சென்னை- பெங்களூர் இடையிலான புதிய எக்ஸ்பிரஸ் சாலை: 8 முக்கிய விஷயங்கள்!
சென்னை- பெங்களூர் எக்ஸ்பிரஸ் சாலை குறித்து தெரிந்து கொள்ள முக்கிய விஷயங்களை இந்த செய்தியில் காணலாம்.
சென்னை - பெங்களூர் இடையிலான போக்குவரத்து தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அலுவலக பணி, வர்த்தக விஷயமாக செல்வோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதன் காரணமாக, போக்குவரத்து கட்டமைப்பை விரிவாக்கும் அவசியம் ஏற்பட்டு இருக்கிறது.

இதனை கருத்தில்கொண்டு சென்னை- பெங்களூர் இடையே புதிய விரைவு சாலை அமைப்பதற்கு மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம் திட்டமிட்டது. அதன்படி, இந்த திட்டத்தை செயல்படுத்துவதற்கான முயற்சிகள் நடந்து வருகின்றன. இந்த நிலையில், இந்த திட்டத்தின் சிறப்புகளை இந்த செய்தியில் காணலாம்.

சென்னையிலிருந்து பெங்களூரை சாலை மார்க்கமாக அடைவதற்கு இப்போது மூன்று வழித்தடங்கள் இருக்கின்றன. அதில், சென்னையிலிருந்து வேலூர் - கிருஷ்ணகிரி- ஓசூர் வழியாக செல்லும் தேசிய நெடுஞ்சாலை எண்-7 தற்போது பிரதான போக்குவரத்து தடமாக இருக்கிறது. 372 கிமீ தொலைவுடைய இந்த தடத்தில் 6 முதல் 8 மணிநேரம் பயணிக்க வேண்டிருக்கிறது.

அதேபோன்று, சித்தூர்-கோலார் வழியாக செல்லும் தேசிய நெடுஞ்சாலை எண்4 வழியாக செல்லும்போது 7 முதல் 8 மணிநேரம் பிடிக்கும். இதில், சித்தூர் பகுதியில் இருவழித்தடமாக செல்வதால், விபத்து ஆபத்தும், போக்குவரத்து நெரிசலும் அதிகம் உள்ளது. மற்றொரு வழியானது கிழக்குதொடர்ச்சி மலை வழியாக செல்வதால், அதனை அதிகம் பயன்படுத்துவதில்லை.

இந்த சூழலில், சென்னை- பெங்களூர் இடையிலான பயண நேரத்தை வெகுவாக குறைக்கும் விதத்தில், புதிதாக எக்ஸ்பிரஸ் சாலை அமைக்க திட்டமிடப்பட்டு இருக்கிறது. இந்த சாலையானது, சென்னை எல்லைப்பகுதியாக இருக்கும் ஸ்ரீபெரும்புதூரில் துவங்கி, பெங்களூர் நகரின் எல்லைப்பகுதியில் உள்ள ஒசகோட்டை வரை அமைக்கப்பட இருக்கிறது.

ஸ்ரீபெரும்புதூர்- அரக்கோணம்-குடியாத்தம்- வி-கோட்டா- பலம்னேர்- மாலூர்- ஒசகோட்டை வழியாக இந்த புதிய எக்ஸ்பிரஸ் சாலையானது 250 கிமீ தூரத்திற்கு அமைக்கப்பட இருக்கிறது. இந்த சாலை திசைக்கு 3 வழித்தடங்கள் வீதம் 6 வழித்தட எக்ஸ்பிரஸ் சாலையாக அமைக்கப்படும். இந்த சாலை 90 மீட்டர் அகலமுடையதாக இருக்கும்.

இந்த சாலையில் மணிக்கு 120 கிமீ வேகம் வரை செல்வதற்கு வாகனங்கள் அனுமதிக்கப்படும். இந்த சாலையில் நாள் ஒன்றுக்கு ஒருவழியில் 45,000 முதல் 60,000 கார்கள் செல்வதற்கு கட்டமைப்பு வசதிகளை பெற்றிருக்கும்.

இந்த புதிய எக்ஸ்பிரஸ் சாலை அமைக்கப்பட்ட பின்னர், இந்த வழித்தடத்தில் சென்னை பெங்களூர் இடையில் பயண நேரம் 4 மணிநேரமாக குறையும் என்று தெரிவிக்கப்படுகிறது. இந்த திட்டத்தை செயல்படுத்துவதற்கான தீவிர முயற்சிகள் தொடர்ந்து நடந்து வருகின்றன. சென்னையிலிருந்து பெங்களூர் வழியாக மங்களூர் வரை இந்த சாலையை நீடிக்கும் திட்டமும் இருக்கிறது.

இந்த வழித்தடத்தில் பல்வேறு தொழிற்பேட்டைகள் மற்றும் வர்த்த மையங்களை ஒட்டி அமைக்கப்பட இருக்கிறது. இதனால், இரு மாநிலங்களுக்கு இடையிலான போக்குவரத்து மற்றும் பொருளாதார மேம்பாட்டிற்கும் இந்த சாலை உறுதுணையாக அமையும்.

வாலாஜாபேட்டை அருகில் உள்ள கீழ்வீராணம் மற்றும் பானவரம் பகுதிகளில் புதிய தொழிற்பேட்டை அமைவதற்கான சாத்தியக்கூறுகளும், இந்த வழியாக சென்னை- பெங்களுர் எக்ஸ்பிரஸ் சாலை அமைக்க ஜப்பானிய நிறுவனம் நடத்திய ஆய்வுகளும் இந்த பகுதிகளில் ரியல் எஸ்டேட் துறை நிறுவனங்களை ஈர்த்துள்ளன. ராணிபேட்டை- பொன்னப்பன்தாங்கல்- அரக்கோணம் இடையிலான பகுதிகளில் நில மதிப்பும் வெகுவாக உயர்ந்துள்ளன.
Recommended Video


சென்னை சுற்றுவட்டாரத்தில் உள்ள வாகன தயாரிப்பு நிறுவனங்களுக்கும், மறுபுறத்தில் பெங்களூர் எல்லையில் அமைந்துள்ள ஒசக்கோட்டை, நரசப்புரா, கோலார் வரையிலான பகுதிகளில் உள்ள வாகன நிறுவனங்கள் மற்றும் தொழில்நிறுவனங்களுக்கும் இந்த சாலை சிறப்பான போக்குவரத்தை வழங்கும்.

அதேநேரத்தில், சென்னை- பெங்களூர் இடையே ஏற்கனவே சிறப்பான கட்டமைப்பு வசதிகள் இருப்பதால், புதிய எக்ஸ்பிரஸ் சாலை தேவையில்லை என்று எதிர்ப்பு எழுந்துள்ளது. மேலும், இந்த புதிய எக்ஸ்பிரஸ் சாலைக்கு நிலம் வழங்குவோருக்கு முறையான இழப்பீட்டு தொகையை வழங்குவதற்கும் பல்வேறு தரப்பில் இருந்தும் கோரிக்கைகள் வலுப்பெற்று வருகின்றன.
Picture credit: Wiki Commons


Click it and Unblock the Notifications








