வருமான வரி ஏய்ப்பில் ஈடுபட்டதா ஹீரோ மோட்டோகார்ப்? பவன் முன்ஜால் வீடு உள்பட பல்வேறு இடங்களில் ஐடி ரெய்டு!
ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்துடன் தொடர்புடைய பல்வேறு இடங்களில் வருமான வரி துறை சோதனை நடைபெற்று வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

ஹீரோ மோட்டோகார்ப் (Hero MotoCorp) நிறுவனத்துடன் தொடர்புடைய வளாகங்களில், வருமான வரி துறையினர் (Income Tax Department) இன்று (மார்ச் 23) அதிரடியாக சோதனை நடத்தி வருகின்றனர். இன்று அதிகாலை முதலே இந்த சோதனைகள் நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகி கொண்டிருக்கின்றன.

ஹரியானா மாநிலம் குர்கானில் (Gurgaon) உள்ள ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் தலைவர் (Chairman) பவன் முன்ஜாலின் (Pawan Munjal) வீடு மற்றும் அலுவலகங்களிலும் வருமான வரி துறையினரின் சோதனை நடைபெற்று வருகிறது. ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் வரி ஏய்ப்பில் ஈடுபட்டதாக கிடைத்துள்ள தகவல்களின் அடிப்படையில் இந்த சோதனை நடைபெற்று வருவதாக வருமான வரி துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

வரிமான வரி ஏய்ப்பில் ஈடுபட்டதாக தகவல்கள் கிடைத்ததையடுத்து, ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் பண பரிவர்த்தனைகள் அனைத்தும் கண்காணிக்கப்பட்டு வந்தன. இந்த சூழலில் வருமான வரி துறையினர் இன்று அதிரடியாக சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். ஆட்டோமொபைல் துறையினர் மட்டுமல்லாது, அனைத்து தரப்பினர் மத்தியிலும் இந்த வருமான வரி சோதனைகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் உலகிலேயே மிகப்பெரிய இரு சக்கர வாகன உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றாக இருப்பதுதான் இதற்கு காரணம். இந்தியா மட்டுமல்லாது ஆசிய கண்டத்தின் பல்வேறு நாடுகளிலும் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் தனது இரு சக்கர வாகனங்களை விற்பனை செய்து வருகிறது. மேலும் ஆப்ரிக்கா, தெற்கு மற்றும் மத்திய அமெரிக்க சந்தைகளிலும், ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் இரு சக்கர வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

இந்தியாவின் இரு சக்கர வாகன செக்மெண்ட்டை எடுத்து கொண்டால், ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம், 50 சதவீதத்திற்கும் அதிகமான சந்தை பங்கை கொண்டுள்ளது. இந்த சூழலில்தான் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்திற்கு தொடர்புடைய அலுவலகங்கள் மற்றும் வீடுகளில் இன்று அதிகாலை முதல் வருமான வரி துறையினர் சோதனை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

குறிப்பாக ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் தலைவர், நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை செயல் அதிகாரியாக இருந்து வரும் பவன் முன்ஜாலுக்கு தொடர்புடைய பல்வேறு இடங்களில் வருமான வரி துறை சோதனை நடைபெற்று வருவது பரபரப்பை கூட்டியுள்ளது. ஹரியானாவில் உள்ள குர்கான் மட்டுமல்லாது, டெல்லி உள்பட பல்வேறு இடங்களிலும் வருமான வரி துறை அதிகாரிகளின் சோதனைகள் நடைபெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த செய்தி எழுதப்பட்டு கொண்டிருந்த வரை, இந்த வருமான வரி துறை சோதனைகள் தொடர்பாக ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் எந்தவொரு அறிக்கையையும் வெளியிடவில்லை. இருப்பினும் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிக்கையை விரைவில் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் வரி ஏய்ப்பில் ஈடுபட்டதற்கான ஆவணங்கள் எதுவும் சிக்குகிறதா? என வருமான வரி துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் வரி ஏய்ப்பில் ஈடுபட்டதற்கான ஆவணங்கள் சிக்கியதாகவும் தற்போது வரை எந்தவிதமான தகவல்களும் வெளியாகவில்லை என்பதும் இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.


Click it and Unblock the Notifications








