிப்புகளை ஏற்படுத்தாது. தரையில் மட்டுமல்லாது, விமானம் பறந்து கொண்டிருக்கும்போதும் கூட, பனி படர்வதை தடுப்பதற்கான வசதிகள் பெரும்பாலான விமானங்களில் இருக்கின்றன என்பதும் இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.


Click it and Unblock the Notifications








