குடிபோதையில் வண்டி ஓட்டினாலும், போலீஸிடம் இருந்து தப்பிக்க செம ஐடியா... சொன்னது ஐபிஎஸ் அதிகாரி!!
குடிபோதையில் வாகனம் ஓட்டினாலும், போலீஸிடம் இருந்து தப்பிக்க ஐபிஎஸ் அதிகாரி ஒருவர் செம ஐடியா கொடுத்துள்ளார். ஆனால் அது எதற்காக? என்பதுதான் ஹைலைட்டே.

உலகிலேயே சாலை விபத்துக்களால் அதிக உயிர்களை பறிகொடுத்து வரும் நாடுகளில் ஒன்றாக இந்தியா உள்ளது. இந்தியாவில் சாலை பாதுகாப்பு மிக மோசமான நிலையில் இருப்பதால், ஆண்டுக்கு சுமார் 1.50 லட்சம் பேர் விபத்துக்களில் சிக்கி உயிரிழந்து வருகின்றனர். வாகன ஓட்டிகள் போக்குவரத்து விதிமுறைகளை மீறுவதே இதற்கு முக்கியமான காரணம்.

மொபைல்போனில் பேசியபடி வாகனம் ஓட்டுதல், அதிவேகத்தில் வாகனங்களை இயக்குதல், ஹெல்மெட் அணியாமல் இரு சக்கர வாகனங்களில் பயணம் செய்தல் என போக்குவரத்து விதிமுறைகளை இந்திய வாகன ஓட்டிகள் சகட்டு மேனிக்கு மீறி வருகின்றனர். இதன் காரணமாக அவர்களுக்கு மட்டுமின்றி மற்றவர்களுக்கும் பாதிப்பு ஏற்படுகிறது.

இந்தியர்கள் செய்யும் மற்றொரு பொதுவான தவறு குடிபோதையில் வாகனங்களை இயக்குவதுதான். இந்த தவறு காரணமாகவே ஏராளமான சாலை விபத்துக்கள் நடைபெறுகின்றன. எனவே மது அருந்தி விட்டு வாகனங்களை இயக்க கூடாது என வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அத்துடன் அபராத தொகையும் விதிக்கப்படுகிறது.

இப்படிப்பட்ட சூழலில், குடிபோதையில் வாகனங்களை இயக்கினாலும், போலீசார் விதிக்கும் அபராதங்களில் இருந்து தப்பிக்க, ஐபிஎஸ் அதிகாரி ஒருவரே வாகன ஓட்டிகளுக்கு ஐடியா கொடுத்துள்ளார்!!! அவசரப்பட்டு அவரை தவறாக நினைத்து விட வேண்டாம். வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காகவே அவர் இதனை செய்துள்ளார்.

ஒட்டுமொத்த உலகையே தற்போது கொரோனா வைரஸ் ஆட்டி படைத்து வருகிறது. சீனாவில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் தற்போது சுமார் 120 நாடுகளை தாக்கியுள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பால் சுமார் 4 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். 1.20 லட்சத்திற்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கொரோனா வைரஸ் பீதி இந்தியாவையும் விட்டு வைக்கவில்லை. கேரளா, கர்நாடகா உள்பட இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும் கொரோனா வைரஸால் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க மத்திய, மாநில அரசுகள் சார்பில், தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்த சூழலில் கொரோனா வைரஸை வைத்துதான், மது அருந்தி விட்டு வாகனங்களை இயக்க கூடாது என்ற விழிப்புணர்வு, பங்கஜ் நெயின் என்ற ஐபிஎஸ் அதிகாரி விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளார். அவரது டிவிட்டர் பக்கத்தில், நேற்று (மார்ச் 11) டிவிட் ஒன்று செய்யப்பட்டிருந்தது. இதில், ''இந்த வழியை பின்பற்றினால், உங்களால் ப்ரீத் அனலைசர் டெஸ்ட்டையும், அபராதத்தையும் தவிர்க்க முடியும்.

ஆனால் விபத்தை தவிர்க்க முடியாது. எனவே குடிபோதையில் வாகனம் ஓட்ட வேண்டாம். இது உங்களுக்கும், மற்றவர்களுக்கும் ஆபத்தை ஏற்படுத்தும்'' என கூறப்பட்டுள்ளது. இதனுடன் ப்ரீத் அனலைசர் டெஸ்ட்டில் இருந்து தப்புவதற்காக, எனக்கு கொரோனா வைரஸ் உள்ளது என காரில் ஒருவர் எழுதி ஒட்டியிருப்பது போன்ற புகைப்படமும் பதிவேற்றப்பட்டுள்ளது.

மிகவும் வித்தியாசமாக உள்ள இந்த டிவிட்டை நெட்டிசன்கள் தற்போது சமூக வலை தளங்களில் வைரலாக பரப்பி வருகின்றனர். அந்த டிவிட்டை நீங்கள் கீழே காணலாம். சமூக வலை தளங்கள் வாயிலாக சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வுகளை வாகன ஓட்டிகளுக்கு பங்கஜ் நெய்ன் ஐபிஎஸ் தொடர்ச்சியாக ஏற்படுத்தி வருகிறார் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டும் பழக்கம் இருந்தால், அதனை இன்றோடு விட்டு விடுங்கள். இதன் மூலம் அபராதங்களில் இருந்து மட்டுமல்லாது, சாலை விபத்துக்களில் இருந்து தப்பிக்கலாம். மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டுவது என்பது கொரோனா வைரஸை காட்டிலும் ஆபத்தானது என்பதை வாகன ஓட்டிகள் அனைவரும் உணர வேண்டும்.


Click it and Unblock the Notifications








