இந்தியாவின் பாதுகாப்புக்காக 'ஆகாய கண்' செயற்கைகோளை அனுப்பும் இஸ்ரோ!
நாட்டின் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணிகளுக்காக இஸ்ரோ தயாரித்துள்ள புதிய செயற்கைகோள் வரும் 22ந் தேதி விண்ணில் ஏவப்படுகிறது. இந்த புதிய செயற்கைகோளின் சிறப்பம்சங்களை இந்த செய்தியில் காணலாம்.

நாட்டின் பாதுகாப்பை மேம்படுத்துவதில் இந்திய விண்வெளி ஆய்வு மையம் முக்கிய பங்காற்றி வருகிறது. பாதுகாப்புத் துறைக்கு தேவையான தொழில்நுட்ப கட்டமைப்புகளில் இஸ்ரோவின் பங்கு அளப்பரயதாக இருந்து வருகிறது.

அந்த வகையில், நாட்டின் எல்லைகளை துல்லியமாக கண்காணிப்பதற்கான புதிய செயற்கைகோளை இஸ்ரோ தயாரித்துள்ளது. ரிசாட்-2பிஆர்1 என்ற பெயரில் இந்த புதிய செயற்கைகோள், வரும் 22ந் தேதி ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து பி.எஸ்.எல்.வி சி-46 ராக்கெட் மூலமாக விண்ணில் ஏவப்பட இருக்கிறது.

இந்த புதிய செயற்கைகோள் ராணுவத்திற்கு பக்கபலமாக இருக்கும். ஆகாயத்தில் இருந்தபடியே இந்தியாவின் எல்லைப்பகுதிகளை துல்லியமாக கண்காணிக்கும் என்பதால், இதனை 'ஆகாய கண்' செயற்கைகோள் என்று குறிப்பிடுகின்றனர்.

காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை நாட்டின் அனைத்து எல்லைப்பகுதிகளையும் இந்த செயற்கைகோள் மிக துல்லியமாக கண்காணித்து தகவல்களை அளிக்கும். மேலும், இந்திய பெருங்கடல் மற்றும் அரபிக்கடல் பகுதிகளில் எதிரி கப்பல்களின் நடமாட்டம், போர் விமானங்களின் ஊடுருவல் என எதிரிகளின் நடமாட்டத்தை துல்லியமாக கணித்து கூறும்.

இதுவரை ஏவப்பட்ட இதே ரக செயற்கைகோள்களை விட இது தொழில்நுட்பத்தில் மேம்படுத்தப்பட்ட அம்சங்களை பெற்றிருக்கிறது. இதில் இடம்பெற்றிருக்கும் ரிசாட் எக்ஸ்- பேண்ட் சிந்தெட்டிக் அபர்ச்சர் ரேடார் கருவி மூலமாக அனைத்து சீதோஷ்ண நிலைகளிலும் பூமியை துல்லியமாக படம் பிடிக்க முடியும்.

மேகக்கூட்டங்கள் இருந்தாலும் மிக துல்லியமாக பூமியை படம் பிடித்து தருவதுடன் பொருட்களை மிக அருகாமையில் படம் பிடிக்கும் வசதியையும் அளிக்கும். இதுதவிர, காலநிலை குறித்த ஆய்வுத் தரவுகளையும் இந்த செயற்கைகோள் வழங்கும்.

பாகிஸ்தான் எல்லையிலிருந்து இந்திய எல்லைக்குள் தீவிரவாதிகளின் நடமாட்டம் மற்றும் ஊடுருவலை கண்காணிக்கவும் இந்த செயற்கைகோளை பாதுகாப்புப் படையினர் பயன்படுத்த இருக்கின்றனர். அனைத்து சீதோஷ்ண நிலையிலும் தீவிரவாதிகள் ஊடுருவலை கண்காணிக்க இந்த செயற்கைகோள் உதவும்.

கடற்கொள்ளையர்களிடம் சிக்கும் கப்பல்களை கண்காணிக்கவும், சீனா மற்றும் பாகிஸ்தான் கடற்படை கப்பல்களின் நடமாட்டத்தை கண்காணிக்கவும் இந்த செயற்கைகோள் உதவும். மேலும், சர்ஜிக்கல் ஸ்டிரைக் போன்ற ராணுவ நடவடிக்கைகளின்போது இந்த செயற்கைகோள் முக்கிய பங்கு வகிக்கும்.

ஏற்கனவே விண்ணில் செலுத்தப்பட்ட ஆகாய கண் செயற்கைகோளைவிட இதன் ரேடார் உயர் துல்லிய படங்களை வேறுபட்ட தொழில்நுட்ப முறையில் வழங்கும். இதனால், நாட்டின் பாதுகாப்பு மேலும் வலுப்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications