ஜூலை 31க்கு அப்புறம் எலெக்ட்ரிக் டூ-வீலருக்கு கிடைக்கும் 10 ஆயிரம் ரூபா மானியம் கிடைக்காதா? என்ன நடக்க போகுதோ!
மின்சார வாகனங்களின் பயன்பாட்டை ஊக்குவிக்கும் விதமாக மத்திய அரசாங்கத்தால் அறிமுகம் செய்யப்பட்ட ஓர் திட்டமே 'எலக்ட்ரிக் மொபிலிட்டி புரமோஷன் திட்டம் (Electric Mobility Promotion Scheme) 2024'. இது வருகின்ற ஜூலை 31 ஆம் தேதி உடன் முடிவடைய இருக்கின்றது. ஏப்ரல் மாதத்தில் இந்த திட்டத்திற்காக சுமார் ரூ. 500 கோடியை மத்திய அரசாங்கம் ஒதுக்கியது குறிப்பிடத்தகுந்தது. நாட்டில் மின்சார வாகன உற்பத்தி மற்றும் மின்சார வாகனங்களுக்கான அடிப்படை கட்டமைப்பு வசதிகளை உருவாக்குவதும் இந்த திட்டத்தின் நோக்கம் ஆகும்.
மிக முக்கியமாக 3 லட்சத்து 72 ஆயிரத்து 215 வாகனங்கள் பயன்பெறும் நோக்கிலேயே இந்த திட்டத்தை அரசாங்கம் அறிமுகப்படுத்தியது. இத்தகைய திட்டமே வெகு விரைவில் இறுதிக்கு வர இருக்கின்றது. இந்த திட்டம் இறுதி கட்டத்தை எட்டியிருக்கின்ற அதேவேளையில் காலக்கெடுவிற்கு முன்னர் நிதி தீர்ந்துவிட்டாலும் அந்த திட்டம் ஜூலை 31க்கு முன்னாடியே நிறுத்தப்படும் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

கனரக தொழில்துறை அமைச்சகமும் இதையே குறிப்பிட்டுள்ளது. மேலும், முதலில் வரும் மானிய விண்ணப்பங்களுக்கே முன்னுரிமை அளிக்கப்பட இருக்கின்றது. அதேநேரத்தில், இந்தச் சலுகைக்கு தகுதிபெற அந்த குறிப்பிட்ட மின்சார வாகனம், திட்டம் செல்லுபடியாகும் காலத்திற்குள் தயாரிக்கப்பட்டு பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும் என்பது முக்கியமாகும்.
மின்சார இரண்டு சக்கர வாகனங்கள் மற்றும் மூன்று சக்கர வாகனங்களுக்கு நிதி தீர்ந்து போகும் வரை அல்லது நிர்ணயிக்கப்பட்ட இலக்கை அடையும் வரை மானியம் வழங்கப்படும் என தெரிகின்றது. ஆனால், முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையிலேயே உரிமைக் கோரல்கள் செயல்படுத்தப்பட உள்ளது.
மத்திய அரசாங்கம் காற்றை மிகப் பெரிய அளவில் மாசுப்படுத்தும் பெட்ரோல் மற்றும் டீசல் வாகனங்களுக்கு மாற்றாகவே மின்சார வாகனத்தை பார்க்கின்றது. மேலும், இவை சுற்றுச்சூழலுக்கு பூஜ்ஜியம் என்கிற அளவிலேயே மாசை ஏற்படுத்தும் என்றும் நம்பப்படுகின்றது. இதன் அடிப்படையிலேயே அவற்றின் பயன்பாட்டை அரசாங்கங்கள் ஊக்குவித்துக் கொண்டிருக்கின்றன.
மத்திய மற்றும் மாநில அரசுகள் என தனிதனியாக மின்சார வாகன பயன்பாட்டை ஊக்குவிக்கும் பொருட்டு சிறப்பு சலுகைகளை வழங்கிக் கொண்டிருக்கின்றன. வரி தள்ளுபடி மற்றும் மானியம் உள்ளிட்ட சலுகைகளே வழங்கப்பட்டு வருகின்றன. இதுதவிர, மின்சார வாகன உற்பத்தியை ஊக்குவிக்கின்ற வகையிலான திட்டங்களை அரசுகள் செயல்படுத்தி வருகின்றன.
அந்தவகையில், சமீபத்திய மானிய அறிவிப்பின்போது மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், 25 விதமான மினரல்களுக்கு இந்தியாவில் சுங்க வரியை ரத்து செய்தும், இரண்டு மினரல்களுக்கு சுங்க வரியை குறைத்திருப்பதாகவும் அறிவித்தார். இந்த அறிவிப்பால் மின்சார வாகனங்களுக்கான பேட்டரி உற்பத்தியில் முக்கிய பங்கினை வகிக்கும் லித்தியம் அயன்-க்கு வசூலிக்கப்படும் அடிப்படை சுங்க வரி முழுமையாக ரத்து செய்யப்பட்டு உள்ளது.
இந்தியா லித்தியம் அயன் கனிமத்திற்கு பெரும்பாலும் வெளிநாடுகளையே நம்பி இருக்கின்றது. அவ்வாறு வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் லித்தியன் அயன் கனிமத்திற்கு அடிப்படை சுங்க கட்டணமாக 15 சதவீதமும், ஐ-ஜிஎஸ்டி என்கிற பெயரில் 18 சதவீதமும், சமூக நல சார்ஜ் என்ற போர்வையில் 10 சதவீதமும் வரிகள் வசூலிக்கப்படுகின்றன.
இதுதவிர, கூடுதலாக லேண்டிங் சார்ஜாக 1 சதவீதமும் வரி வசூல் செய்யப்படுகின்றது. ஆகவே, 100 ரூபாய் மதிப்புள்ள லித்தியன் அயன்-ஐ நாட்டில் இறக்குமதி செய்ய வேண்டும் அதற்கு வரியாக மட்டுமே 49 ரூபாய் வரை செலுத்த வேண்டியுள்ளது. இந்த நிலையிலேயே அடிப்படை சுங்க வரி முழுமையாக ரத்து செய்யப்பட்டு இருக்கின்றது. இதன் வாயிலாக பேட்டரி பேக்கின் விலை கணிசமான அளவில் குறையும் சூழல் உருவாகி இருக்கின்றது.
இதேபோல், விரைவில் தற்போதைய மின்சார வாகன ஊக்குவிப்பு திட்டம் நிறைவடைந்த பின்னர் அதை புதுப்பித்து புதிய திட்டமாக அரசு அறிவிக்கும் என நம்பப்படுகின்றது. இதுகுறித்த அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என்பதே பலரின் எதிர்பார்ப்பாக உள்ளது. மின்சார வாகன பிரியர்கள் மட்டுமல்ல மின்சார வாகன உற்பத்தியாளர்களின் எதிர்பார்ப்பும் இதுவாகவே உள்ளது. சமீபத்திய மத்திய பட்ஜெட் தாக்கலின்போது வாகனத்துறைக்கான அறிவிப்புகள் பெரிய அளவில் வெளியிடப்படவில்லை என்பது கவனிக்கத்தகுந்தது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: மின்சார இரண்டு சக்கர வாகனங்களுக்கு ரூ. 10 ஆயிரம் வரையிலும், 3 சக்கர மின்சார வாகனங்களுக்கு ரூ. 50 ஆயிரம் வரையிலும் ஊக்கத் தொகை வழங்கப்பட்டு வருகின்றது என்பது குறிப்பிடத்தகுந்தது. இந்த திட்டமே ஜூலை 31 உடன் நிறைவடைய இருக்கின்றது. எனவே, இந்த திட்டத்தை அரசு புதுப்பித்து அறிமுகம் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
மின்சார வாகனங்களை அதிக அளவில் ஏற்றுக்கொள்வதன் மூலம் கார்பன் வெளியேற்றத்தை மிகப் பெரிய குறைக்க முடியும் நம்பப்படுகின்றது. இதன் அடிப்படையிலேயே இந்தியா தன்னுடைய முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. மின்சார வாகன ஊக்குவிப்பு, சிஎன்ஜி வாகன ஊக்குவிப்பு மற்றும் ஹைபிரிட் வகை வாகனங்களை ஊக்குவித்தல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.


Click it and Unblock the Notifications








